மேற்கு வங்கத்தில் ‘நாரதா’ லஞ்ச வழக்கில் 2 அமைச்சர்கள் உள்ளிட்ட 4 பேர் சிபிஐ அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டனர். இதைக் கண்டித்து முதல்வர் மம்தா பானர்ஜி சிபிஐ அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார்.
மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நாரதா செய்தி இணையதளம், ஸ்டிங் ஆபரேஷன் மூலம் எடுத்த வீடியோவை கடந்த 2016-ம் ஆண்டு வெளியிட்டது. இதன்மூலம் போலி நிதி நிறுவனம் ஒன்றுக்கு ஆதரவாக செயல்பட ஆளும் திரிணமூல் காங்கிரஸின் 7 எம்.பி.க்கள், 4 அமைச்சர்கள் லஞ்சம் பெற்றது அம்பலமானது. இது தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில், நாரதா லஞ்ச வழக்கில் அமைச்சர்கள் பிர்ஹத் ஹக்கிம், சுப்ரதா முகர்ஜி, எம்எல்ஏ மதன் மித்ரா மற்றும் முன்னாள் அமைச்சர் சோவன் சட்டர்ஜி ஆகிய 4 பேரை சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர்.
இந்த தகவலை அறிந்த திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள், சிபிஐ அலுவலகம் முன்பு குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் அலுவலகத்தின் மீது கற்களை வீசி தாக்கியதாகவும் கூறப்படுகிறது. அவர்களை துணைராணுவப் படையினர் தடியடி நடத்தி விரட்டினர். இதனிடையே, சிபிஐ அலுவலகத்துக்குச் சென்ற முதல்வர் மம்தா பானர்ஜி, அமைச்சர்கள் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டதாகக் கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். அவர்களை விடுவிக்காவிட்டால் தன்னையும் கைது செய்யுமாறு வலியுறுத்தினார்.
இதனிடையே, சிபிஐ அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபடுவது சட்டவிரோத செயல் என்றும் இதற்காக கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் ஆளுநர் ஜெக்தீப் தன்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதையடுத்து சிபிஐ அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டமம்தாவும் அவரது ஆதரவாளர்களும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர். பொதுவாக எம்எல்ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டப்பேரவைத் தலைவரிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், சிபிஐ அதிகாரிகள் பேரவைத் தலைவரை அணுகாமல் ஆளுநர் ஜெக்தீப் தன்கரிடம் அனுமதி கோரி உள்ளனர். அவர் இந்த மாத தொடக்கத்தில் அனுமதி வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதன் பேரில் 4 பேரையும் கைது செய்துள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. இந்த 4 பேரும் சம்பவம் நடந்தபோது அமைச்சர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் எம்.பி.க்களான முகுல்ராய் மற்றும் சுவேந்து அதிகாரி ஆகியோரும் லஞ்ச வழக்கில் சிக்கினர். எனினும் திரிணமூல் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துவிட்ட நிலையில் இவர்கள் மீது நவடிக்கை எடுக்கப்பட வில்லை. - பிடிஐ
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
சினிமா
4 hours ago
விளையாட்டு
5 hours ago
வணிகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
க்ரைம்
7 hours ago
சுற்றுச்சூழல்
8 hours ago
க்ரைம்
8 hours ago
இந்தியா
8 hours ago
சினிமா
9 hours ago
கருத்துப் பேழை
9 hours ago