பசியை விரட்டும் இணையம்

By செய்திப்பிரிவு

இந்தியாவில் உணவு வீணாவது மிகவும் சிக்கலான விஷயம். 19 கோடி மக்கள் இன்னமும் வறுமையில் வாடும் நிலையில் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான உணவுப் பொருள்களை வீணடிக்கிறோம். இவை கெட்டுப்போனதால் வீணடிக்கப்படுபவை அல்ல. பெரும்பாலானவை சாப்பிடும் நிலையில் உள்ளவைதான். அதிகமாக சமைக்கப்பட்டு குப்பையில் கொட்டப்படுகின்றன.

இந்தியாவில் கடந்த ஆண்டு 26 கோடி டன் உணவு உற்பத்தி செய்யப்பட்டது. இதில் வீணடிக்கப்பட்டது 3 கோடி டன்னாகும்.

இந்திய நகரங்களில் பெங்களூரில்தான் அதிக அளவில் அதாவது ஆண்டுக்கு 94 லட்சம் டன் உணவு வீணடிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சராசரியாக ஒரு உணவின் விலை ரூ. 40 எனக் கணக்கிட்டால் பெங்களூரில் வீணாகும் உணவின் மதிப்பு ரூ. 339 கோடி. இவ்விதம் வீணாகும் உணவு மூலம் 2.6 கோடி மக்களின் பசியைப் போக்க முடியும். அகமதாபாத்தைச் சேர்ந்த 26 வயது நிரம்பிய நிர்வாகவியல் பட்டதாரி ரூபேஷ் ரஜாவத்தை பெரிதும் பாதித்த இந்த விஷயம் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண தூண்டு கோலாக அமைந்தது.

தனது நான்கு நண்பர்களுடன் இணைந்து அவர் உருவாக்கிய இணையதளம் உணவு வீணாவதைத் தடுத்துள்ளதோடு, வறுமையில் வாடுபவர்களுக்குக் உணவு கிடைக்கவும் வழி செய்துள்ளது. இவர்கள் உருவாக்கிய இணையதளம் நாட்டின் அனைத்துப் பகுதியிலும் வீணாகும் உணவை தடுக்க ஓரளவு உதவியுள்ளது. இவர்களது இணையதள முகவரி: >leftover.in

விரைவிலேயே இவர்கள் மொபைல் மூலமான அப்ளிகேஷனையும் வடிவமைக்க உள்ளனர். இதனால் மொபைல் மூலமும் தகவல்களை தெரிவிக்கலாம்.

இவர்களது முயற்சிக்கு குஜராத் தொழில்நுட்பப் பல்கலைக் கழகம் தொழில்நுட்ப உதவி செய்துள்ளது. கிரவுட்ஃபண்டிங் மூலமாக நிதி திரட்டும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது.

இந்த இணையதளத்தில் ஹோட்டல்கள், உணவு விடுதிகள், திருமண மண்டபங்கள் மற்றும் உணவு சமைத்து தரும் தனியார் நிறுவனங்கள் அனைத்தும் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் லாப நோக்கில்லாத தொண்டு நிறுவனங்களும் அதன் தன்னார்வலர்களும் இணைக்கப்பட்டுள்ளனர். தன்னார்வலர்கள் மூலம் கூடுதலாக சமைக்கப்பட்டு வீணாகிவிடும் என கருதப்படும் உணவுகள் சேகரிக்கப்பட்டு தேவையானவர்களுக்கு அளிக்கப்படுகிறது.

நிறுவனங்களுக்கான சமூக பொறுப்பு (சிஎஸ்ஆர்) குறித்த சமீபத்திய அறிக்கையில் நிறுவனங்கள் பசியை போக்கும் நடவடிக்கையும் எடுக்கவேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. நிறுவனங்கள் தங்கள் நிறுவன விழாக்களில் மீதமாகும் உணவு குறித்து தகவல் தெரிவித்தால் அவற்றை தேவையானவர்களுக்கு அளிக்க முடியும் என்று ரஜாவத் குறிப்பிட்டார். சமைக்கப்பட்ட உணவுகள் விரைவில் கெட்டுவிடும் எனவே அவற்றை வெகு விரைவில் விநியோகிக்க வேண்டியுள்ளது.

அக்ஷய திருதியை அன்று மட்டும் ஜெய்ப்பூரில் நடைபெற்ற 16 திருமண மண்டபங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட உணவு மூலம் 10 ஆயிரம் பேர் சாப்பிட்டதாக ரஜாவத் கூறினார்.

பசியைப் போக்குவதோடு உணவு வீணாவதால் ஏற்படும் சூழல் கேட்டையும் இவர்கள் தடுக்கின்றனர். பசியாறியதால் நல்ல சமுதாயம் உருவாகவும் வழியேற் படும். தனியொருவனுக்கு உணவில்லை யெனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்றான் மகாகவி பாரதி. உணவில்லாமல் ஏங்குவோருக்கு இணையம் மூலம் வழியேற்பட்டால் அந்த தொழில்நுட்ப புரட்சியை பாரதியும் வரவேற்பாரே!

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

11 mins ago

இந்தியா

13 mins ago

சினிமா

19 mins ago

ஓடிடி களம்

51 mins ago

கல்வி

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்