விருத்தாசலம் | இந்திரா நகரில் சொத்து வரி வசூலித்த நகராட்சி நிர்வாகமே மாற்று இடம் தர குடியிருப்புவாசிகள் கோரிக்கை

By என்.முருகவேல்

கடலூர்: விருத்தாசலம் நகரில் முல்லா குட்டையை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்ட இந்திராநகர் பகுதியில் வசித்தவந்தவர்களிடம் நகராட்சி நிர்வாகம் சொத்து வரி வசூலிப்பில் ஈடுபட்டு வந்ததால் நகராட்சி நிர்வாகமே மாற்று இடமும் இழப்பீடும் தரவேண்டும் குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரின் 15-வது வார்டில் 4.5 ஏக்கர் பரப்பளவு கொண்ட முல்லா குட்டையை 40 வருடங்களுக்கு முன் ஆக்கிமித்து சிலர் குடியிருப்பும், வணிக வளாகமும் கட்டி வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் விருத்தாசலம் பகுதியைச் சேர்ந்த பாபு என்பவர் ஆக்கிரமிப்புத் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் காரணமாக, ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 2018-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

இருப்பினும் ஆக்கிரமிப்பு அகற்றப்படாததால், மனுதாரர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடுத்தார். அதையடுத்து ஆக்கிரமிப்பை செப்.9-ம் தேதிக்குள் அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, ஆக்கிரமிப்பு அகற்றும் பணியை விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியர் முன்னிலையில், நகராட்சி நிர்வாக கட்டிட பொறியாளர் சேகர் தலைமையில் ஆக்கிமிப்புக் கட்டிடங்கள் இடிக்கும் பணி கடந்த 20 நாட்களுக்கு மேலாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் ஆக்கிரமிப்பாளர்கள் கட்டிட இடிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர். அவர்களுக்கு ஆதரவாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளரும், கடலூர் மாநக துணை மேயருமான தாமரைச்செல்வன், நேற்று விருத்தாசலம் சார் ஆட்சியரை சந்தித்து, ஆக்கிரமிப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அணுகியிருப்பதால், கட்டிட இடிக்கும் பணி நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றவேண்டும் எனக் கூறி சார் ஆட்சியர் பழனி மறுத்துவிட்டார்.

இதனிடையே, குடியிருப்புவாசிகள் பேசும்போது, "ஆக்கிரமிப்புக்குள்ளாகியிருக்கும் 15-வது வார்டில் நகராட்சி நிர்வாகம் இந்த ஆண்டு ஐனவரி மாதம் வரை சொத்து வரி வசூலித்துள்ளனர். கிராம நிர்வாக அலுவலர் கட்டிடங்களுக்கு ரசீது வழங்கியுள்ளார். 2007-ம் ஆண்டு கட்டப்பட்ட வணிகக் கட்டிடங்களுக்கு நகராட்சி கட்டிடப் பொறியாளர் ஒப்புதல் வழங்கியுள்ளார். குடிநீர் வரி வசூத்துள்ளனர். மின் இணைப்பு கொடுத்துள்ளனர். இவை அனைத்தும் செய்து கொடுத்து, அவர்களுக்கு தங்குவதற்கு நம்பிக்கை ஏற்படுத்திக் கொடுத்த நகராட்சி நிர்வாகமே இந்த நிகழ்வுக்கு பொறுப்பேற்க வேண்டும்.

நகராட்சி நிர்வாகம் ஒவ்வொரு ஆண்டும் முகாம் போட்டு வரி வசூலித்தனர். தற்போது யார் தலமையில் கட்டிடங்கள் இடிக்கப்படுகிறதோ, அவர் தான் கட்டிடப் பொறியாளர் தான் கட்டிடம் கட்டுவதற்கும் ஒப்புதல் அளித்தார். இப்போது திடீரென இடிக்கவேண்டும் என்றால் நாங்கள் எங்கே செல்வது" என கண்ணீர் மல்க வலியுறுத்தினர்.

ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து விளக்கம் அளித்த நகராட்சி ஆணையர், "அப்போதிருந்தவர்கள், அங்குள்ளவர்களின் வாழ்வாதாரத்திற்காக அடிப்படை வசதிகள் மேற்கொள்ள வரி வசூலித்திருக்கலாம். ஆனால் நகராட்சி நிர்வாகம் முறையாக அவர்களுக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளது. கட்டிடங்களுக்கும் ஒப்புதல் அளித்திருக்க வாய்ப்பில்லை" என்றார். இதேபோல், கட்டிடப் பொறியாளர் சேகர், "ஒப்புதல் இல்லாமல் கட்டப்பட்ட கட்டிடங்களுக்கு நோட்டீஸ் வழங்கினோம்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

23 mins ago

தமிழகம்

3 mins ago

இந்தியா

38 mins ago

இந்தியா

56 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

உலகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்