கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. பேச்சிப்பாறை அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தாமிரபரணியாறு, பழையாறு உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
அரபிக்கடலில் உருவான டவ் தே புயல் தாக்கத்தால் கன்னியாகுமரி மாவட்டத்தில் மழை தீவிரமடைந்துள்ளது. சூறைக்காற்றுடன் கனமழை பெய்வதால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. 2-வதுநாளாக நேற்றும் மழை தொடர்ந்தது.
மழை அளவு
அதிகபட்சமாக கோழிப்போர்விளையில் 92 மி.மீ., மழை பதிவானது. பூதப்பாண்டியில் 40 மி.மீ., சிற்றாறு ஒன்றில் 78, களியலில் 60, கன்னிமாரில் 33, கொட்டாரத்தில் 36, குழித்துறையில் 74, மயிலாடியில் 58, நாகர்கோவிலில் 53, பேச்சிப்பாறையில் 71, பெருஞ்சாணியில் 81, புத்தன் அணையில் 80, சிவலோகத்தில் 68, சுருளகோட்டில் 70, தக்கலையில் 87, குளச்சலில் 64, இரணியலில் 22, பாலமோரில் 75,மாம்பழத்துறையாறில் 60, ஆரல்வாய்மொழியில் 20, அடையாமடையில் 57, குருந்தன்கோட்டில் 46, முள்ளங்கினாவிளையில் 87, ஆனைக்கிடங்கில் 57, முக்கடல் அணையில் 35 மி.மீ., மழை பெய்திருந்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 61.27 மி.மீ., மழை பதிவானது.புயல் எச்சரிக்கையை தொடர்ந்து கன்னியாகுமரி முதல் நீரோடி வரையிலான மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. தடைக்காலத்தை முன்னிட்டு ஏற்கெனவே சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.
அணைகள் நிலவரம்
பெருஞ்சாணி அணையில் நீர்மட்டம் 57.80 அடியாக உயர்ந்தது. அணைக்கு நீர் வரத்து 1,510 கன அடியாக உயர்ந்தது. பொதுப்பணித்துறை நீராதார துறையினர் அணைப்பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.முக்கடல் அணையின் நீர்மட்டம் 3.3 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் நாகர்கோவில் நகருக்கு குடிநீர்தட்டுப்பாடு அபாயம் நீங்கியது பேச்சிப்பாறை அணை, தாமிரபரணி ஆற்றுப் பகுதிகளை மாவட்டஆட்சியர் மா.அரவிந்த் பார்வையிட்டார்.
வாழைகள் சேதம்
ஞாலம், தாழக்குடி, கருமன்கூடல் ஆகிய இடங்களில் ஆயிரக்கணக்கான வாழைகள் சூறைக்காற்றில் சரிந்து விழுந்தன. கொல்லங்கோடு, நட்டாலத்தில் தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் உள்ள தாழ்வான பகுதிகளில் மழைநீர் சூழ்ந்தது. பல இடங்களில் மலையோரம் மற்றும் சாலையோரம் நின்ற மரங்கள் சரிந்து விழுந்தன. இவற்றை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.புயல் எச்சரிக்கை தொடர்வதால் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அருமனை அருகே பாலக்குழியில் மழையால் மேற்கூரை இல்லாத வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் யூஜின் (32) என்பவர் உயிரிழந்தார்.
கோவில்பட்டி
கோவில்பட்டி அருகே உள்ளவானரமுட்டியைச் சேர்ந்தவர் சீனிவாசன்(49). இவருக்கு சொந்தமான தோட்டம் தோணுகாலில் உள்ளது. இதனை வானரமுட்டியைச் சேர்ந்த மாரிமுத்து(47) என்பவர் குத்தகைக்கு எடுத்து வாழை பயிரிட்டுள்ளார். சுமார் 2.28 ஏக்கரில் 1,300 நாட்டு வாழைகளை நட்டு பராமரித்து வந்தார். வாழைகள் குலைதள்ளிய நிலையில் அறுவடைக்கு தயாராக இருந்தன. இந்நிலையில், நேற்றுமுன்தினம் மாலை கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.இதில், மாரிமுத்து குத்தகை எடுத்த நிலத்தில் இருந்த 700 வாழைகள் சாய்ந்து சேதமடைந்தன. அரசு அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என, விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
வெளிமாவட்டங்களில் இருந்து 4 மீட்பு குழுக்கள் வருகை
டவ் தே புயல் எச்சரிக்கையை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் பேரிடர் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள இடங்களில் மாவட்ட தீயணைப்பு அதிகாரி சரவணபாபு தலைமையில் 115 பேர் அடங்கிய 7 குழுவினர் இரவு, பகலாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இது தவிர திருநெல்வேலி, விருதுநகர், தூத்துக்குடி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இருந்தும் 4 தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் குமரிக்கு வந்துள்ளனர். பேரிடர் காலங்களில் தண்ணீர் சூழும் பகுதிகளான முஞ்சிறை, காஞ்சாம்பாறை, ஆற்றூர், குழித்துறை ஆகிய பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் அவர்கள் முகாமிட்டுள்ளனர் .
முக்கிய செய்திகள்
சினிமா
3 mins ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
தமிழகம்
1 min ago
சினிமா
19 mins ago
இணைப்பிதழ்கள்
5 hours ago
தமிழகம்
13 mins ago
சினிமா
24 mins ago
சினிமா
27 mins ago
வலைஞர் பக்கம்
31 mins ago
சினிமா
36 mins ago
சினிமா
41 mins ago
இந்தியா
49 mins ago