தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20% இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத் திருத்தத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் அரசின் சட்டத் திருத்தத்துக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை புழல் சிறையில் உதவி சிறை அதிகாரியாகப் பணிபுரிந்து வரும் ஷாலினி என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘நான் நீலகிரி மாவட்டம் கேரள எல்லையில் உள்ள சேரம்பாடியில் 10-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் கல்வி பயின்றேன்.

மேல்நிலை வகுப்புகள் எங்களது ஊரில் இல்லாததால், அருகில் கேரளாவில் உள்ள பள்ளியில் 11 மற்றும் 12-ம் வகுப்புகளை ஆங்கில வழியில் படித்தேன்.

பின்னர் குரூப்-2 தேர்வு எழுதி, தமிழ் வழியில் படித்ததற்கான இடஒதுக்கீடு அடிப்படையில், சென்னை புழல் சிறையில் உதவி சிறைத் துறை அதிகாரியாகப் பணிபுரிந்து வருகிறேன்.

கடந்த 2021-ம் ஆண்டு குரூப்-1தேர்வுக்காக விண்ணப்பிக்கும்போது, தமிழ் வழியில் படித்தமைக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டைப் பெற, புதிய சட்டத் திருத்தத்தின்படி அனைத்து வகுப்புகளிலும் தமிழ்வழியில் பயின்றதற்கான சான்றிதழ்களைக் கோருகின்றனர்.

எனவே, தமிழக அரசின் இந்தசட்டத் திருத்தம், எனது அடிப்படை உரிமையைப் பாதிப்பதாக இருப்பதால், இந்த புதிய சட்டத் திருத்தம் செல்லாது என அறிவிக்க வேண்டும்’’ என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் டி.ராஜா, கே.குமரேஷ்பாபு ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆஜராகி, ‘‘தமிழக அரசின் புதிய சட்டத் திருத்தத்தின்படி, அனைத்து நிலைகளிலும் தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே 20 சதவீத இடஒதுக்கீட்டைப் பெற முடியும். மேலும், ஏற்கெனவே இதே கோரிக்கை தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை, உயர் நீதிமன்ற மதுரை கிளை தள்ளுபடி செய்துள்ளது’’ என வாதிட்டார்.

அதையடுத்து நீதிபதிகள், தமிழக அரசின் புதிய சட்டத் திருத்தத்தை எதிர்த்து ஷாலினி தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

9 mins ago

கருத்துப் பேழை

5 mins ago

சுற்றுலா

42 mins ago

சினிமா

47 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

வணிகம்

3 hours ago

மேலும்