உலக மலைகளில் ஏறுபவர்கள் ஆங்காங்கே தங்குவதற்காகத் தொங்கும் கட்டில்களை அமைத்துக்கொள்வார்கள். இதில் மேற்கூரை இருக்காது. இந்த யோசனையைப் பயன்படுத்தி பிரிட்டனில் 2 தங்கும் விடுதிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. 300 அடி உயர மலையில் தொங்கிக்கொண்டிருக்கின்றன இரண்டு கட்டில்கள். கீழே ஆர்ப்பரிக்கும் கடல். கண்களுக்கு எட்டிய தூரம் வரை மனித நடமாட்டமே இருக்காது. மலையின் மேல் பகுதியில் விடுதியில் வேலை செய்பவர்கள் இருக்கிறார்கள். இரவில் மெதுவாகத் தொங்கிக் கொண்டிருக்கும் கட்டிலில் இறக்கிவிடுவார்கள். முதல் சில நிமிடங்களுக்குத் திகிலாக இருக்கும். பிறகு பரவச நிலை ஏற்பட்டுவிடும். மேலே இருந்து உணவும் காபியும் கட்டிலுக்கு வரும். சாப்பிட்டுவிட்டு, ஸ்லீபிங் பேக் மாட்டிக்கொண்டு தூங்க வேண்டியதுதான். தூக்கம் வரவில்லை என்றால் இருட்டில் இயற்கையின் மிரட்டும் அழகைக் கண்டு ரசிக்க வேண்டியதுதான். இயற்கைக் கடன்களைக் கழிக்க வேண்டும் என்றால் விடுதிக்குத் தகவல் சொல்லவேண்டும். மேலே ஏற்றிச் செல்வார்கள். அதிகாலை உணவருந்திவிட்டு, அங்கிருந்து கிளம்பி விட வேண்டும். திகில் நிறைந்த இந்த சுவாரசிய விடுதியில் ஓர் இரவு தங்க ஒரு ஜோடிக்கு 24 ஆயிரம் ரூபாய் கட்டணம்.
என்னதான் சுவாரசியம் என்றாலும் தூக்கத்தில் திரும்பினால் எலும்பு கூட மிஞ்சாது…
பிரிட்டனில் வசிக்கிறார் ஜெனிஃபர் ட்ரூ. இவருக்கு ஆன்லைனிலும் செய்தித்தாள்களிலும் தள்ளுபடி கூப்பன்களைச் சேகரிப்பதுதான் முக்கியமான பொழுதுபோக்கு. ஆசிரியராக இருக்கும் ஜெனிஃபர், 3 ஆண்டுகளில் தள்ளுபடி கூப்பன்கள் மூலம் பொருட்கள் 15 லட்சம் ரூபாயைச் சேமித்திருக்கிறார். ஜெனிஃபர் கர்ப்பமாக இருந்தபோது, அவரது கணவருக்கு வேலை போய்விட்டது. சிக்கனமாகச் செலவு செய்ய முடிவு செய்த ஜெனிஃபர், தள்ளுபடி கூப்பன்களைச் சேகரிக்க ஆரம்பித்தார். நாட்கள் செல்லச் செல்ல கூப்பன் சேகரிப்பதில் அதிக ஈடுபாடு வந்துவிட்டது. ஒரு கட்டத்தில் தேவையற்ற பொருட்களையும் வாங்கிச் சேர்க்கும் நிலைக்கு வந்துவிட்டார். அப்படி எல்லாம் செலவு செய்தும் இவ்வளவு பணத்தைச் சேமித்திருக்கிறார்! தினமும் 1 மணி நேரம், விடுமுறை நாட்களில் 3 மணி நேரம் செலவிட்டு தள்ளுபடி கூப்பன்களைப் பற்றி அறிந்துகொள்கிறார். இப்பொழுது கூப்பன்களைச் சேகரிப்பது எப்படி என்று வகுப்புகளும் எடுக்கிறார்.
நுகர்வு கலாசாரம் எப்படி எல்லாம் வேலை செய்யுது!
லண்டனில் வசிக்கும் ப்ளூ பூனைக்குக் காது கேட்காது. அதனால் தன் குரலை மிக அதிக அளவுக்கு ஒலிக்கிறது. 12 வயதான இந்தப் பூனை ஒவ்வொரு முறை மியாவ் என்று கத்தும்போதும் 93 டெசிபல் அளவுக்கு ஒலிக்கிறது. அதாவது சாதரணமாக பூனை எழுப்பும் ஒலியின் அளவை விட 4 மடங்கு ஒலி அதிகம். பூனையின் உரிமையாளர் க்ளாரி தாமஸ், தன்னால் இந்தச் சத்ததைச் சகித்துக் கொள்ள இயலவில்லை என்கிறார். அதுவும் நேரம் காலம் பார்க்காமல் சாப்பிடும்போது, விளையாடும்போது, சக பூனைகளைப் பார்க்கும்போது என்று எப்பொழுதும் கத்திக்கொண்டே இருக்கிறது ப்ளூ. இதனால் விலங்குகள் காப்பகத்தில் ஒப்படைக்க இருக்கிறார். பூனையின் சத்தத்தைக் கண்டவர்கள், கின்னஸில் ப்ளூ இடம் பிடிக்க வாய்ப்பிருப்பதாகச் சொல்கிறார்கள். ஸ்மோகி என்ற பூனையின் ஒலி 67.7 டெசிபல் கொண்டது. இதுதான் தற்போதைய கின்னஸ் சாதனையாக இருக்கிறது. ஆனால் ப்ளூவின் கத்தலோ 93 டெசிபல். நிச்சயம் கின்னஸ் சாதனையில் இடம்பெறும் என்கிறார்கள்.
கின்னஸ்னால அதுக்கு என்ன பலன்… காது கேட்க ஏதாவது செய்யலாமே…
முக்கிய செய்திகள்
கருத்துப் பேழை
3 mins ago
தமிழகம்
31 mins ago
விளையாட்டு
37 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
3 hours ago
வணிகம்
3 hours ago
சினிமா
1 hour ago
உலகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago