அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு சேர்ந்த மாணவர்களில் 40 சதவீதம் பேர் இணையவழி வகுப்புகளில் பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா பாதிப்பு காரணமாக தற்போது பள்ளி கல்லூரிகளில் இணையவழியில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கரோனா பரவல் கடந்த ஆண்டைவிட குறைவாக இருந்தாலும் பாதிப்பு குறித்த அச்சம் தொடர்வதால் கல்லூரிகளை திறக்க முடியாமல் உள்ளது.
இந்நிலையில், முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கும் ஆராய்ச்சி மாணவர்களுக்கும் டிசம்பர் 2-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து, இளநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கு, டிசம்பர் 7-ம் தேதி கல்லூரிகள் திறக்க அரசு அனுமதி அளித்தது. ஆனாலும், பல தனியார் மற்றும் தன்னாட்சி கல்லூரிகள் கல்லூரிகளை திறக்காமல் இணையவழியிலேயே வகுப்புகளை நடத்தி வருகின்றன.
முன்னதாக, கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின்கீழ் இயங்கும் 109 அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சுமார் 128 இளநிலை படிப்புகளுக்கு 98 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் முதலாமாண்டு சேர்ந்தனர். அம்மாணவர்களுக்கும் இணையவழியில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், அதில் சுமார் 40 சதவீத மாணவர்கள் இணையவழி வகுப்புகளில் கலந்து கொள்ளவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக உயர்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதலாமாண்டு இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஆண்டு செப்.28-ம் தேதி தொடங்கியது. இதைத்தொடர்ந்து, சேர்க்கை பெற்ற மாணவர்களுக்கு இணையவழி பாடம் நடத்த ஏதுவாக செப்.31-ம் தேதி முதலே ஒருங்கிணைக்கப்பட்டனர். அதன்படி, நவம்பர் மாதம் மாணவர் சேர்க்கை இறுதி கட்டத்தை நெருங்கும்போதே வகுப்புகள் தொடங்கப்பட்டது. ஆனால், சேர்க்கையின்போது ஒருங்கிணைக்கப்பட்ட மாணவர்களில் சுமார் 40 ஆயிரம் மாணவர்கள் இணையவழி வகுப்பில் இணையவில்லை.
மேலும் கடந்த 2 மாதமாக ஒரு நாள்கூட இணையவழி வகுப்பில் சுமார் 20 ஆயிரம் மாணவர்கள் பங்குபெறாமல் உள்ளனர். அவர்களை தொடர்பு கொள்ளவும் இயலாத நிலை உள்ளது. இந்த விவகாரம் உயர்கல்வித் துறைக்கு தெரியவரவே நீண்ட நாட்கள் ஆகியது. ஏனென்றால், அரசு கலை அறிவியல் கல்லூரிகளை பொருத்தவரையில் கல்லூரிக் கல்வி இயக்ககம் அதிக பொறுப்பை கொண்டுள்ளது. அதில், முழு நேர இயக்குநர் இல்லை.
தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் இயக்குநர்தான் 6 மாதத்துக்கும் மேலாக கூடுதல் பொறுப்பை வகித்து வருகிறார். இதனால், கல்லூரி கல்வி இயக்கக மண்டல இணை இயக்குநர்களுக்கும், தலைமை இயக்ககத்துக்கும் நேரடி தொடர்பு இல்லாதநிலை ஏற்பட்டுள்ளது. இதனால், அரசு கல்லூரி மாணவர்கள் விவகாரத்தில் இயக்ககம் விரைவாக முடிவு எடுக்க முடியவில்லை. இந்நிலையில்தான், இணையவழி வகுப்புகளுக்கு மாணவர் வருகை குறைவாக இருப்பது தெரியவந்தது. இணையவழி வகுப்புகளில் மாணவர்கள் இணையாததால் மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பருவத் தேர்வுகளை மாணவர்களால் நிச்சயம் எழுத முடியாது. எனவே, இறுதியாண்டு மாணவர்களை தொடர்ந்து முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கும் கல்லூரியை திறந்து நேரடி வகுப்புகள் நடத்த உயர்கல்வித் துறை ஆலோசித்து வருகிறது. மேலும், கல்லூரி கல்வி இயக்ககத்தின் இயக்குநர் பதவி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்ததும், இயக்குநர் பதவி நிரப்பப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
கடந்த 2 மாதமாக ஒரு நாள்கூட இணையவழி வகுப்பில் சுமார் 20 ஆயிரம் மாணவர்கள் பங்குபெறாமல் உள்ளனர். அவர்களை தொடர்பு கொள்ளவும் இயலாத நிலை உள்ளது.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 mins ago
சுற்றுச்சூழல்
36 mins ago
தமிழகம்
26 mins ago
சினிமா
34 mins ago
தமிழகம்
56 mins ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
57 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
க்ரைம்
2 hours ago