க்ரைம்

சென்னை: ஐபிஎல் டிக்கெட்டுகளை கள்ளச் சந்தையில் விற்ற 24 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை திருவல்லிக்கேணி பகுதியில் கள்ள சந்தையில் விற்பனை செய்தது தொடர்பாக 18 வழக்குகள் பதிவு செய்துள்ள போலீஸார், 24 பேரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 83 டிக்கெட்டுகள் மற்றும் ரூ.18,000-ஐ பறிமுதல் செய்துள்ளனர்.

இது தொடர்பாக காவல் துறை தரப்பில் வெளியிட்ட தகவல்: சென்னை, சேப்பாக்கம், எம்.ஏ.சிதம்பரம் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று (மார்ச் 26) சென்னை சூப்பர் கிங்ஸ்ஸ் மற்றும் குஜராத் டைகர்ஸ் அணிகளுக்கிடையே ஐபிஎல் டி-20 கிரிக்கெட் போட்டி இரவு ஆட்டமாக நடைபெற்றது. மேற்படி கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் (Black Market) சட்ட விரோதமாக விற்பனை செய்பவர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டார்.

அதன்பேரில், உயர் அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கண்காணித்து வந்தனர். திருவல்லிக்கேணி (D-1) காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் நேற்று (மார்ச் 26) சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளான பட்டாபிராம் கேட், வாலாஜா சாலை, பெல்ஸ் ரோடு, வாலாஜா ரோடு சந்திப்பு, விக்டோரியா ஹாஸ்டல் சாலை சந்திப்பு, சேப்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் ஆகிய இடங்களில் தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது அங்கு சட்ட விரோதமாக கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் (Black Market) அதிக விலைக்கு விற்பனை செய்தது தொடர்பாக 18 வழக்குகள் பதிவு செய்து, 24 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கள்ள சந்தையில் விற்பனை செய்ய வைத்திருந்த ரூ.2,19,112 மதிப்புள்ள 83 டிக்கெட்டுகள் மற்றும் பணம் ரூ.18,000 பறிமுதல் செய்யப்பட்டது. மேற்படி கைது செய்யப்பட்ட 24 நபர்கள் மீதும் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT