கோவிட் - 19 அச்சுறுத்தல் எதிரொலி: ஆஸ்திரேலியாவில் கூட்டம் கூட தடைவிதிப்பு

By செய்திப்பிரிவு

கோவிட் - 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஆஸ்திரேலியாவில் கூட்டம் கூடுவதற்கு தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் பரவத் தொடங்கிய கோவிட் - 19 வைரஸ் காய்ச்சல், தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் காய்ச்சலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர். ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.

இதன் காரணமாக, கோவிட் - 19 வைரஸை ‘உலகளாவிய நோய் தொற்று' என உலக சுகாதார நிறுவனம் அண்மையில் அறிவித்தது.

இந்த வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு நாடுகளும் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், ஆஸ்திரேலியாவில் மக்கள் கூட்டமாக கூடுவதற்கு நேற்று தடை விதிக்கப்பட்டது.

இதுகுறித்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் நேற்று மெல்போனில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கோவிட் - 19 வைரஸ் வேகமாக பரவுவதை தடுப்பதற்காகவே இந்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி, ஓரிடத்தில் 500 பேருக்கு மேல் கூடுவது என்பது சட்ட விதிமீறல் எனக் கருதப்பட்டு அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வைரஸ் பரவுவது குறையத் தொடங்கியவுடன் இந்தக் கட்டுப்பாடு படிப்படியாக தளர்த்தப்படும்.

ஆஸ்திரேலிய மக்கள் வெளிநாடுகளுக்கு செல்வது குறித்து பரிசீலிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். மிகவும் அத்தியாவசியமாக இருந்தால் ஒழிய, வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

ஆஸ்திரேலியாவில் இதுவரை கோவிட் - 19 வைரஸ் காய்ச்சலுக்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர். 196 பேர் இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அமைச்சருக்கு வைரஸ் பாதிப்பு

ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டானுக்கும் கோவிட் - 19 வைரஸ் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் அமெரிக்கா சென்ற அவர், அந்நாட்டு அதிபரின் ஆலோசகர் இவான்கா ட்ரம்பை சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் ஆஸ்திரேலியா திரும்பிய அவருக்கு கோவிட் - 19 வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, குயின்ஸ்லேண்டில் உள்ள மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

எவரெஸ்ட்டில் ஏற தடை

இதனிடையே, கோவிட் - 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக எவரெஸ்ட் சிகரம் உள்ளிட்ட மலை சிகரங்களில் ஏறுவதற்கு நேபாள அரசு தடை விதித்துள்ளது. இதனால், மலை சிகரங்கள் ஏறுவதற்காக வரும் வெளிநாட்டினரின் எண்ணிக்கை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், சுற்றுலா விசா வழங்குவதையும் அந்நாட்டு அரசு நிறுத்தி வைத்துள்ளது.

ஜப்பானில் அவசரநிலை?

இந்நிலையில், கோவிட் - 19 வைரஸ் வேகமாக பரவினால் ஜப்பானில் அவசர நிலையை பிரகடனப்படுத்தும் அதிகாரத்தை அந்நாட்டு பிரதமருக்கு வழங்கும் மசோதா நேற்று நிறைவேற்றப்பட்டது. இதனால் அந்நாட்டில் எப்போது வேண்டுமானாலும் அவசர நிலை பிறப்பிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. ஜப்பானில் இதுவரை 600-க்கும் மேற்பட்டோர் கோவிட் - 19 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். - பிடிஐ

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

20 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

50 mins ago

இந்தியா

59 mins ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

மேலும்