நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் ரூ.270.15 கோடி மதிப்பிலான புதிய குடியிருப்புகள்: முதல்வர் திறந்து வைத்தார்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.270.15 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாட்டில் வாழும் நகர்ப்புற ஏழைக் குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வீட்டு வசதியினை ஏற்படுத்தி தரும் வகையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் 1970-ம் ஆண்டு தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் தொடங்கப்பட்டது. குடிசைப் பகுதிகளை மேம்படுத்துதல் தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியத்தின் முதன்மையான செயல்பாடாக இருந்தாலும், நகர்ப்புற ஏழைக் குடும்பங்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த வீட்டுவசதி வாய்ப்புகள் மட்டுமே போதுமானதாக இருக்காது.

அவர்களுக்கு குடிநீர், சுகாதாரம், மின்சாரம், போக்குவரத்து, கல்வி, மருத்துவ வசதி, திடக்கழிவு மேலாண்மை, பொது வெளியிடம் போன்ற போதுமான நகர்ப்புற வசதிகளுடன் வீட்டுவசதி ஏற்படுத்துவது அவசியம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் பெயரினை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என்று பெயர் மாற்றம் செய்து ஆணையிட்டார்.

இந்நிலையில், அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ், சென்னையில் உள்ள ஆலையம்மன் கோயில் பகுதி – I திட்டப்பகுதியில் சிதிலமடைந்த பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட்டு ரூ.41.20 கோடி மதிப்பீட்டில் தூண் தளம் மற்றும் 9 தளங்களுடன் 324 புதிய குடியிருப்புகள், ஆர்-3 காவல் நிலையம் திட்டப்பகுதியில் சிதிலமடைந்த பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட்டு ரூ.10.44 கோடி மதிப்பீட்டில் தூண் தளம் மற்றும் 4 தளங்களுடன் 80 புதிய குடியிருப்புகள்;

வியாசர்பாடி டி.டி பிளாக் திட்டப்பகுதியில் சிதிலமடைந்த பழைய குடியிருப்புகள் இடிக்கப்பட்டு ரூ.60.60 கோடி மதிப்பீட்டில் தூண் தளம் மற்றும் 13 தளங்களுடன் 468 புதிய குடியிருப்புகள் உட்பட திருச்சி, தேனி, திருநெல்வேலி,நாமக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ரூ.270.15 கோடி மதிப்பீட்டிலான தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் புதிய குடியிருப்புகளை முதல்வர் காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

இக்குடியிருப்புகள் ஒரு பல்நோக்கு அறை, படுக்கை அறை, சமையல் அறை மற்றும் கழிவறை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. அனைத்து குடியிருப்பு வளாகங்களிலும் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீரேற்று வசதி, மின் தூக்கிகள், சிறுவர் பூங்கா, மின்னாக்கிகள் மற்றும் தீயணைப்பு வசதிகள் ஆகிய வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், “நம் குடியிருப்பு நம் பொறுப்பு” திட்டத்தின் கீழ் அனைத்து திட்டப்பகுதிகளிலும் குடியிருப்போர் நலச்சங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து 4,880 பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகளையும், தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களிலுள்ள 761 பகுதிகளில் வசிக்கும் 23,826 பயனாளிகளுக்கு தனி வீடுகள் கட்ட தலா ரூ.2.10 லட்சம் வீதம் ரூ.500 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டிலான பணி ஆணைகளையும், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான 718 கிரையப் பத்திரங்களும், மனைகளுக்கான 220 கிரையப் பத்திரங்களும், என 938 பயனாளிகளுக்கு கிரையப் பத்திரங்களை முதல்வர் வழங்கினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

16 mins ago

வாழ்வியல்

48 mins ago

உலகம்

46 mins ago

தமிழகம்

56 mins ago

இந்தியா

59 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

க்ரைம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்