வாகனங்களை அகற்றாமல் சாலை அமைக்கப்பட்ட விவகாரத்தில் மாநகராட்சி உதவி பொறியாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் மற்றும் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இதில், பேரி காளியம்மன் கோயில் தெருவில் சாலை அமைக்கும் பணியின் போது அங்கு சாலையோரம் பழுதாகி நிறுத்தப்பட்ட இரு சக்கர வாகனத்தை அகற்றாமல் அப்படியே சிமென்ட் கலவைகள் பதிந்தவாறு சாலை போடப்பட்டது.
அதேபோல சாய்நாதபுரம் பொன்னியம்மன் கோவில் தெருவில் நிறுத்தப்பட்டிருந்த ஜீப் டயர்கள் புதையும்படி சாலை அமைக்கப்பட்டது. இது குறித்து வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து வெளியான செய்திகள் அடிப்படையில் சம்பவ இடத்தில் மாநகராட்சி மேயர் சுஜாதா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதையடுத்து, இரு சக்கர வாகனம் மற்றும் ஜீப்பை அகற்றி விட்டு அங்கு சாலை அமைக்க உத்தரவிட்டனர்.
பின்னர், வாகனங்களை அகற்றாமல் சாலை அமைக்கப்பட்டத்தை முறையாக ஆய்வு செய்யாத 3-வது மண்டல உதவி பொறியாளர் பழனியை மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில், மாநகராட்சி 2-வது மண்டலத்துக்கு உட்பட்ட சத்துவாச்சாரி கணபதி நகர் பூங்கா அருகே சாலையில் நடு பகுதியில் மின் கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மின்கம்பத்தை அகற்றாமல் அங்கே சாலை அமைக்கப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் இரு சக்கர வாகனம், மிதிவண்டிகளில் யாராவது வந்தால் விபத்து நேரிடும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டினர். இதுபோல பல இடங்களில் மின் கம்பங்கள் அப்புறப்படுத்தாமல் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது மட்டுமில்லாமல் இந்த பணியை செய்த தனியார் நிறுவனங்களுக்கும் கடும் அபராதம் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் கோரிக்கைஎழுந்துள்ளது. வேலூர் மாநகராட்சியில் நடந்து வரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளை கண்காணிக்க தனியார் நிறுவனம் சார்பில் ஓய்வு பெற்ற பொறியாளர்களை கொண்ட திட்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் மாநகராட்சி பகுதியில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்ய வேண்டும். ஆனால், தற்போது நடந்த சாலை பணிகளை பார்த்தால் கண்காணிப்பு குழுவினர் பணிகளில் திருப்தி இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
இந்த திட்ட கண்காணிப்பு குழு கலைக்கப்பட்டு புதிய ஆட்களை நியமிக்க தனியார் நிறுவனத்துக்கு மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் உத்தரவிட்டுள்ளார். மேலும், மாநகராட்சி பகுதியில் மின் கம்பங்களை அகற்றாமல் சாலை போடப்பட்டுள்ளது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கணக்கெடுத்து, அவற்றை அகற்ற நடவடிக்கை எடுத்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
சினிமா
20 mins ago
கருத்துப் பேழை
16 mins ago
சுற்றுலா
53 mins ago
சினிமா
58 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
வணிகம்
3 hours ago