படம்: நா: தங்கரத்தினம்
சென்னை: 14-வது ஆடவருக்கான ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் சென்னை மற்றும் மதுரையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் 4-வது நாளான நேற்று மதுரையில் ‘ஏ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஜெர்மனி, அயர்லாந்துடன் மோதியது. இதில் ஜெர்மனி 5-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
அந்த அணி சார்பில் ஜோனாஸ் ஜெர்சம் 2 கோல்கள் (4 மற்றும் 50-வது நிமிடங்கள்) அடித்து அசத்தினார். இந்த இரு கோல்களையும் அவர், பீல்டு கோலாக அடித்திருந்தார். கேப்டன் பால் கிளாண்டர் (34-வது நிமிடம், பெனால்டி கார்னர்), லூக்காஸ் கோஸல் (52-வது நிமிடம், பெனால்டி ஸ்டிரோக்), கிறிஸ்டியன் பிரான்ஸ் (53-வது நிமிடம், பெனால்டி கார்னர்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
ஜெர்மனி அணிக்கு இது ஹாட்ரிக் வெற்றியாக அமைந்தது. அந்த அணி தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை 4-0 என்ற கோல் கணக்கிலும், 2-வது ஆட்டத்தில் கனடாவை 7-0 என்ற கோல் கணக்கிலும் வீழ்த்தியிருந்தது. லீக் சுற்றின் முடிவில் ஜெர்மனி அணி தனது பிரிவில் 3 வெற்றிகளுடன் 9 புள்ளிகளை குவித்து முதலிடம் பிடித்து கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.
‘ஏ’ பிரிவில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - கனடா அணிகள் மோதின. இதில் தென் ஆப்பிரிக்கா 9-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணி சார்பில் ஜெய்டன் ப்ரூக்கர் 4 கோல்கள் (8, 14, 36 மற்றும் 50-வது நிமிடங்கள்) அடித்து அசத்தினார். பிரெட் ஹார்ன் (22-வது நிமிடம்), சியான் மார்ட் (25-வது நிமிடம்), கேப்டன் டேனியல் நியூஹாஃப் (38-வது நிமிடம்), ராஸ் மோன்ட்கோமெரி (60-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர்.
தென் ஆப்பிரிக்க அணிக்கு இது 2-வது வெற்றியாக அமைந்தது. 3 ஆட்டங்களில் விளையாடி உள்ள தென் ஆப்பிரிக்க அணி 2 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று தனது பிரிவில் 2-வது இடத்தை பிடித்துள்ளது.
மழையால் பாதிப்பு: சென்னை எழும்பூர் மேயர் ராதா கிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டரங்கில் ‘சி’ பிரிவில் இடம் பெற்றிருந்த ஜப்பான் - நியூஸிலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் 45-வது நிமிடத்தில் நியூஸிலாந்து 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்த நிலையில் கனமழை காரணமாக ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது. மழை நின்ற பின்னர் ஆட்டம் தொடர்ந்த நிலையில் நியூஸிலாந்து அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்தியா இன்று மோதல்: ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் சிலி அணிக்கு எதிராக 7-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றிருந்தது. தொடர்ந்து நடைபெற்ற 2-வது லீக் ஆட்டத்தில் இந்திய அணி 17-0 என்ற கோல் கணக்கில் ஓமன் அணியை பந்தாடியது.
இந்த இரு வெற்றிகளின் மூலம் இந்திய அணி 6 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இன்று (2-ம் தேதி) சுவிட்சர்லாந்துடன் மோதுகிறது. இந்த ஆட்டம் இரவு 8 மணிக்கு மதுரையில் நடைபெறுகிறது. சுவிட்சர்லாந்து அணியும் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று 6 புள்ளிகளை பெற்றுள்ளது. எனினும் கோல்கள் வித்தியாசத்தின் அடிப்படையில் இந்திய அணி தற்போதைக்கு முதலிடத்தில் உள்ளது.
இன்றைய ஆட்டம் இரு அணிகளுக்குமே முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி கால் இறுதி சுற்றுக்கு நேரடியாக முன்னேறும். சுவிட்சர்லாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் ஓமன் அணியை 4-0 என்ற கோல் கணக்கில் வென்றிருந்தது. 2-வது ஆட்டத்தில் சிலியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியிருந்தது.