திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் ஆன்மிக நூலகம் அமைக்கும் பணிகள் தாமதம்: நன்கொடை புத்தகங்கள் வீணாவதாக பக்தர்கள் வேதனை

By கோ.கார்த்திக்

திருப்போரூர்: கந்தசுவாமி கோயிலில் ஆன்மிக நூலகம் அமைக்கும் பணிகள் தொடர்ந்து தாமதப்படுத்தப்பட்டு வருவதால், பக்தர்கள் மற்றும்சமூக ஆர்வலர்கள் நன்கொடையாக வழங்கிய 700-க்கும் மேற்பட்ட புத்தகங்கள் பயன்படுத்தப்படாமல் வீணாகி வருவதாகப் பக்தர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்த சுவாமி கோயிலில் சுவாமி தரிசனத்துக்காகக் காத்திருக்கும் பக்தர்களிடம், புத்தகவாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்துவதற்காகக் கோயில் வளாகத்தில் உள்ள கலையரங்கத்தில் ஆன்மிக நூலகம் அமைக்க கந்தசுவாமி கோயில் நிர்வாகம் கடந்த 2016-ம் ஆண்டு முடிவு செய்தது.

இதையடுத்து, நூலகத்துக்காக ஆன்மிக நூல்கள் மற்றும் ஆன்மிகம் சார்ந்த புத்தகங்களை நன்கொடையாக வழங்கும்படி கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டது.

இதன்பேரில், இந்து சமயம் சார்ந்த நூல்கள் மற்றும் பக்திக் கதைகள், ஸ்லோகம், மகான்களின் வாழ்க்கை வரலாற்று நூல்கள், சித்தர்கள் இயற்றிய பக்தி பாடல்கள் அடங்கிய புத்தகம், தமிழ் இலக்கிய நூல்கள், சைவ மற்றும் வைணவ நூல்கள், புராணங்கள், இதிகாசங்கள் தொடர்பான பல்வேறு புத்தகங்களை வெளியூர் மற்றும் உள்ளூர் பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் வழங்கினர்.

ஆனால், ஆன்மிக நூலகம் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு 5 ஆண்டுகள் அதற்கான பணிகள் தொடர்ந்து தாமதப்படுத்தப்பட்டு வருகின்றன. இதனால், பக்தர்கள் நன்கொடையாக வழங்கிய புத்தகங்கள் யாருக்கும் பலன் அளிக்காமல் வீணாகி வருவதாகப் பக்தர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். அதனால், உடனடியாக நூலகம் அமைக்க வேண்டும் எனப் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கந்தசுவாமி கோயிலின் உள்ளூர் பக்தர்கள் கூறும்போது, "நூலகப் பணிகள் தொடர்ந்து தாமதிக்கப்பட்டு வருவதால், நன்கொடை மூலம் 400 மற்றும்கோயில் நிர்வாகம் சார்பில் 300 என நூலகத்துக்காக வழங்கப்பட்ட 700 புத்தகங்கள், யாருக்கும் பலனளிக்காமல் வீணாகி வருகின்றன. தற்போது, பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருவதால், நூலகம் அமைக்க அறநிலையத் துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்றனர்.

இதுகுறித்து, கந்தசுவாமி கோயில் நிர்வாக வட்டாரங்கள் கூறும்போது, "கந்தசுவாமி கோயில் வளாகத்தில் ஆன்மிக நூலகம் அமைப்பதற்காக வழங்கப்பட்ட நூல்கள் பாதுகாப்பாக உள்ளன. விரைவில் நூலகம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

52 mins ago

இந்தியா

41 mins ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்