நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்கக் கோரியும் மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் மாணவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
மருத்துவப் படிப்புக்காக உச்ச நீதிமன்றம் வரை சென்று போராட்டத்தில் ஈடுபட்ட அரியலூர் மாணவி அனிதா கடந்த 1-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அதைத் தொடர்ந்து நீட் தேர்வுக்கு தடை விதிக்க வேண்டும்; மாணவி அனிதாவின் மரணத்துக்கு நியாயம் வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 6-வது நாளாக இன்றும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
மதுரையில் கூடிய மாணவர்கள்
இந்நிலையில் வியாழக்கிழமை காலையில் மதுரை தமுக்கம் மைதானத்தில் மாணவர்களும் இளைஞர்களும் இணைந்து நீட் தேர்வுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். நீட் தேர்வுக்கு எதிராக சமூக வலைதளங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில் அங்கு ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஒன்றுகூடினர்.
'வீர மங்கை அனிதாவுக்கு வீர வணக்கம்' என்று அவர்கள் கோஷமிட்டனர். தமுக்கம் மைதானத்தில் உள்ள தமிழன்னை சிலை மீது ஏறி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.
போராட்டம் நடத்துவதற்கான அனுமதி பெறப்படவில்லை என்று கூறி போலீஸார் அப்புறப்படுத்தலில் ஈடுபட்டனர்.
தமுக்கம் மைதானத்துக்குள் நுழைய பல்வேறு நுழைவு வாயில்கள் இருப்பதால், தொடர்ந்து தன்னெழுச்சியாக மாணவர்கள் வந்த வண்ணம் இருந்தனர். ஆனாலும் போலீஸார் ஆங்காங்கே நின்று அவர்கள் அனைவரையும் போலீஸ் வாகனத்தில் ஏற்றினர்.
இதனால் காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. ஆயினும் போலீஸார் அவர்களைக் குண்டுகட்டாகத் தூக்கிச் சென்று போலீஸ் வாகனங்களில் அழைத்துச் சென்றனர்.
திருநெல்வேலியில் தொடரும் போராட்டம்
அனிதா மரணத்திற்கு நீதி வேண்டியும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் சங்கரன்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 300-க்கும் மேற்பட்டோர் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
வகுப்புகளைப் புறக்கணித்த வேலூர் மாணவர்கள்
நீட் தேர்வுக்கு எதிராக வேலூர் தந்தை பெரியார் அரசு பொறியியல் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் உள்ளிருப்புப் போராட்டம்
சென்னை புதுக் கல்லூரி மாணவர்கள் நீட் தேர்வை எதிர்த்து கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் கல்லூரிக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கோவையில் வழக்கறிஞர் சங்கம் போராட்டம்
சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி கோவை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் இன்று காலை 11 மணிக்கு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
விளையாட்டு
39 mins ago
இந்தியா
57 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஆன்மிகம்
1 hour ago
கருத்துப் பேழை
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
உலகம்
2 hours ago