திருவள்ளூர்: மருத்துவர்கள், செவிலியர்கள், துப்புரவு ஆய்வாளர்கள் உள்ளிட்டோருக்கு 87 ஆண்டுகளாக சுகாதாரம், நோய் தடுப்பு தொடர்பான பயிற்சியை அளித்து வருகிறது பூவிருந்தவல்லியில் உள்ள பொதுசுகாதார நிறுவனம்.
தமிழக பொதுசுகாதாரத் துறை மற்றும் நகராட்சி நிர்வாகத் துறையைச் சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேர் ஆண்டுதோறும் இங்கு பயிற்சி பெறுகின்றனர். இந்த நிறுவனம் அக். 1 அன்று தனது 87-வது வயதை பூர்த்தி செய்தது. இதுகுறித்து நிறுவனத்தின் துணை இயக்குநர் மருத்துவர் செந்தில்குமார் நம்மிடம் தெரிவித்ததாவது:
தமிழக அரசின் பொதுசுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து துறையின் கீழ் இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. திருவள்ளூர், பூந்தமல்லி, செய்யாறு, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் ஆகிய 6 சுகாதார மாவட்டங்களைச் சேர்ந்த ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிபுரியும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்டவர்களுக்கும் மாநில அளவில் வட்டார மருத்துவ அலுவலர்கள், மாநகராட்சி, நகராட்சி மருத்துவ அலுவலர்கள், துப்புரவு அலுவலர்கள் உள்ளிட்டோருக்கும் சுகாதாரம் மற்றும் அரசின் திட்டங்கள் தொடர்பான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
இந்நிறுவன வளாகம், 1935-ம் ஆண்டு அமெரிக்காவின் ராக்பெல்லர் அறக்கட்டளையால், ‘சுகநலப்பகுதி’ என்ற பெயரால் தொடங்கப்பட்டது. சுகாதாரத்தை மேம்படுத்தும் பல்வேறு ஆராய்ச்சிகள் இங்கு நடந்தன. தொடர்ந்து, இந்திய அரசால் 1943-ல் அமைக்கப்பட்ட போர் குழுவின் பரிந்துரைகள் பரிசோதனை முறையில் இங்கே செயல்படுத்தப்பட்டன. பின்னர் 1954-ல் போர்டு அறக்கட்டளையின் 3 பயிற்சி மையங்களில் ஒன்றாக இருந்தது. இந்நிறுவனத்தில்தான், 1956-ல் குறைந்த செலவில் கழிப்பறைகளை கட்டிக் கொடுப்பதற்காக ஆராய்ச்சி மற்றும் செயல்திட்டம் தொடங்கியது. இதன்மூலம் எளிய வடிவமைப்பு கொண்ட கழிப்பறைகள் பயன்பாட்டுக்கு வந்தன.
இந்நிலையில், 1961-ம் ஆண்டு தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இந்நிறுவனம் வந்தது. இங்கு இருந்த நலப்பிரிவு, புத்தறிவு பயிற்சி மையம், ஆராய்ச்சி மற்றும் செயல்திட்டம் ஆகியவற்றை ஒருங்கிணைத்து பொது சுகாதார நிறுவனமாக தமிழக அரசு கடந்த 1966-ல் தொடங்கியது. அதுமட்டுமல்லாமல், கடந்த காலங்களில் தேசிய குடும்ப நலப் பயிற்சி மையம், தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாடு நிறுவனம் உள்ளிட்டவை சார்பில் தமிழகம், கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, அந்தமான் நிக்கோபார் மற்றும் லட்சத்தீவுகளின் மருத்துவர்களுக்கு கருவில் பாலினம் அறிதல் மற்றும் கருக்கொலை தடுப்பு சட்டச் செயலாக்கம், எச்.ஐ.வி- எய்ட்ஸ், தொழில் முறை மேம்பாட்டு கல்வி ஆகிய பயிற்சிகள் வழங்கப்பட்டன. இவ்வாறு தெரிவத்தார்.
தமிழகத்தில் கரோனா பெருந்தொற்று எட்டிப்பார்க்கத் தொடங்கிய காலத்தில், வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகளை தனிமைப்படுத்தும் முதல் இடமாகவும் இருந்தது. இந்த பொது சுகாதார நிறுவனம்தான். சென்னை பெருவெள்ளம், வார்தா, தானே மற்றும் கஜா புயல் உள்ளிட்ட பேரிடர்களின் போதும் தன் சேவையை ஆரவாரமின்றி செய்துள்ளது. அக்.1-ல்87 ஆண்டை பூர்த்தி செய்து பொதுமக்களின் நல் வாழ்வுக்காக நூற்றாண்டை நோக்கி தனது சாதனை பயணம் மேற்கொண்டு வருகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
2 mins ago
சினிமா
5 mins ago
வலைஞர் பக்கம்
9 mins ago
சினிமா
14 mins ago
சினிமா
19 mins ago
இந்தியா
27 mins ago
க்ரைம்
24 mins ago
இந்தியா
30 mins ago
தமிழகம்
52 mins ago
இந்தியா
59 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago