இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியால் இந்தியாவுக்கு பல ஆயிரம் கோடி ஜவுளி ஆர்டர்கள் கிடைக்க வாய்ப்பு: திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் தகவல்

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: அண்டை நாடான இலங்கையில் நிலவும் மோசமான பொருளாதார சூழலால், இந்தியாவுக்கு பலஆயிரம் கோடி ஜவுளி ஆர்டர்கள் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக திருப்பூர்ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூரின் மிக முக்கிய தொழில் பின்னலாடை. 2022 மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நிதி ஆண்டில் திருப்பூரின் மொத்தபின்னலாடை ஏற்றுமதி ரூ.33 ஆயிரத்து 525 கோடி. திருப்பூரில் உள்நாட்டு பின்னலாடை வர்த்தகமும் ரூ.30 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது.

கடந்த சில மாதங்களாக நூல் விலை உயர்வு மற்றும் மூலப்பொருட்கள் விலை உயர்வால் திருப்பூர் பின்னலாடை துறை பல்வேறு சிரமங்களை சந்தித்தது. அண்டை நாடான இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு செல்லும், ஜவுளி ஆர்டர்கள் இந்தியாவுக்கு வர வாய்ப்பு உள்ளதாகவும், திருப்பூரின் ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் தொழில்துறையினர் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத் தலைவர் ராஜா எம்.சண்முகம் கூறியதாவது: மத்தியஜவுளித் துறை அமைச்சர் பியூஷ்கோயலை சந்தித்து, திருப்பூர் பின்னலாடைத் துறையில் நிலவும் பிரச்சினைகளை முன்வைத்தோம். இந்தியா இன்றைக்கு 418 பில்லியன் டாலர் மதிப்பிலான பல பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது.

ஒட்டுமொத்த நாட்டின் ஏற்றுமதியில் திருப்பூரின் பங்களிப்பு 1.06 சதவீதம் ஆகும். 4.6 பில்லியன் டாலர் நமது பங்காகும். பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே திருப்பூர் பின்னலாடைத் துறை இதனை சாதித்துள்ளது.

கடந்த 18 மாதங்களாக மூலப்பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது. பஞ்சை பதுக்கி ஊக பேர வணிகத்தில் ஈடுபடுவதால், மாதந்தோறும் விலை ஏறிக்கொண்டேஇருக்கிறது. பஞ்சு விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இறக்குமதிக்கு 11 சதவீத வரியை நீக்கினால், பஞ்சு விலை கட்டுக்குள் வரும்.

உலக அளவில் இந்தியாவின் பனியன் உற்பத்தி உள்ளிட்ட ரெடிமேட் துணிகளின் பங்களிப்பு4 சதவீதம் ஆகும். இலங்கையின் பங்களிப்பும் 4 சதவீதம்தான். இலங்கையில் நிலவும் பொருளாதார சூழல், நமது தொழில்துறைக்கு சாதகமான அம்சங்களாக மாறலாம். ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளின் ஆர்டர் திருப்பூருக்கு கிடைக்கும். வியட்நாம், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் அதிகளவில் ஆர்டர் கையிருப்பு உள்ளது. இதனால் நமக்கு ஆர்டர்கள் வரப்பெறும். அனைத்து பிராண்டுகளுக்கும் வரும். ஒவ்வொரு நிறுவனமும் ‘தொழிலாளர் வளத்தை’ சரிவர கையாண்டால், அபரிமிதமான ஆர்டர் நமக்கு கிடைக்கும்.

திருப்பூரில் ஆர்டரை புக் செய்த பிறகுதான், நூலை தருவிப்போம். இந்தியாவில் மாதந்தோறும் விலை நிர்ணயிப்பது நமக்கு பாதகமான விஷயமாகும். நூல் விலை தொடர்ந்துஏறுவதால், திருப்பூர் தொழில்துறை நிலையான ஆர்டரைபெற முடியாத சூழல் நிலவுகிறது.

இலங்கைக்கு செல்லும் ஆர்டர் இந்தியாவுக்கு கிடைக்கப்பெற்றால், பல ஆயிரம் கோடி வர்த்தகம் திருப்பூருக்கு கிடைக்கும். அதற்கான அறிகுறிகள் தற்போது தென்படுகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

17 mins ago

வணிகம்

32 mins ago

தமிழகம்

26 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

56 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்