தனியார் பள்ளிகளில் கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிப்பது தெரிந்தால், நேரில் திடீர் ஆய்வு நடத்திக் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
திருச்சி எடமலைப்பட்டிப்புதூரில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி இன்று ஆய்வு நடத்தினார். பள்ளியின் கழிப்பறை உட்பட பல்வேறு அறைகளைப் பார்வையிட்ட அவர், தொடக்கப் பள்ளியில் 100-வது மாணவர் சேர்க்கையைத் தொடக்கி வைத்தார். தொடர்ந்து, மாணவ- மாணவிகளுக்குப் பாடப் புத்தகங்களை வழங்கினார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறும்போது, ''வறுமையால் அல்லாமல், அரசுப் பள்ளியில் படிப்பதைப் பெருமையாக அனைவரும் கருதுகின்றனர். நிகழாண்டில் சிபிஎஸ்இ மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்தும் மாணவ- மாணவிகள் அரசுப் பள்ளியில் சேர்ந்து வருவதாக அலுவலர்கள் தெரிவித்தனர். அரசுப் பள்ளிகள் மீது நம்பிக்கை வைத்துத்தான் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைச் சேர்க்கின்றனர்.
எனவே, அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்த என்னென்ன தேவையோ அதையெல்லாம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு செய்யும்.
பள்ளிகளில் அதிக கல்விக் கட்டணம் வசூலிப்பதாகப் புகார் கொடுத்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். பெற்றோர் தைரியமாக புகார் அளிக்க முன்வர வேண்டும். அதுமட்டுமன்றி அந்தப் பள்ளிகளில் திடீர் ஆய்வு நடத்தி, புகார் உண்மையெனக் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
ஆய்வின்போது மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவழகன், திருச்சி வருவாய்க் கோட்டாட்சியர் விஸ்வநாதன், மாவட்டக் கல்வி அலுவலர்கள் ஜெகநாதன், பாரதி விவேகானந்தன், வட்டாரக் கல்வி அலுவலர்கள் மருதநாயகம், அருணாதேவி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
சினிமா
4 hours ago
விளையாட்டு
5 hours ago
வணிகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
க்ரைம்
7 hours ago
சுற்றுச்சூழல்
7 hours ago
க்ரைம்
7 hours ago
இந்தியா
7 hours ago
சினிமா
8 hours ago
கருத்துப் பேழை
8 hours ago