லடாக் பகுதியில் கோவில்பட்டி ராணுவ வீரர் மரணம் ஆளுநர்கள் இரங்கல்; குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி தரப்படும் என முதல்வர் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

லடாக் பகுதியில் விபத்தில் மரணமடைந்த கோவில்பட்டியைச் சேர்ந்த ராணுவ வீரரின் உடல் சொந்த ஊருக்கு நாளை கொண்டு வரப்படுகிறது. அவரது மறைவுக்கு தமிழகம் மற்றும் தெலங்கானா ஆளுநர்கள், தமிழக முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளம் சண்முகாநகரைச் சேர்ந்த கந்தசாமி மகன் கருப்பசாமி (34). கடந்த 14 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்த இவர், நாயக் பதவி வகித்து வந்தார். லடாக் எல்லைப் பகுதியில் இந்திய ராணுவத்தின் ஆர்ட்டிலெரி படைப்பிரிவில் பணியாற்றி வந்த கருப்பசாமி, அங்கு 18-ம் தேதி காலையில் நடந்த விபத்தில் மரணமடைந்தார். கருப்பசாமிக்கு தமயந்தி என்ற மனைவியும், 7 மற்றும் 5 வயதில் 2 மகள்களும், ஒரு வயதில் மகனும் உள்ளனர்.

அமைச்சர் கடம்பூர் ராஜு நேற்று கருப்பசாமியின் வீட்டுக்குச் சென்று அவரது குடும்பத்துக்கு ஆறுதல் கூறி ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கினார். மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ், கோட்டாட்சியர் விஜயா, எம்எல்ஏ சின்னப்பன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தூத்துக்குடி எம்பி கனிமொழி, கருப்பசாமியின் வீட்டுக்குச் சென்று, அவரது உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினார். அவரது பெற்றோர் மற்றும் மனைவிக்கு ஆறுதல் கூறி ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கினார். பின்னர், கனிமொழி கூறும்போது, ‘‘கருப்பசாமியின் குடும்பத்துக்கு திமுக சார்பில்ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். கருப்பசாமியின் குழந்தைகளின் கல்விச் செலவை திமுக ஏற்கும்’’ என்றார். அப்போது எம்எல்ஏ கீதா ஜீவன் உடனிருந்தார்.

இதுபோல், தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியனும் ஆறுதல் கூறினார். கருப்பசாமியின் உடல் நாளை அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்படலாம் என்றும், அதன் பிறகு இறுதிச்சடங்கு நடைபெறும் என்றும் உறவினர்கள் தெரிவித்தனர்.

தலைவர்கள் இரங்கல்

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: ராணுவ வீரர் நாயக் கருப்பசாமி குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்துக்கு இழப்பை தாங்கி மீண்டு வர வலிமையை தருவதற்காகவும் இறைவனை வேண்டுகிறேன்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன்: ராணுவ வீரர் கருப்பசாமி குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.

முதல்வர் பழனிசாமி: உயிரிழந்த ராணுவ வீரர் நாயக் கருப்பசாமி குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் மற்றும் அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசுப்பணி வழங்கப்படும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

வலைஞர் பக்கம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

இந்தியா

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

மேலும்