'அடுத்த 60 ஆண்டுகளுக்குள் மண்வளம் முற்றிலும் அழிந்துவிடும்' - 'மண் காப்போம்' விழாவில் ராஜ்நாத் சிங் கருத்து

By செய்திப்பிரிவு

கோவை: மண்வளத்தை பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உலக நாடுகள் முழுவதும் 30,000 ஆயிரம் கிலோ மீட்டர் மோட்டர் சைக்கிளில் பயணம் செய்து செவ்வாய்க்கிழமை தமிழகம் திருப்பிய சத்குரு ஜக்கி வாசுதேவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கடந்த மார்ச் 21-ம் தேதி லண்டனில் இருந்து 30,000 கி.மீ மோட்டார் சைக்கிள் பயணத்தை தொடங்கிய சத்குரு இதுவரை 650-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். சர்வதேச அளவில் தாக்கம் ஏற்படுத்தியுள்ள சத்குருவின் 'மண் காப்போம்' இயக்கத்திற்கு உலக அளவில் 320 கோடி பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுவரை 74 நாடுகள் இவ்வியக்கத்திற்கு ஆதரவு அளித்துள்ளன.

மேலும் இந்தியாவில் 8 மாநிலங்கள் தங்கள் மாநிலங்களில் மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக இவ்வியக்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. சத்தியமங்களத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்ட பிறகு, கோவை வந்த சத்குரு சூலூர் விமானப் படை தளத்தில் நடைபெற்ற ‘மண் காப்போம்’ இயக்க நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காணொளி வாயிலாக கலந்துகொண்டார்.

பாதுகாப்புத்துறை அமைச்சர் பேசுகையில், "உலக அளவில் அடுத்த 60 ஆண்டுகளுக்குள் மண் வளம் முற்றிலும் அழிந்துவிடும் என சர்வதேச விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள். அதனால் மண் அழிவைத் தடுக்க நாம் முக்கிய கவனம் செலுத்த வேண்டும். இதற்காக சத்குரு மண் காப்போம் என்ற இயக்கத்தை தொடங்கி பெரும் செயலை முன்னெடுத்திருப்பதற்கு எனது பாராட்டுக்கள்.

கலை, கலாச்சாரம், நாகரீகம், உணவுமுறை என அனைத்திற்கும் மண் தான் அடிப்படை. மண் தான் நம் சமூகத்தின் உயிராகவும் உள்ளது. இதுபோன்ற பெரும்பணிகளை சத்குரு தொடர்ந்து செயல்படுத்த எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

அந்தநிகழ்ச்சியில் சத்குரு ஜக்கி வாசுதேவ் பேசுகையில், "இந்த மண் காப்போம் இயக்கத்தின் பயணத்தில் கிட்டத்தட்ட 28,000 கிலோ மீட்டர் மோட்டார் சைக்கிள் பயணம் செய்துள்ளேன். எல்லா இடங்களிலும் மக்கள் சிறப்பான ஆதரவு அளித்தார்கள். 74 நாடுகள் மண் காப்போம் இயக்கத்தின் கொள்கைகளை செயல்படுத்துவோம் என உறுதியளித்துள்ளனர். 8 மாநிலங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன. இதுவரை 320 கோடிப்பேர் சமூக வலைத்தளங்கள் மூலம் மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதுபோன்ற ஒரு பேராதரவு இதுவரை எங்கும் நடந்ததில்லை.

ஒரு ஜனநாயக நாட்டில் மக்களுக்குத் தேவையான நீண்டகால பயன் பெறக்கூடிய திட்டங்களை நிறைவேற்ற வேண்டுமானால், அதற்கு அந்நாட்டு குடிமக்களின் ஆதரவு மிக மிக அவசியம். பொதுவாக எல்லா ஜனநாயக நாடுகளிலும் ஐந்தாண்டுகள் மட்டுமே ஒரு ஆட்சி நடைபெறுகிறது. அதனால் அரசியல் கட்சிகள் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு குறுகிய கால திட்டங்களை மட்டுமே நிறைவேற்ற நினைக்கின்றனர்.

மக்களும் அதேபோல் சின்னச் சின்ன விஷயங்களைத் தான் கோரிக்கைகளாக முன் வைக்கின்றனர். ஆனால், இப்போதுதான் முதல்முறையாக மண் வளத்தை மீட்டெடுக்க வேண்டுமென்ற நீண்டகால கோரிக்கையை மக்கள் தெரிவித்துள்ளனர்" என்றார்.

செவ்வாய்க்கிழமை காலை பண்ணாரி கோவிலில் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு சத்குருவை வரவேற்றனர். இதைத் தொடர்ந்து சத்தியமங்கலம் எஸ்.ஆர்.டி கார்னர், புங்கம்பள்ளி, செல்லப்பன் பாளையம், அன்னூர் பேருந்து நிலையம் என சூலூர் வரை பல்வேறு இடங்களில் ஆயிரக்கணக்கான தன்னார்வலர்களும், பொது மக்களும் சத்குருவை வரவேற்றனர்.

அதன்பிறகு, கோவை வந்த சத்குரு சூலூர் விமானப் படை நிகழ்ச்சியைத் தொடர்ந்து மாலையில் கொடிசியாவில் நடைபெற்ற உலக யோகா தின நிகழ்ச்சியிலும் பங்கேற்றார்.

மார்ச் 21-ம் தேதி லண்டனில் இருந்து வரலாற்று சிறப்புமிக்க இப்பயணத்தை தொடங்கிய சத்குரு ஐரோப்பா கண்டம் முழுவதையும் சுற்றி வந்தார். இங்கிலாந்து, ஜெர்மனி, செக் குடியரசு, இத்தாலி, சுவிட்சர்லாந்து, பிரான்ஸ், பெல்ஜியம் என கிட்டத்தட்ட முக்கியமான அனைத்து ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்ற சத்குரு அந்நாடுகளின் அரசியல் தலைவர்களோடும், விஞ்ஞானிகளோடும் கலந்துரையாடினார்.

இதை தொடர்ந்து, ஏப்ரல் 23-ம் தேதி இஸ்தான்புல்லில் இருந்து மத்திய கிழக்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான தனது பயணத்தை தொடர்ந்தார். அஸர்பைஜான், ஜோர்டான், சவுதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், துபாய், ஓமன் என பல்வேறு இஸ்லாமிய நாடுகளில் நடந்த நிகழ்ச்சிகளில் அரங்கே நிரம்பி வழியும் அளவிற்கு ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்டு ‘மண் காப்போம்’ இயக்கத்திற்கு ஆதரவு அளித்தனர்.

10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற துபாய் நிகழ்ச்சியில், அந்நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்றத் துறை அமைச்சர் மரியம் பின்ட் முகமது பங்கேற்று தங்களுடைய அரசின் முழு ஆதரவை தெரிவித்தார். இதேபோல், இஸ்லாமிய முஸ்லீம் லீக் அமைப்பும், பாலஸ்தீன பிரதமர் முகமது ஷ்டேயேவும் ‘மண் காப்போம்’ இயக்கத்திற்கு ஆதரவும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

பின்னர், ஓமன் நாட்டில் இருந்து கடல் வழியாக மே 29-ம் தேதி பாரத நாட்டிற்கு வந்த சத்குருவிற்கு குஜராத்தின் ஜாம்நகர் துறைமுகத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5-ம் தேதி புதுடெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சத்குருவின் பயணத்தை பாராட்டி பேசினார். மேலும், தனது மனமார்ந்த ஆதரவையும் தெரிவித்தார்.

குஜராத், ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரப்பிரதேசம், மஹாராஷ்ட்ரா, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களுக்கு பயணித்த சத்குரு அம்மாநில முதல்வர்களையும், சுற்றுச்சூழல் மற்றும் பிற துறை அமைச்சர்களையும் சந்தித்து மண் வளப் பாதுகாப்பிற்கான சட்டங்களை இயற்ற வலியுறுத்தியுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

23 mins ago

வணிகம்

48 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

கருத்துப் பேழை

3 hours ago

சுற்றுலா

4 hours ago

சினிமா

4 hours ago

மேலும்