அரிசி, பருப்பு, முட்டை: 1.5 லட்சம் அங்கன்வாடி மையக் குழந்தைகளுக்கு வீடு வீடாகச் சென்று வழங்கல்

By த.சத்தியசீலன்

கோவை முழுவதும் சுமார் 1.5 லட்சம் அங்கன்வாடி மையக் குழந்தைகளுக்கு, வீடு வீடாகச் சென்று அரிசி, பருப்பு, முட்டை வழங்கப்பட்டுள்ளன.

சமூக நலத்துறையின், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், கோவை மாவட்டத்தில் 1,697 அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 2 முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகள் சேர்த்துக் கொள்ளப்பட்டு, அவர்களுக்கு அடிப்படைக் கல்வி, சத்துணவு உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. சுமார் 1.5 லட்சம் குழந்தைகள் இம்மையங்கள் மூலமாகப் பயனடைந்து வருகின்றனர்.

இன்றைய சூழலில் குழந்தைகளின் பெற்றோர் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஏழை, எளிய குடும்பத்தினர். இவர்கள் குழந்தைகளின் பாதுகாப்புக்கு அங்கன்வாடி மையங்களையே நம்பி உள்ளனர். இங்கு குழந்தைகளை விட்டுவிட்டு, பின்னர் மாலையில் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துச் செல்வதால், அவர்கள் வேலைக்குச் செல்வதற்குப் போதிய நேரம் கிடைக்கிறது.

இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக கடந்த மார்ச் 24-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளன. அங்கன்வாடி குழந்தைகளுக்குத் தேவையான சத்துணவுப் பொருட்கள் தடையின்றி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து அங்கன்வாடி பணியாளர்கள் சிலர் கூறும்போது, ''கரோனா வைரஸ் தொற்று காரணமாக அளிக்கப்பட்ட காலவரையற்ற விடுமுறை காரணமாக, அங்கன்வாடி குழந்தைகளுக்குத் தேவையான ஊட்டச்சத்து மிக்க உணவுகள் வழங்க முடியாத சூழல் ஏற்பட்டது. தமிழக அரசின் உத்தரவின் பேரில், குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பேணும் வகையில் அவர்களுக்குத் தேவையான அரிசி, பருப்பு, முட்டை உள்ளிட்ட சத்துணவுப் பொருட்களை அங்கன்வாடி பணியாளர்கள் மூலமாக குழந்தைகளின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று வழங்கப்பட்டு வருகிறது.

இதேபோல் கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படும் சத்துமாவும் அளிக்கப்பட்டு வருகிறது. இது அந்தந்த அங்கன்வாடி மையங்கள் அமைந்துள்ள பகுதியைச் சுற்றியுள்ள பயனாளிகளுக்கு வழங்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் முதல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இதுபோன்ற நோய்த்தொற்று பரவும் காலத்தில் குழந்தைகளைச் சுகாதாரமாகவும், ஆரோக்கியமாகவும் பராமரித்து வளர்ப்பது எப்படி? என்பது குறித்தும் பெற்றோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்'' என்றனர்.

இதுகுறித்து கோவை மாவட்டக் குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்ட மாவட்ட அலுவலர் மீனாட்சி கூறும்போது, ''அங்கன்வாடி குழந்தைகளுக்கான சத்துணவுப் பொருட்கள் கடந்த ஆக.1-ம் தேதி முதல் விநியோகிக்கப்பட்டது. அனைத்து அங்கன்வாடி குழந்தைகளுக்கும் அரிசி, பருப்பு, முட்டை போன்றவை வழங்கப்பட்டுள்ளன. இதன்படி சுமார் 1.5 லட்சம் குழந்தைகளுக்கு இப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதேபோல் கர்ப்பிணிப் பெண்களுக்குச் சத்துமாவு தங்கு தடையின்றி வழங்கப்படுகிறது. இதேபோல் வரும் மாதங்களில் தொடர்ச்சியாக வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன'' என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

சினிமா

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

மேலும்