ஜூலை 11-ல் திட்டமிட்டபடி பொதுக்குழு நடக்குமா? - இபிஎஸ், ஓபிஎஸ் மனுக்கள் மீது இன்று விசாரணை

By செய்திப்பிரிவு

சென்னை/புதுடெல்லி: ஒற்றைத் தலைமை விவகாரத்தையடுத்து அதிமுகவில் நீடிக்கும் குழப்பம் தொடர்கிறது. எனவே, பழனிசாமி தரப்பு திட்டமிட்டுள்ளபடி வரும் 11-ம் தேதி பொதுக்குழு நடக்குமா என்று தொண்டர்களிடையே சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் மனுக்கள் மீது இன்று (ஜூலை 6) விசாரணை நடைபெற உள்ளது.

அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, முன்னாள் முதல்வர் பழனிசாமி, உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

இந்நிலையில், பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள கூடுதல் மனுவில், ‘‘அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தின் நடவடிக்கைகளால் கட்சியின் செயல்பாடுகள் முடங்கியுள்ளன.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை என்பது, ஒட்டுமொத்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஒருமித்த கருத்தாகும். இந்நிலையில், ஒற்றைத் தலைமை கருத்து எழுந்தவுடன், கடந்த ஜூன் 23-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவைத் தடுக்க அவர் பல்வேறு வழிகளில் முயன்றார்.

சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி, பொதுக்குழுவுக்கு தடை விதிக்குமாறு ஆவடி காவல் துறை ஆணையருக்கு கடிதம் அனுப்பினார். ஆனால், எந்த அசம்பாவிதமும் இல்லாமல் பொதுக்குழு அமைதியாக நடந்தது.

முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா பாணியில் ஒற்றைத் தலைமையுடன், கட்சி சிறப்பாக வழிநடத்தப்பட வேண்டும் என்பதே கட்சி நிர்வாகிகளின் ஒருமித்த எண்ணமாகும். ஆனால், கட்சித் தொண்டர்கள், தங்களது உணர்வுகளையும், கருத்துகளையும் வெளிப்படுத்தி விடக்கூடாது என்ற எண்ணத்தில் ஓ.பன்னீர்செல்வம் செயல்படுகிறார்.

உள்ளாட்சி இடைத் தேர்தலில் கட்சி சார்பில் வேட்பாளர்களை நிறுத்த, அவர் உரிய ஒத்துழைப்பு தரவில்லை. அது தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்க அழைப்பு விடுத்தும், அவர் பங்கேற்கவில்லை.

சம்பளம்கூட தர முடியவில்லை

கட்சியின் பொருளாளர் அவர்தான். கட்சி நிதியை அவர் விடுவிக்காததால், அதிமுக அலுவலக ஊழியர்களுக்கு சம்பளம்கூட கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு பொருளாளர் கடமையை செய்யாமல், கட்சியின் நலனைக் கெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த ஜூன் 23-ல் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தின் வாயிலாக, ஓ.பன்னீர்செல்வம் அதிமுக தொண்டர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் மத்தியில் செல்வாக்கையும், நம்பிக்கையையும் முற்றிலுமாக இழந்துவிட்டார். எனவேதான், அவர் எங்களுடன் இணைந்து செயல்பட மறுத்து வருகிறார்.

வரும் 11-ல் நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், ஒற்றைத் தலைமை குறித்து முடிவெடுப்பது உள்ளிட்ட தீர்மானங்கள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுக்குழு உறுப்பினர்களின் ஒப்புதல் கடிதம் மூலமாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்தான், தனக்குப் பிரச்சினை ஏற்படக்கூடாது என்பதற்காக வரும் 11-ம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுவுக்கும் தடை கோருகிறார்.

கட்சி விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டு, கட்சியின் செயல்பாடுகளையும், பொதுக்குழுவையும் முடக்க நினைக்கிறார். இது தொடர்பான அனைத்து ஆவணங்களும் இந்த மனுவுடன் சேர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு இபிஎஸ் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி தினேஷ் மகேஸ்வரி தலைமையிலான அமர்வில் இன்று காலை விசாரணைக்கு வரவுள்ளது. மேலும், அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் நத்தம் விஸ்வநாதன், பெஞ்சமின் ஆகியோர் தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு வழக்கும், இந்த வழக்குடன் சேர்த்து விசாரிக்கப்பட உள்ளது.

ஓபிஎஸ் மனு மீது விசாரணை

இதேபோல, ஜூலை 11-ல் நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்துள்ள மனுவை இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தனி நீதிபதி ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூன் 23-ல் நடந்த அதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில், ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக் கப்பட்டது.

மேலும், சிறப்புத் தீர்மானம் மூலம் அதிமுகவின் நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார்.

அடுத்த பொதுக்குழு ஜூலை 11-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, அதற்கான ஏற்பாடுகளை பழனிசாமி தரப்பினர் தீவிரமாக செய்து வரு கின்றனர்.

இந்நிலையில், ஜூலை 11-ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழுக் கூட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி, கட்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓ.பன்னீர்செல்வம், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், ‘‘ஜூன் 23-ம் தேதி நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் 23 தீர்மானங்கள் தவிர்த்து, வேறு புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக் கூடாது என உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்தது. ஆனால், சிறப்புத் தீர்மானம் மூலம் தமிழ்மகன் உசேனை நிரந்தர அவைத் தலைவராக தேர்வு செய்திருப்பது சட்டவிரோதம்.

அவைத் தலைவர் நியமனமே செல்லாது எனும்போது, ஜூலை 11-ம் தேதி மீண்டும் பொதுக்குழு நடைபெறும் என அவர் அறிவித்திருப்பதும் செல்லாது.

கட்சி விதிகளின்படி, முறைப்படி தேர்தல் மூலமாக தேர்வு செய்யப்பட்ட கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரின் பதவிக் காலம் 5 ஆண்டுகள் இருக்கும்போது, அந்தப் பதவிகளை தன்னிச்சையாக நீக்கிவிட்டு, மீண்டும் பொதுச் செயலாளர் பதவியைக் கொண்டுவர முடியாது.

பொதுக்குழுவைக் கூட்டும் அதிகாரம், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்கே உள்ளது. ஒருவேளை இந்தப் பதவிகளை நீக்க வேண்டுமெனில், இருவரும் இணைந்தே அறிவிக்க வேண்டும்.

மேலும், பொதுக்குழுக் கூட்டம் நடைபெறும் 15 நாட்களுக்கு முன்பாக, அனைத்து நிர்வாகிகளுக்கும் முறையாக அழைப்பு விடுக்க வேண்டும். ஆனால், கட்சியின் ஒருங்கிணைப்பாளரான எனக்கு ஜூலை 11-ம் தேதி நடைபெறும் பொதுக்குழுவுக்கான அழைப்பு நேற்று (ஜூலை 4) மாலைதான் கிடைத்துள்ளது.

தடை விதிக்க வேண்டும்

எனவே, உரிய விதிமுறைகளைப் பின்பற்றாமல் நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று கோரியுள்ளார்.

இந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வலியுறுத்தி, மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், வழக்கறிஞர்கள் சி.திருமாறன், ராஜலட்சுமி ஆகியோர், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பாக நேற்று ஆஜராகி, முறையீடு செய்தனர்.

இதையடுத்து, இந்த வழக்கை ஜூலை 6-ம் தேதி (இன்று) விசாரிப்பதாக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி ஒப்புதல் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ், இபிஎஸ் என இரு தரப்புமே சட்டப் போராட்டங்கள் நடத்தி வரும் சூழலில், பழனிசாமி தரப்பு திட்டமிட்டுள்ளபடி வரும் 11-ம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுமா என்று அதிமுக தொண்டர்களிடம் சந்தேகம் நிலவுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்