இலங்கை கடற்படையினர் பிடித்துச் சென்ற 7 மீனவர்கள் மற்றும் 89 படகுகளை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று அவர் எழுதிய கடிதத்தில், ''தங்கள் பாரம்பரிய பகுதியில், அமைதியாக மீன்பிடி தொழிலை செய்து வரும் அப்பாவி தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து கைது செய்யப்படுகின்றனர். இதை தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.
தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் முடிந்துள்ளது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமேஸ்வரம் மீன்பிடித் தளத்தில் இருந்து கடந்த 30-ம் தேதி ஒரு விசைப்படகில் 7 பேர் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அவர்களை 31-ம் தேதி அதிகாலை கைது செய்த இலங்கை கடற்படை கைது செய்து, தலைமன்னார் கொண்டு சென்றுள்ளது.
பாக் ஜலசந்தியில் தங்கள் பாரம்பரிய உரிமைகளுடன் மீன்பிடித்து வரும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசு விதிமீறல்களை நிகழ்த்தி வருகிறது. இலங்கை கடற்படையினர் கடந்த 2 ஆண்டுகளாக, அடிக்கடி தமிழக மீனவர்களை கைதுசெய்தும், அவர்கள் படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பறிமுதல் செய்தும் வருகின்றனர். இது தவிர, தற்போது தமிழக மீனவர்களின் பங்களிப்பின்றி, பிரச்சனைக்குரிய கச்சத்தீவில் அந்தோணியார் தேவாலயத்தை மீண்டும் கட்ட இலங்கை அரசு முயற்சித்து வருகிறது. இது மீனவர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - இலங்கை இடையிலான கடந்த 1974 மற்றும் 1976-ம் ஆண்டு ஒப்பந்தங்கள் அரசியலமைப்பு சட்ட ரீதியாக செல்லாது என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளதால், தற்போதைய சர்வதேச கடல் எல்லையும் கேள்விக்குரியதாக உள்ளது.
மேலும், இலங்கை அரசு பறிமுதல் செய்யும் மீன்பிடி படகுகள் மற்றும் உபகரணங்களை விடுவிக்காதது, தமிழக மீனவர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. இதனால் மீனவர்கள் விரக்தியடைந்துள்ளனர்.
எனவே, அந்த படகுகள் தொடர்ந்து சேதமடையாமல் தடுக்கும் வகையில், இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அப்படகுகளை உடனடியாக விடுவிப்பதை உறுதி செய்ய வேண்டும். இலங்கை உயர் மட்ட அளவில் பேசி, 7 மீனவர்கள் மற்றும் 89 படகுகளை காலதாமதமின்றி விடுவிக்க வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்'' என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
9 mins ago
தொழில்நுட்பம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
சினிமா
7 hours ago
தமிழகம்
8 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
இந்தியா
12 hours ago
இந்தியா
12 hours ago
சினிமா
12 hours ago