கோப்புப்படம்
சென்னை: நாடு முழுவதும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.29 என உயர்ந்துள்ளது. இந்த விலையேற்றம் இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல வணிகள் சிலிண்டர் விலையும் உயர்ந்துள்ளது.
மேற்காசிய போர் காரணமாக உலக நாடுகளுக்கு தேவையான எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல், டீசல், எல்பிஜி எரிவாயு உள்ளிட்டவற்றின் விலை உயர்ந்துள்ளது. இவை நேரடி தாக்கம் என்றால் பல்வேறு பொருட்களின் விலை உயர்வினால் உலக மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய சூழலில் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. இதனை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
அதன்படி வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடையுள்ள மானியம் இல்லாத சிலிண்டரின் விலை சிலிண்டருக்கு ரூ.29 உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ரூ.928.50-க்கு விற்பனை செய்யப்பட்ட வீட்டு உபயோக சிலிண்டரின் விலை இன்று முதல் ரூ.957.50-க்கு விற்பனை செய்யப்படும். கடைசியாக கடந்த மார்ச் மாதம் வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.60 என உயர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதேபோல வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.46 உயர்ந்துள்ளது. சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டர் ரூ.3,283 என தற்போது விற்பனை ஆகிறது. கடந்த மே மாதம் ரூ.990.50, ஏப்ரல் மாதம் ரூ.203, மார்ச் மாதம் ரூ.144 என வர்த்தக சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டது.
கடந்த மார்ச் மாதம் தேசிய அளவில் சிலிண்டர் விநியோகம் பாதிக்கப்பட்டது. இதனால் மக்கள் தங்களுக்கு தேவையான எல்பிஜி எரிவாயு சிலிண்டர்களை பெற முடியாமல் தவித்தனர். இந்த சூழலில் அந்த நிலைமை படிப்படியாக சீரானது. இப்போது சிலிண்டர் விலை உயர்வு மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலையும் ஏற்கெனவே ஏற்றம் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.