கூகுள் காலத்தில் நூலகங்கள் தேவையா?

By சைபர் சிம்மன்

நீங்கள் கடைசியாக நூலகத்திற்கு சென்றது எப்போது? இந்த கேள்வி நிச்சயம் உங்களை யோசிக்க வைக்கும். அநேகமாக நூலக நினைவுகளில் மூழ்க வைத்திருக்கும். ஏனெனில் நீங்கள் நூலகத்திற்கு சென்று சில காலம் ஆகியிருக்கலாம்.

புத்தகங்களையும் தகவல்களையும் தேடி நூலகத்திற்கு தவறாமல் சென்று கொண்டிருந்த நிலை மாறிவிட்டது.இன்று பெரும்பாலான தகவல்கள் இணைய தேடலில் கிடைத்துவிடுகின்றன. எது தேவை என்றாலும் கூகுளில் தேடுங்கள் என சொல்வது இயல்பாக இருக்கிறது.

இந்த சூழலில் நூலகங்களின் முக்கியத்துவம் குறைந்து வரும் நிலை அல்லது அப்படி நினைக்கும் போக்கு இருக்கிறது.டிஜிட்டல் யுகத்தில் நூலகங்களுக்கு இனி இடமில்லை என்று கூட நினைக்கத்தோன்றும். இப்படி நினைப்பவர்களும் சரி,நினைத்து கவலை கொள்பவர்களும் சரி ஜான் பால்பிரே (John Palfrey ) பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.

பால்பிரே அமெரிக்க கல்வியாளர், அறிஞர், சட்டப் பேராசிரியர் என பல முகங்களை கொண்டவர். இவை எல்லாவற்றையும் விட இணைய யுகத்து சிந்தனையாளர். டிஜிட்டல் தலைமுறையை நன்கு புரிந்து கொண்டிருப்பவர். டிஜிட்டல் யுகத்தில் பிறந்தவர்களின் மனப்போக்கை விளக்கும் வகையில் ‘டிஜிட்டல் நேட்டிவ்ஸ்’ எனும் புத்தகத்தை எழுதியிருக்கிறார்.

இக்கால தலைமுறையையும், இணைய தொழில்நுட்பத்தின் தாக்கத்தையும் நன்கு புரிந்து வைத்திருக்கும் பால்பிரே அண்மையில் எழுதியிருக்கும் புத்தகம் நூலக பிரியர்களை புன்னகைக்க வைக்கும். நூலகம் என்றால் ஏதோ கற்கால சங்கதி போல நினைக்கத் துவங்கியிருப்பவர்களை யோசிக்க வைக்கும்.‘பிபிலியோ டெக்’ எனும் அந்த புத்தகத்தின் துணை தலைப்பு கவனிக்கத்தக்கது. முன் எப்போதையும் விட கூகுள் காலத்தில் நூலகங்கள் முக்கியமானவை,ஏன்?

நேற்றும் ,இன்றும் மட்டும் அல்ல நாளையும் கூட நூலகங்கள் முக்கியமானவை தான் எனும் கருத்தை வலியுறுத்தும் வகையில் பால்பிரேவின் புத்தகம் அமைந்துள்ளது.

இணையம் மற்றும் கூகுள் இருப்பதால் நூலகங்கள் அத்தனை முக்கியம் அல்ல என்று பலரும் மீண்டும் மீண்டும் சொல்வதை கேட்க நேர்ந்ததால் உண்டான அதிர்ச்சியில் இந்த புத்தகத்தை எழுத தீர்மானித்ததாக பால்பிரே சொல்கிறார். பலரும் நினைப்பதற்கு மாறாக கடந்த காலத்தைவிட இப்போது தான் நூலகங்களுக்கான முக்கியத்துவம் அதிகமாக இருப்பதாக அவர் நம்புகிறார்.

இதற்கு அவர் சொல்லும் காரணம், நூலகங்கள் தகவல்கள் மற்றும் அறிவுடன் கலந்து பழகுவதற்கான இருப்பிடமாக இருக்கின்றன என்பதுதான்.கருத்துக்களை பகிரவும்,கூட்டாக தகவல் தேடும் முயற்சியில் ஈடுபடுவதற்கான களமாகவும் நூலகங்கள் விளங்குவதாக அவர் சொல்கிறார்.

எதிர்பார்த்த தகவல்கள் கிடைக்கும் உறுதியுடன் எதிர்பாராத விவரங்களையும் தெரிந்து கொள்ளும் சாத்தியம் ஏற்படுத்தும் உவகையுடன் நூலக அலமாரிகளுக்கு நடுவே நடந்து செல்லும் அனுபவத்தை இன்னும் கூட பலரும் விரும்புவதாகவும் சொல்கிறார்.

இணைய யுகத்தில் நூலகங்களும் மாற வேண்டியிருக்கின்றவே தவிர அவற்றை மறந்துவிட முடியாது என்பது அவரது தீர்மானமான நம்பிக்கை. நூலகம் மட்டும் அல்ல, நூலகர்களும் தகவல் தேடலின் மையமாக இருக்க வேண்டும் என அவர் வாதாடுகிறார்.

இணைய யுகத்தில் இந்த மனித தன்மையை மீண்டும் கொண்டுவந்தாக வேண்டும் என்று கூறுபவர் டிஜிட்டல்மயமாக்கல் மேலும் ஜனநாயக தன்மையை கொண்டு வரும் என்கிறார்.

நிச்சயம் நம் காலத்து கேள்விகளுக்கு பதில் அளிக்கும் புத்தகத்தை தான் பால்பிரே எழுதியிருக்கிறார்.

ஹார்வர்டின் பெர்க்மேன் செண்டர் பார் இண்டெர்நெட் அண்ட் சொசைட்டியின் இயக்குனராக இருக்கும் பால்பிரே அமெரிக்க டிஜிட்டல் பொது நூலகத்தின் நிறுவனரும் கூட!.

ஜான் பால்பிரேவின் வலைப்பதிவு: >http://jpalfrey.andover.edu/w

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

16 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்