ஆபத்துச் சுழல்களில் ஆப்கானிஸ்தான் 8

By ஜி.எஸ்.எஸ்

1958-ல் பாகிஸ்தானில், ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியதைத் தொடர்ந்து பாகிஸ்தானின் அதிபராக ஜெனரல் அயூப் கான் பதவி ஏற்றார். பஷ்டூனிஸ்தான் பிரச்சினை தீவிரமடைந்தது. அதன்விளைவாக செப்டம்பர் 1961-ல் பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் தமக்கு இடையேயான உறவை முற்றிலுமாக முறித்துக்கொண்டன. ஆப்கானிஸ்தான் தனது முக்கிய விளைபொருள்களான திராட்சையையும் மாதுளையையும் இந்தியாவுக்குத் தரைவழியாக அனுப்ப முடியவில்லை.

வணிக வழி அடைபட்டதால் ஆப்கானிஸ் தானின் பொருளாதாரம் பெரிதும் குறைந்து விட்டது. மன்னர் திகிலடைந்தார். தவிர, நாட்டில் மார்க்ஸியக் கருத்துகளும் வலம் வரத் தொடங்கியிருந்தன. பிரதமர் தாவூதைக் கூப்பிட்டு “நான் உன் ராஜிநாமாக் கடிதத்தை ஏற்றுக்கொண்டேன்” என்றார் மன்னர் நாசூக்காக. புரிந்துகொண்டு தாவூத் ராஜினாமா செய்தார்.

தாவூத் அரசில் சுரங்க மற்றும் தொழில் துறை அமைச்சராக இருந்த முகமது யூசூப் புக்குப் பிரதமர் பதவி அளித்தார் மன்னர். தான் பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டவுடன் முகமது யூசுப் புதிய அரசியலமைப்புச் சட்டத்தையும் கொண்டு வர முயற்சி செய்தார்.

செப்டம்பர் 20, 1964 அன்று ஆப்கானிஸ் தானின் புதிய அரசியல் அமைப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டது. ஜனநாயக நெறிமுறைகளைக் கொண்டதாக அது இருந்தாலும், அரசாட்சி மற்றும் இஸ்லாமிய நெறிமுறை களையும் அது அலட்சியப்படுத்திவிட வில்லை. 1965-ல் முதல் முறையாக ஆப்கானிஸ் தானில் தேர்தல் நடைபெற்றது. அதிக இடங்கள் பெற்ற கட்சியிலிருந்து முகம்மது ஹாஷிம் மைவண்ட்வால் என்பவரைப் பிரதமராக்கினார் மன்னர்.

‘’மார்க்ஸிய அரசு ஆப்கானில் தோன்று வதற்கான காலம் நெருங்கிவிட்டது’ என்று சோவியத் யூனியன் தீர்மானித்தது. சுமார் பத்து வருடங்கள் அரசியலிலிருந்து ஒதுங்கியிருந்த தாவூத் என்பவரை தடாலடி யாக ஆப்கானிஸ்தானின் தலைவராக்கியது சோவியத் யூனியன். மன்னர் மருத்துவப் பரிசோதனைக்காக ஐரோப்பா சென்றிருந் தபோது இது நடந்தது.

தாவூத் அரசை மக்கள் ஏற்க வேண்டும் என்பதற்காக சோவியத் நிதி உதவியை தடையின்றி செய்தது. முக்கிய நகரங்களை இணைக்கும் சாலைகள் அமைக்கப்பட்டன. ரஷ்ய ராணுவத் தளபதிகள் ஆப்கன் ராணுவத்துக்குப் பயிற்சி அளித்தனர். சோவியத் அதிபர்களான குருஷ்ஷேவ், ப்ரஷ்னேவ் ஆகியோர் பலமுறை ஆப்கானிஸ்தானுக்கு விஜயம் செய்தனர்.

ஆனால் தாவூத் அடிப்படையில் ஒரு கம்யூனிஸ்ட் அல்ல. பதவிக்கு வர உதவிய தால் சோவியத்துடன் ஒத்துழைத்தார், அவ்வளவே. தொடர்ந்த வருடங்களில் மார்க்ஸிய அமைச்சர்கள் தூதர்களாக வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டனர். அப்படி செக் நாட்டுக்கு அனுப்பப்பட்டவர் தான் கர்மால் என்பவர். சோவியத் பிடியிலிருந்து நீங்க, முஸ்லிம் நாடுகளின் நிதி உதவியைக் கோரினார் தாவூத்.

இந்த மாற்றங்கள் கண்டு ஆப்கானிஸ் தானில் உள்ள கம்யூனிஸ்டுகள் அதிர்ந்தனர். சோவியத் யூனியன் தலையசைத்தது. 28 ஏப்ரல் 1978 அன்று தாவூத் கொல்லப்பட்டார்.

கம்யூனிஸ்ட் கட்சி பலவந்தமாக ஆட்சியைப் பிடித்தது. ஆப்கானிஸ்தானில் முதல் முறையாக ஒரு மார்க்ஸிய அரசு அமைந்தது. தராகி அதிபரானார். (ஜனவரி 1, 1965 அன்று ஆப்கானிஸ்தான் மக்கள் ஜனநாயகக் கட்சி (PDPA) என்ற கட்சி உருவாகியிருந்தது. பெயரில் புலப்பட வில்லை என்றாலும் அடிப்படையில் இது ஒரு கம்யூனிஸக் கட்சிதான். இதன் தலைவராக விளங்கியவர்தான் தராகி).

ஆனால் உள் கட்சி விரோதம் காரண மாக விரைவிலேயே தராகி கொலை செய் யப்பட, அமீன் என்பவர் அந்த நாட்டின் தலைவரானார். ஆனால் அவரைக் குறித்தும் சோவியத்துக்கு சந்தேகங்கள் எழுந்தன. அதன் உளவு அமைப்பான கே.ஜி.பி. ‘‘சோவியத் ஆதரவாளர்களை அமீன் வளர விடாமல் தடுக்கிறார். பாகிஸ்தானுடனும், சீனாவுடனும் தூதரகத் தொடர்பு வைத்துக் கொள்ள முயற்சிக்கிறார்’’ என்றது. இதைத் தொடர்ந்து அமீன் (நீங்கள் நினைப்பது சரிதான்) கொலை செய்யப்பட்டார்.

செக் நாட்டுக்கு தூதராக அனுப்பப்பட்டி ருந்த கர்மால் என்பவர் காபூலுக்கு வரவழைக்கப்பட்டு ஆப்கானிஸ்தான் தலைவராக்கப்பட்டார். என்றாலும் காலகாலமாக அந்நியர்களின் கையில் அகப்படாமல் இருந்த தங்கள் மண்ணை ரஷ்ய ராணுவம் கரையானாக ஆக்கிரமிப்பதை பொறுத்துக் கொள்ள முடியாமல் மதத் தலைவர்கள் ஜிஹாத் (புனிதப் போர்) அறிவித்தனர். இதைத் தொடர்ந்து கையில் கிடைத்த ஆயுதங்களை யெல்லாம் எடுத்துக் கொண்டு கம்யூனிஸ் ஆதரவாளர்களை உள்ளூர்வாசிகள் தாக்கத் தொடங்கினர். ஆனால் வலிமை மிக்கசோவியத்தின் செம்படை ஆப்கானிஸ் தானில் வெளிப்படையாகவே நுழைந்து ஆயிரக்கணக்கானவர்களை கொன்று தீர்த்தது.

ஜனவரி 14, 1980 அன்று ஐ.நா. பொதுச் சபை நடத்திய சிறப்புக் கூட்டத்தில் 104 நாடு கள் ரஷ்யாவின் முற்றுகையைக் கண்டித்தன. முதலில் இது குறித்து கவலைப்படாத சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானில் கூடாரம் அடித்திருந்த தங்கள் ராணுவத்தின் ஒரு பகுதியை போனால்போகிறதென்று வாபஸ் பெற்றது.

அதே சமயம் அந்த நாட்டிலுள்ள சிறு பான்மையினரின் நம்பிக்கையைப் பெறவும் கம்யூனிஸ அரசு முயற்சிகள் எடுத்தது. என்றாலும் நாட்டில் கலவரங்கள் பெருகிக் கொண்டிருந்தன. 1985ல் கோர்பசேவ் சோவியத் தலை மையை ஏற்றார். ஆப்கானிஸ்தானில் சோவியத் தலையீடு விரைவில் நின்றுவிடும் என்றார். கர்மால் பதவி நீக்கம் செய்யப்பட, முகம்மது நஜிபுல்லா என்பவர் தலைவ ரானார்.

(இன்னும் வரும்..)

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

மேலும்