5 லட்சம் இந்தியர்களுக்கு அமெரிக்கக் குடியுரிமை; முஸ்லிம்களுக்கான தடை நீக்கம்; ஆண்டுக்கு 50 ஆயிரம் அகதிகள் ஏற்பு: ஜோ பைடன் திட்டம்

By பிடிஐ

அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன், முறையான ஆவணங்கள் இல்லாமல் இருக்கும் 1.10 கோடி புலம் பெயர்ந்த மக்களுக்குக் குடியுரிமை வழங்கத் திட்டமிட்டுள்ளார். இதில் 5 லட்சம் இந்தியர்களுக்குக் குடியுரிமை வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.

அது மட்டுமல்லாமல் ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 50 ஆயிரம் அகதிகளை அமெரிக்காவுக்குள் அனுமதித்துத் தேவையான உதவிகளை வழங்கவும் ஜோ பைடன் தலைமையில் அமையும் அரசு திட்டமிட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன், துணை அதிபர் பதவிக்குப் போட்டியிட்ட செனட்டர் கமலா ஹாரிஸ் இருவரும் வெற்றி பெற்றுள்ளனர். அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் ஜனவரி மாதம் பொறுப்பேற்கிறார்.

இதில் ஜோ பைடன் தனது தேர்தல் பிரச்சாரங்களின்போது, தன்னுடைய தலைமையில் ஆட்சி அமைந்தால் குடியேற்றத் திட்டங்களில் செய்யப்படும் சீர்திருத்தம், குடியுரிமை வழங்குதல் ஆகியவற்றில் வாக்குறுதிகளை, கொள்கை விவரங்களை அளித்திருந்தார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன், நாடாளுமன்றத்தின் துணையுடன் குடியேற்றச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து நவீனமாக்கப்படும். குறிப்பாக முறையான ஆவணங்கள் இல்லாமல் இருக்கும் 1.10 கோடி பேர் தங்கள் குடும்பத்தாருடன் இணையும் வகையில் குடியுரிமை வழங்கப்படும். இதில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு அமெரிக்கக் குடியுரிமை வழங்கப்படும்.

அமெரிக்கக் குடியேற்ற முறையின் முக்கிய நோக்கமே குடும்ப அடிப்படையிலான குடியேற்றம்தான். அதைப் பராமரிக்கும் வகையில் குடும்பத்துடன் குடியேற்றத்துக்கு ஆதரவு அளிக்கப்படும்.

ஜனநாயகக் கட்சி ஆட்சிக்கு வந்தால், அமெரிக்கா சார்பில் உலக அளவில் அகதிகளை ஏற்றுக்கொள்ளும் அளவு அதிகரிக்கப்படும். ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 50 ஆயிரம் அகதிகள் அமெரிக்காவுக்குள் அனுமதிக்கப்பட்டு, படிப்படியாக 1.25 லட்சம் அகதிகள் ஆண்டுக்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆண்டுக்குக் குறைந்தபட்சம் 95 ஆயிரம் அகதிகளை ஏற்கும் வகையில் நாடாளுமன்றத்தில் அனுமதி கோரப்படும்.

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக வந்து தங்கி, வேலை செய்துவரும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்கள் (ட்ரீமர்ஸ்) கவலைகள் நீக்கப்பட்டு, அவர்களுக்குச் சட்டபூர்வ அனுமதி வழங்கப்பட்டு, அவர்கள் குடும்பத்தாருடன் இணைய வழி செய்யப்படும். இதற்காக டிஏசிஏ சட்டம் அதாவது குழந்தைப் பருவ வருகைக்கான ஒத்திவைப்பு நடவடிக்கை திட்டம் தீவிரமாகச் செயல்படுத்தப்படும்.

வேலை பார்க்கும் நிறுவனங்களில் அதிகாரிகள் ரெய்டு செய்து, அகதிகளைக் கண்டுபிடிக்கும் முறை ரத்து செய்யப்படும்.

வேலை அடிப்படையிலான விசாக்கள் ஹெச்1பி விசா வழங்குவது அதிகரிக்கப்படும், க்ரீன் கார்டுகள் போன்றவை மூலம் சட்டபூர்வமாக அமெரிக்காவில் தங்கி வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் பணியாற்ற வகை செய்யப்படும்.

அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கொண்டு வந்த முஸ்லிம்களுக்குத் தடை உத்தரவு நீக்கப்படும். ஈரான், சிரியா உள்ளிட்ட சில முஸ்லிம் நாடுகளில் இருந்து முஸ்லிம்கள் அமெரிக்காவுக்குள் வரத் தடை விதிக்கப்பட்டிருந்து.

அந்தத் தடை அதிபராகப் பதவியேற்ற முதல் நாளே நீக்கப்படும். எல்லைப் பகுதியில் நீடிக்கும் மனிதநேயப் பிரச்சினைகளுக்கும், குழப்பங்களுக்கும் விரைவில் தீர்வு காணப்படும்''.

இவ்வாறு ஜோ பைடனின் பிரச்சார அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

30 mins ago

வலைஞர் பக்கம்

50 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்