பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளால் பிரதமர் மோடி - மாணவர்கள் சந்திப்பு ஜன.20-ம் தேதிக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி 'பரிக்ஷா பே சார்ச்சா' என்ற பெயரில் 2018-ம் ஆண்டில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் கலந்துரையாடி வருகிறார். தேர்வுகள், அவை அளிக்கும் அழுத்தம் உள்ளிட்டவை குறித்து இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்படும். 3-வது ஆண்டாக இந்தக் கலந்துரையாடல் நடைபெற உள்ளது.
இதற்காக 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ஒரு போட்டி நடத்தப்படுகிறது. அதில் வெற்றி பெறும் மாணவர்கள், பிரதமர் மோடியுடன் நேரடியாகப் பேசலாம். தேர்வுகள் குறித்தும் அதுசம்பந்தமான உளவியல் பிரச்சினைகள் குறித்தும் பிரதமருடன் கலந்துரையாடலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சி ஜனவரி 16-ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கிடையே பொங்கல் விடுமுறை தினத்தன்று (ஜன.16), பிரதமர் மோடி உரையைக் கேட்க 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் எனவும் அனைத்து மாணவர்களும் தவறாமல் பள்ளிக்கு வருவதை மாவட்ட அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியானது.
இதனால் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், ''பிரதமர் மோடியின் உரையை நேரில் காண, பள்ளி மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் என்று கூறவில்லை. பிரதமரின் உரையை மாணவர்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் கேட்கலாம்'' என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்தது.
இந்நிலையில் பிரதமர் மோடி, மாணவர்களைச் சந்திக்கும் தேதி மாற்றப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''பிரதமர் மோடி - மாணவர்கள் சந்திப்பு ஜனவரி 20-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பொங்கல், மகர சங்கராந்தி, லோரி, ஓணம் உள்ளிட்ட பண்டிகைகள் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு சந்திப்பு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
21 mins ago
இந்தியா
15 mins ago
தமிழகம்
32 mins ago
வாழ்வியல்
23 mins ago
இந்தியா
37 mins ago
தமிழகம்
58 mins ago
சினிமா
54 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
க்ரைம்
1 hour ago