நூலக உறுப்பினர்களான மாணவ, மாணவிகள்: முன்னுதாரணமாக விளங்கும் நடுநிலைப் பள்ளி

By ஜெ.ஞானசேகர்

திருச்சி தென்னூரில் உள்ள தென்னூர் நடுநிலைப் பள்ளி (அரசு உதவி பெறும் பள்ளி) மாணவ, மாணவிகள் 150 பேரும் நூலக உறுப்பினர்களாக இணைந்து பிறருக்கு முன்னுதாரணம் காட்டியுள்ளனர்.

நவீன காலத்தில் வாசிப்பு என்பதுஅரிதாகி வருகிறது. நவீனதகவல் தொடர்பு சாதனங்களிலும் வாசிப்பு தேடலைக் காட்டிலும், விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு கண்டுகளிப்புகளுக்கே பலரும் முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

எனவே, வாசிப்பை அதிகரிக்க, வாசிப்பின் அவசியத்தை உணர்த்தநூலகத் துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அனைத்துத் தரப்பினருக்குமான நூல்கள் இணையதள வசதி மற்றும் நாளிதழ்களுடன், நூல்களை நகல் எடுக்கும் வசதி உட்பட வாசகர்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றி வருகிறது. ஆனால், மாணவர்களின் வாசிப்பை அதிகரிக்க பள்ளிகள் மற்றும் பெற்றோரின் ஒத்துழைப்பு அவசியம்.

அந்தவகையில், திருச்சி தென்னூர் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், தங்கள் பள்ளியில் பயிலும் அனைத்துமாணவர்களையும் புத்தூர் கிளை நூலகத்தின் உறுப்பினர்களாக்கியுள்ளனர். இதற்கான நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வட்டாரக் கல்வி அலுவலர் அருள்தாஸ் நேவிஸ் கலந்து கொண்டு,மாணவ, மாணவிகள் அனைவருக்கும் நூலக உறுப்பினர் அட்டைகளை வழங்கி பாராட்டினார்.

இதுகுறித்து பள்ளித் தலைமை ஆசிரியர் பி.விமலா கூறியபோது, “வாசிப்பு என்பது புதிய சிந்தனைகளை உருவாக்கும். அறிவைப் பெருக்குவதுடன் தைரியம் அளிக்கும், சிந்திக்கத் தூண்டும், கற்பனைவளத்தைப் பெருக்கும், புதிய படைப்புகளை உருவாக்கத் தூண்டும்.

எனவே, சரியான நேரத்தில் வாசிப்பின்அவசியத்தை உணர்த்த வேண்டியது அவசியம். குறிப்பாக, பள்ளிப் பருவத்தில் இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தினால், அது எந்தக் காலத்திலும் மாணவ, மாணவிகளை விட்டு அகலாது.

விடாத வாசிப்பு அவர்களை நல்வழிப்படுத்துவதுடன், வாழ்விலும் ஏற்றம் தரும். பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் 150 பேரும் நூலக உறுப்பினர்களாக இணைக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.

புத்தூர் கிளை நூலகத்தின் நூலகர் பெ.தேவகி கூறும்போது, “நூலக உறுப்பினராக, ஆதார் அட்டை நகலுடன், ஆண்டு சந்தா ரூ.10 மட்டும் செலுத்தினால் போதும். ஒரு புத்தகத்துக்கு காப்புத் தொகையாக ரூ.20 செலுத்த வேண்டும். எடுத்துச் செல்லும் புத்தகத்தை 15 நாட்களில் திருப்பி அளிக்க வேண்டும்’’ என்றார்.

இதுகுறித்து மாவட்ட நூலக அலுவலர் அ.பொ.சிவக்குமார் கூறும்போது, “தென்னூர் நடுநிலைப் பள்ளிஆசிரியர்கள், தங்கள் பள்ளி மாணவ, மாணவிகள் அனைவரையும் நூலக உறுப்பினர்களாக இணைத்து பிறருக்கு முன்னுதாரணமாக காட்டியுள்ளனர்.

ஆசிரியர்களின் இந்த நடவடிக்கை பாராட்டத்தக்கது. இதேபோல் பிற பள்ளிகளும், பெற்றோரும் தங்கள் மாணவ, மாணவிகளை அருகிலுள்ள நூலகங்களில் உறுப்பினர்களாக இணைக்க முன்வர வேண்டும்” என்றார்.

கிளை நூலக வாசகர் வட்டத் தலைவர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா, கிளை நூலக ஊழியர் ஜெயலட்சுமி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

6 mins ago

உலகம்

56 mins ago

விளையாட்டு

1 hour ago

வேலை வாய்ப்பு

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

கல்வி

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்