சென்னை: திமுக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடத்தப்படுவதற்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இன்று அவர்கள் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், ''அரசியல் காழ்ப்புணர்ச்சியின் கோரக் கரங்களை மீண்டும் ஒருமுறை நீட்டி இருக்கிறது திமுக அரசு. அரசியல் பழிவாங்கல் செய்யும் உன் பெயர் திமுகவா? ஏற்கெனவே ஐந்து முன்னாள் அமைச்சர்கள் தொடர்புடைய இடங்களில் சோதனை என்ற பெயரில் சட்ட மீறல் நடத்திய திமுக, வெறுங்கையோடு திரும்பிய நிகழ்வை மறந்து, மீண்டும் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி ஆகியோரது இல்லங்கள் மற்றும் அவர்களுடைய உறவினர்கள், நண்பர்கள், கழக நிர்வாகிகள் ஆகியோரது இல்லங்களிலும் சோதனை என்ற சட்ட மீறலை இன்று நடத்திக் கொண்டிருக்கிறது.
சாமானிய மக்கள் அரசை எதிர்த்துக் குரல் எழுப்பினால் வழக்குப்பதிவு. அதற்கும் ஒருபடி மேலே சென்று சமூக வலைதளங்களில் ஆளும் கட்சியினரை எதிர்த்துக் குரல் எழுப்பினால், அவர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டம். ஆளுகின்ற ஆட்சியின் மீதும், அதிகாரிகள் மீதும் உண்மையான குற்றத்தைக் கண்டுபிடித்து அரசியல் களம் கண்ட அதிமுக தலைவர்கள் மீதும், முன்னாள் அமைச்சர்கள் மீதும், லஞ்ச ஒழிப்புத்துறை எனும் ஆயுதத்தைத் தொடர்ந்து திமுக அரசு இயக்கிக் கொண்டிருக்கிறது.
மக்கள் நலன் சார்ந்த எந்த விஷயத்திலும் முனைப்பு காட்டாத திமுக அரசு, அரசியலில் தனக்கு மிகப்பெரிய பின்னடைவு வருகின்றபோது, அதனை மறைத்து அரசியல் சூழ்நிலைகளை திசை திருப்ப, தந்தையார் வழியில் தனயனும் முயற்சி செய்கிறார்.
இலவு காத்த கிளியாக 10 ஆண்டுகளாக சட்டமன்றத்திற்கு வெளியே முதல்வர் நாற்காலிக்காக காத்துக் கொண்டிருந்த மு.க.ஸ்டாலின், அந்த இருக்கை கிடைத்த உடனே, எதிர்க்கட்சியாக இருந்தபோது என்னவெல்லாம், என்னென்னவெல்லாம் கூப்பாடு போட்டோம், என்னென்னவெல்லாம் மக்களைத் திரட்டி போராட்டம், ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் மக்களுக்கு பெரும் துயரத்தைக் கொடுத்தோம் என்பதையெல்லாம் மறந்து, இன்றைக்கு மக்கள் விரோத அரசை நடத்திக் கொண்டிருக்கிறார்.
திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாக அதிமுக முன்னாள் அமைச்சர்களான கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர், கோவை மாவட்டத்தைச் சேர்ந்த எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏ, திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த கே.சி.வீரமணி, புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் சி.விஜயபாஸ்கர் எம்எல்ஏ, நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பி.தங்கமணி, எம்எல்ஏ, உள்ளிட்டோர் தொடர்புடைய இடங்களில் சோதனை என்ற பெயரில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டாலும், சோதனை முடிந்து வெளியே வரும்போது லஞ்ச ஒழிப்புத்துறை மேற்சொன்ன இடங்களில் வெறுங்கையோடுதான் திரும்பி இருக்கிறது.
இன்றைக்கு தருமபுரி மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி.அன்பழகன் எம்எல்ஏ தொடர்புடைய இல்லங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த சோதனையும், கடந்த சில தினங்களுக்கு முன்பாக மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து, பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.கோவிந்தசாமி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்டபோது, சட்டமன்ற உறுப்பினரைச் சந்திக்க மறுத்த மாவட்ட ஆட்சியரைக் கண்டிக்கும் விதமாக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரடியாகச் சென்று பிரச்சனையை எதிர்கொண்ட ஒரே காரணத்திற்காக, தருமபுரி மாவட்ட சட்டமன்றத் தேர்தலில் ஒரு தொகுதி கூட திமுகவிற்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் கிடைக்கவிடாமல் செய்த, சமரசம் இல்லா சமரன் கே.பி.அன்பழகனை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பழிவாங்கும் நடவடிக்கைதான் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கக்கூடிய இந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.
மக்களை ஏமாற்றிப் புறவாசல் வழியாக ஆட்சியில் அமர்ந்து 8 மாதங்கள் ஆகியும் இந்த திமுக அரசு, மக்களுக்கு பிரதானமாக சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு முனைப்பு காட்டாமல், ஏற்கெனவே ஜெயலலிதா அரசு தமிழக அரசை முன்னணி மாநிலமாகப் பல துறைகளில் வைத்திருந்த அதே நிலைக்குக் கேடு விளைவிக்கும் விதமாக உங்களின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருப்பதாக, தமிழகமெங்கும் மக்கள் கோபத்தை வெளிப்படுத்தும் விதமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
எம்ஜிஆர் வழிவந்து அவரின் பாசறையில் பயின்றவர்கள் நாங்கள். அஞ்சிப் பிழைக்கவும், அண்டிப் பிழைக்கவும், சுரண்டிப் பிழைக்கவும் எந்தவித தேவையும் எங்களுக்கு இல்லை. காரணம் இது, பல சோதனைகளையும், பல இயக்கப் பிளவுகளையும் கண்டு வென்ற மிகப்பெரிய ஆலமரம். இதை திமுக ஒருபோதும் சாய்த்துவிட முடியாது.நீங்கள் நடத்தக்கூடிய ஒவ்வொரு அரசியல் காழ்ப்புணர்ச்சியின் நாடகமும் எங்களுக்கும், எங்கள் இயக்கத் தலைவர்களுக்கும், இந்த இயக்கத்தைத் தாங்கிப் பிடித்திருக்கும் லட்சக்கணக்கான தொண்டர்களுக்கும் மேலும் வலுவும், உரமும் ஊட்டும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை.
எம்ஜிஆர் பாசறையிலும், ஜெயலலிதாவின் பள்ளியிலும் ஒழுக்கமான கல்வியைப் பயின்றவர்கள் நாங்கள். தேசத்தின் நலனும், தமிழகத்தின் வளர்ச்சியும் மட்டுமே எங்களுக்குப் பிரதானம் என்று எண்ணி எங்களுடைய அரசியல் பயணத்தைத் தொடர்வோம்.
ஆட்சிக் கட்டிலில் ஏறி குடியரசு தின அணி வகுப்பில் தமிழகத்தின் சார்பில் ஊர்தியைப் பங்குபெற வைக்க முடியாத திமுக அரசின் முதல்வர் மு.க.ஸ்டாலின், தன்னுடைய நிர்வாகத் திறமை இன்மையை மறைக்கவே தொடர்ந்து இதுபோன்ற செயல்களில் ஈடுப்டடு வருகிறார்.
திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல், மக்கள் நலப் பணிகளில் கவனம் செலுத்தாமல், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மீதும், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மீதும் பழிவாங்கும் நடவடிக்கையை மட்டுமே மேற்கொண்டு வருவதற்கு எங்களது கண்டனங்கள்'' என்று தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 mins ago
தமிழகம்
3 mins ago
இந்தியா
27 mins ago
இந்தியா
14 mins ago
இந்தியா
37 mins ago
விளையாட்டு
29 mins ago
இந்தியா
37 mins ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
3 hours ago
தமிழகம்
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago