ரூ.920 கோடி செலவில் பசுமை காலநிலை மாற்ற எதிர்வுணர்வு திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு  

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமை காலநிலை மாற்ற எதிர்வுணர்வு திட்டம் 920 கோடி செலவில் செயல்படுத்தபட உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மாநில வன உயிரின வாரியக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (நவ.16ம்) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "காடுகள் இன்றி நீர்வளம் சிறக்காது! நீர்வளம் இன்றி வேளாண்மை வளப்படாது! எனவே, வளமான எதிர்காலத்திற்கு காடுகள் அவசியம். காடுகள் வளம்பெற வன உயிரினங்கள் அவசியம்” இந்த ஆட்சி பொறுப்பேற்ற பின் வன உயிரின வாரியக் கூட்டத்தை முதன்முறையாக நடத்துவதில் நான் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். மாநில வன உயிரின வாரியம் என்பது வன உயிரினப் பாதுகாப்பில் முக்கியக் கொள்கை முடிவுகளை எடுக்கக் கூடியது.

வன உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தின்படி பாதுகாக்கப்பட்ட வாழ்விடங்களைத் தேர்வு செய்தல், வன உயிரினங்களின் மேன்மை, அங்கு வாழக்கூடிய வனஉயிரினங்கள் மற்றும் தாவர இனங்களின் பாதுகாப்பு தொடர்பான உரிய கொள்கை முடிவுகளை வகுத்தல், வனஉயிரின பாதுகாப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அட்டவணையில் தேவைப்படும் திருத்தங்களை மேற்கொள்ளுதல், வனப்பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்களின் தேவைகளைக் கேட்டறிந்து, ஒரு இணக்கமான சூழலை ஏற்படுத்தி, வனஉயிரினப் பாதுகாப்புக்குக் குந்தகமின்றிச் செயல்படுத்துதல் போன்ற இதர இனங்கள் பற்றி விவாதித்தல், உரிய ஆலோசனைகளை பெற்று நடைமுறைக்கு கொண்டு வருதல், வன உயிரினப்பாதுகாப்பு தொடர்பாக மாநில அரசு இந்த வாரியத்தில் முன்வைக்கும் இனங்கள் பற்றி முடிவெடுப்பது போன்றவை இந்த வாரியத்தினுடைய முக்கிய பணிகள்.

இந்த அரசு பொறுப்பேற்ற கடந்த ஒன்றரை ஆண்டுகளில் வன உயிரினப் பாதுகாப்பில் தமிழ்நாட்டை முன்னணி மாநிலமாக உருவாக்குவதற்குப் பல்வேறு பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தமிழ்நாட்டிலுள்ள பல்லுயிர் பாரம்பரியம் என்பது நீங்கள் அனைவரும் அறிந்ததே. சங்ககாலம் தொடங்கி, நமது பண்டைய இலக்கியங்கள் அனைத்திலும், ஆறுகள், மலைகள், தாவரங்கள், விலங்குகள் குறித்த முக்கியத் தகவல்கள் இடம் பெற்றுள்ளன.

இந்திய தேசிய பல்லுயிர் ஆணைய அறிக்கையின்படி தாவரங்களின் அடிப்படையில் தமிழ்நாட்டிலுள்ள தாவரங்களின் வளமை என்பது இந்தியாவிலேயே முதன்மையாக உள்ளது. இவை மட்டுமின்றி வன உயிரினங்களிலும் 5 புலிகள் காப்பகங்கள், 5 யானைகள் காப்பகங்கள், 3 உயிர்க்கோளகக் காப்பகங்கள், 5 தேசிய பூங்காக்கள், 17 பறவைகள் காப்பகங்கள், 17 காட்டுயிர்க் காப்பகங்கள் என நமது மாநிலம் வனஉயிரின வளமைமிக்க ஒரு மாநிலமாகத் திகழ்கிறது. இந்தப் பெருமைமிகு பாரம்பரியத்தை, வளத்தை மேம்படுத்துவதே நமது முக்கியப் பணி. கடந்த ஒன்றரை ஆண்டுகளில் இந்த அரசு கீழ்க்கண்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இந்தியாவிலேயே முதன்முதலாக தேவாங்கு உயிரினத்திற்கென்று காப்பகம் கடவூர் வனத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன்முதலாக கடல்பசுக்களைப் பாதுகாக்க கடல்பசு பாதுகாப்பகம் மன்னார் வளைகுடாவில் அமைக்கப்பட்டுள்ளது. கழுவேலி பறவைகள் காப்பகம், அகத்தியர்மலை யானைகள் காப்பகம், நஞ்சராயன் குளம் பறவைகள் காப்பகம், காவேரி தெற்கு காட்டுயிர்க் காப்பகம் போன்றவற்றை நமது அரசு குறுகிய காலத்தில் அறிவித்துள்ளது என்பது பெருமைக்குரியது. நமது பெருமைமிகு பல்லுயிர் வளங்களையும் பாரம்பரியங்களையும் பாதுகாப்பதற்கு இந்த முயற்சிகள் பெருமளவு உதவி செய்யும்.

இன்று “தமிழ்நாட்டினுடைய வன உயிரின வளமை” (Tamil Nadu Wild life Wealth) குறித்த புத்தகத்தை வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இச்சிறு புத்தகம் இந்த அரசு மேற்கொண்டு வரக்கூடிய வன உயிரினப் பாதுகாப்பு முயற்சிகளை நாம் அறிந்து கொள்ள பெரிதும் உதவும் என நான் நம்புகிறேன். மேலும் யானைகள் உயிரிழப்பு குறித்து அறிவியல் பூர்வமாகத் தகவல்களை தெரிந்துகொள்ளவும், வெளிப்படைத் தன்மையை கொண்டு வரவும், “யானைகள் இறப்பில் பின்பற்ற வேண்டிய தணிக்கை முறைகள்” (Elephant Death Audit Frame Work) குறித்தும் இங்கு இந்த புத்தகம் வாயிலாக வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

இத்தகைய புத்தகம் இந்தியாவிலேயே முதன்முறையாக வெளியிடப்படுவதாக அறிகிறேன். அதற்கான என்னுடைய பாராட்டுகள். வனவிலங்குகளின் வேட்டை, கடத்தல் உள்ளிட்ட பிற குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கு சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு வன மற்றும் வன உயிரின குற்றத் தடுப்பு பிரிவு நமது அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. இதன்கீழ், மாநிலத்தில் 3 மண்டலங்களிலும் குற்றத்தடுப்புப் பிரிவுகள் அமைத்து அரசு ஆணையிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு யானைகளைக் கண்காணிக்கும் வனக்காவலர்களை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவதற்கும், வேட்டைத்தடுப்பு முகாம்களை அமைப்பதற்கும், ஆளில்லா வாகனங்கள், ஆளில்லா விமானங்கள், இரவு பார்வை கேமராக்களை வாங்குவதற்கும், வேட்டைத் தடுப்புப் படைகளை உருவாக்குவதற்கும், யானைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துவதற்கும் என 2 கோடியே 41 லட்சம் ரூபாயை அனுமதித்துள்ளது. இது போன்ற ஒரு முறையான அறிவியல் அணுகுமுறை மூலம் மனிதர்கள் யானை மோதல்களை குறைக்க முடியும் என நான் நம்புகிறேன்.

இது மட்டுமின்றி வன உயிரின வாழ்விடங்களை மேம்படுத்தும் பொருட்டு, சுமார் 282 எக்டேர் பரப்பளவுள்ள வனப்பரப்பில் அந்நிய களைத்தாவரங்கள் அகற்றப்பட்டுள்ளன. இந்தப் பணியானது வனப்பகுதிகளில் வரும் ஆண்டுகளில் தொடர்ந்து நடைபெறும் என்பதையும், அதன் மூலம் வன உயிரினங்களின் வாழ்விடங்கள், அதன் ஆரம்ப இயற்கைச் சூழலுக்கு கொண்டுவரப்பட்டு, வாழ்விடங்களின் தரம் மேம்படுத்தப்படும் என்பதையும் நான் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த ஆண்டு முதல் நமது அரசு தமிழ்நாடு பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் பசுமை காலநிலை மாற்ற எதிர்வுணர்வு திட்டத்தை 920 கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பில் ஜப்பானிய பன்னாட்டு கூட்டுறவு நிறுவன உதவியுடன் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தில் பல்லுயிர்ப் பாதுகாப்பு இயற்கை வள ஆதாரங்களை அதிகரித்தல், சூழல் மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் வனநிலம் மற்றும் வன உயிரின வாழ்விடங்களின் தரம் குன்றுதலை தடுத்தல், நிர்வாகக் கட்டமைப்புகளை வலுப்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதுமட்டுமின்றி, இந்த ஆண்டு முதல் நபார்டு நிதி உதவியுடன் தரம் குன்றிய வன நிலப்பகுதிகளை மீளுருவாக்கம் செய்தல், மீளுருவாக்கத் திட்டத்திற்கு 481 கோடியே 14 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

மேலே கூறப்பட்ட பல்வேறு வனம் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு முன்னோடி முயற்சிகள், நமது மாநிலத்தை உலக அளவில் முக்கிய இடத்திற்கு கொண்டு செல்லும். வன உயிரினங்களை பாதுகாக்க பல முன்னோடி முயற்சிகளை முனைப்புடன் செயல்படுத்த அர்பணிப்புணர்வுடன் பணியாற்றிய சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை அதிகாரிகள் மற்றும் களப்பணியாற்றிய அலுவலர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை இந்தத் தருணத்தில் அன்போடு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் அர்ப்பணிப்பு மிக்க பணியாளர்கள், பொதுநல அமைப்புகள் ஆகிய அனைத்துத் தரப்பினரின் பங்களிப்பு மூலமாகவே இவையனைத்தும் சாத்தியமாகி வருகிறது. இந்த முயற்சிகளுக்கு உறுதுணையாக நல்ல பல ஆலோசனைகளை நல்கி வருகின்ற அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். வன உயிரினப் பாதுகாப்பிலும், இயற்கை வளங்களைப் பாதுகாப்பதிலும் நமது மாநிலம் எப்போதும் முன்னோடி மாநிலமாக திகழும், அதற்கு இதுபோன்ற கூட்டங்கள் உதவும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்." இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வணிகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

க்ரைம்

8 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

8 hours ago

சினிமா

10 hours ago

கருத்துப் பேழை

10 hours ago

மேலும்