கவிதா நல்லதம்பி
பள்ளியில் இருந்து வீடு திரும்பிய மலர், “அன்பு அக்காவுக்கு இந்தத் தங்கையின் சிறிய பரிசு” என்று சொல்லியவாறு, தன் கையில் இருந்த புத்தகத்தை மதியிடம் கொடுத்தாள்.
மதி: இன்னைக்கு என்ன சிறப்பு மலர்? புத்தகத்தை எங்க வாங்கின ?
மலர் : அக்கா, பள்ளியில் இருந்து புத்தகக் கண்காட்சிக்குக் கூட்டிட்டுப் போனாங்க. பிடிச்ச புத்தகத்தைத் தேர்ந்தெடுத்து வாங்கிக்கச் சொன்னாங்க. நான் உனக்காக இந்தப் புத்தகத்தை வாங்கினேன்.
மதி: நன்றி மலர். அப்ப இன்னைக்கு வகுப்பு இருந்திருக்காது.. ஒரே மகிழ்ச்சியா..
மலர்: இல்லக்கா, மதியம்தான் கண்காட்சிக்குப் போனோம். காலையில வழக்கம்போல வகுப்புகள் நடந்துச்சு.
மதி: நான்காம் வேற்றுமை உருபை நடத்தி முடிச்சிட்டாங்களா?
மலர்: ஆமாக்கா. நான்காம் வேற்றுமை உருபு 'கு'. அதைக் கொடை வேற்றுமைன்னு கூடச் சொல்வாங்களாம்.
மதி: வகுப்பில நடந்ததை நினைவு வச்சிருக்கியான்னு பார்க்கலாமா, நான்காம் வேற்றுமை உருபு என்னென்ன பொருள் தரப் பயன்படுதுன்னு சொல்லு பார்க்கலாம்.
மலர்: கொடை, நட்பு, பகை, தகுதி, அதுவாதல், பொருட்டு, முறை, எல்லை போன்றபொருள்களைத் தர வரும். எடுத்துக்காட்டுடன் சொல்லணும்னா கொடைப் பொருளுக்கு எடுத்துக்காட்டு சொல்றேன். கொடைன்னா வழங்குதல் என்று பொருள் தரும் எல்லாமும் அடங்கும். அம்மா குழந்தைக்கு உணவூட்டினார். அரசு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கியது.
மதி: நீ என்னிடம் பேசியதுலகூட இந்தக் கொடைப் பொருளுக்கு எடுத்துக்காட்டு இருக்கே
மலர்: உன்கிட்டப் பேசும்போது எப்பவும் கவனமா இருக்கணும்னு புரியுது. சொல்லவா, அன்பு அக்காவுக்குத் தங்கையின் பரிசு.
மதி: சரியாச் சொல்ற மலர். பகை, நட்பு என்கிற இரண்டுக்கும் எடுத்துக்காட்டுகளைச் சொல்லி விளக்குறயா?
மலர்: எலிக்குப் பூனை எதிரி, தம்பிக்கு அக்காவைப் பிடிக்காது.. இந்த இரண்டு தொடர்கள்ல எலி என்ற பெயருடன் இடம்பெறுகிற ’கு’-வும், தம்பிக்கு என்பதில் இடம்பெறும் ’கு’-வும் யாருக்கு யார் பகை என்பதை உணர்த்தப் பயன்படுது. இதே போல எனக்கு நண்பன் அகிலன். இதில் நட்பென்னும் பொருளை உணர்த்த வருது.
மதி: மலர், அதுவாதல்னா என்ன?
மலர்: சிற்பத்திற்குக் கல்லெடுத்தார்கள். குழம்புக்கு வாங்கிய மீன். இங்கு கல் சிற்பமாதல் என்கிற நிலை.இதை அதுவாதல்னு சொல்வோம். மீன் குழம்பாதல். சரியாக்கா. இதைமுதல் காரணப் பொருள்னும் சொல்வாங்க.
மதி: முறைப் பொருள்னு ஒன்னு சொன்னயே
மலர்: ஆமாக்கா, இவருக்கு இவர் இன்னாருன்னு சொல்றது தானே முறை சொல்லிப் பேசுறது. அதுக்கும் 'கு' என்கிற உருபுதான் பொருள் தருது. அப்பாவுக்கு அத்தை. தங்கைக்கு மகள். இது உறவுப் பொருளைக் குறிக்க, அதாவது முறையைக் குறிக்கப் பயன்படுது.
மதி: காரணப் பொருள்னா ?
மலர்: அதாவது ஒரு செயலுக்கான காரணத்தைச் சொல்ல, அதாவது எதன் பொருட்டுன்னு சொல்வதற்கும் 'கு' என்கிற உருபுதான பயன்படுது. எடுத்துக்காட்டா சொல்லணும்னா, குழந்தைக்குப் பொம்மை வாங்கினான், கூலிக்கு வேலை செய்தான். இதுல இந்த வேலையைச் செய்வதற்கான காரணமும் வெளிப்படுது இல்லையா.
மதி: சரி மலர், நான் தேர்வுக்குப் படிக்கணும். இதோட தொடர்ச்சியை பிறகு பேசுவோம் சரியா! (மேலும் தித்திக்கும்)
கட்டுரையாளர்: தமிழ்த்துறை பேராசிரியை.
முக்கிய செய்திகள்
சினிமா
2 mins ago
சினிமா
7 mins ago
சினிமா
10 mins ago
வலைஞர் பக்கம்
14 mins ago
சினிமா
19 mins ago
சினிமா
24 mins ago
இந்தியா
32 mins ago
க்ரைம்
29 mins ago
இந்தியா
35 mins ago
தமிழகம்
57 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago