புதுடெல்லி
மாமல்லபுரம் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங், காஷ்மீர் பிரச்சினையை எழுப்பினால் பிரதமர் மோடி தகுந்த விளக்கம் அளிப்பார் என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சீன அதிபர் ஜி ஜின்பிங் வரும் 11, 12-ம் தேதிகளில் மாமல்லபுரத்துக்கு 2 நாட்கள் பயணமாக வருகிறார். மாமல்லபுரத்துக்கும் சீனாவுக்கும் இடையில் பழங்காலத்தில் வர்த்தகம் மற்றும் கலாச்சார தொடர்புகள் இருந்துள்ளன. அதை கருத்தில் கொண்டே மாமல்லபுரத்தில் சீன அதிபரை சந்திக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.
இந்நிலையில் பிரதமர் மோடியும் - சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் அதிகாரபூர்வற்ற முறையில் 2-வது முறையாகச் சந்திக்கிறார்கள். இதற்கு முன், கடந்த ஆண்டு உஹான் நகரில் சந்தித்து இரு தலைவர்களும் பேசியுள்ளனர்.
மாமல்லபுரத்தில் இரு தலைவர்களுக்கு இடையே நடக்கும் சந்திப்பின்போது ஒப்பந்தங்கள், கையொப்பங்கள் ஏதும் நடக்காது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது முழுக்க முழுக்க இரு நாடுகளின் தலைவர்களின் நட்புரீதியான சந்திப்பு என்றும், இரு நாட்டு மக்களுடனான தொடர்பை மேம்படுத்த நோக்கில் நடக்கும் சந்திப்பு என்றும் அரசு வட்டாரங்கள் கூறியுள்ளன.
இதற்கிடையில் காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, ஐ.நா. சபையில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக சீனா கருத்து தெரிவித்தது. அதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. தற்போது பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சீன பயணம் மேற்கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி உள்ளார். எனவே, மாமல்லபுரம் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங், காஷ்மீர் விவகாரம் குறித்தும், 370-வது பிரிவு நீக்கப்பட்டது குறித்தும் பிரதமர் மோடியிடம் பேசுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் நேற்று கூறும்போது, ‘‘காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா தனது நிலைப்பாட்டை தெளிவாகத் தெரிவித்துவிட்டது. அரசியலமைப்பின் 370-வது பிரிவு நீக்கப்பட்டது என்பது இந்திய அரசியலமைப்போடு தொடர்புடையது. எங்கள் இறையாண்மைக்கு உட்பட்டது என்று தெளிவாக உலக நாடுகளுக்கு அறிவித்துவிட்டது. ஆதலால் இந்த விஷயம் குறித்து சீன அதிபர் பேசமாட்டார் என்றே கருதுகிறோம். ஒருவேளை காஷ்மீர் விவகாரம் குறித்து தெரிந்துகொள்ள சீன அதிபர் விரும்பினால், அதுகுறித்து பிரதமர் மோடி சரியான விளக்கம் அளிப்பார்" எனத் தெரிவித்தார்.
இந்தியாவின் கடும் எதிர்ப்பு மற்றும் சரியான விளக்கத்தால், ஐநாவில் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்த சீனா, நேற்று தனது நிலைப்பாட்டை முற்றிலுமாக மாற்றிவிட்டது.
இதுகுறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சர் கெங் சுவாங் கூறுகையில், " காஷ்மீர் விவகாரம் இந்தியா - பாகிஸ்தான் தொடர்புடையது. இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும். இதுதான் இரு நாடுகளுக்கும், உலகுக்கும் நலமாக அமையும். காஷ்மீர் விவகாரத்தில் சீனா தனது நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கிறது" எனத் தெரிவித்தார்.
வரும் 11-ம் தேதி சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் விமானம் சென்னையில் தரையிறங்கும் தினமும், புறப்பட்டு செல்லும் தினமும் சுமார் 15 நிமிடத்தில் இருந்து 30 நிமிடம் வரை அங்கு பயணிகள் மற்றும் சரக்கு விமானங்கள் பறப்பதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. சீன அதிபர் விமானத்துக்காக கட்டுப்பாடு விதிக்கப்பட்ட நேரத்தில் சென்னையில் இருந்து செல்ல வேண்டிய மற்றும் வர வேண்டிய விமானங்களின் நேரம் மாற்றி அமைக்கப்பட்டு இருப்பதாக பயணிகளுக்கு தகவல் தெரிவிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
சீன அதிபர் விமான நிலையத்தில் இருந்து சென்னை நகருக்குள் செல்வதற்கான 5 மற்றும் 6-வது நுழைவு வாயிலை பயன்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அந்த பகுதி முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு புதிதாக வர்ணம் தீட்டப்படுகிறது. விமான நிலைய சுவர்களில் இந்திய மற்றும் சீன கலாசார ஓவியங்கள் வரையப்படுகின்றன.
முக்கிய செய்திகள்
இந்தியா
31 secs ago
இந்தியா
7 mins ago
இந்தியா
13 mins ago
இந்தியா
20 mins ago
தமிழகம்
13 mins ago
இந்தியா
31 mins ago
க்ரைம்
48 mins ago
இந்தியா
58 mins ago
விளையாட்டு
47 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
3 hours ago