மதுரை: பண மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் வழக்கறிஞர் வீட்டில் வாரண்ட் இல்லாமல் சோதனை நடத்தியது ஏன் என்பது குறித்து மதுரை மாவட்ட எஸ்.பி. விளக்கம் அளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியைப் பல்வேறு மோசடி வழக்குகளில் போலீஸார் தேடி வருகின்றனர். அவரின் உறவினர்கள், நண்பர்களிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் விசாரணை என்ற பெயரில் தங்கள் குடும்பத்தினரைத் தொந்தரவு செய்யக்கூடாது என போலீஸாருக்கு உத்தரவிடக் கோரி ராஜேந்திர பாலாஜியின் சகோதரி லெட்சுமி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதி சுவாமிநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது வழக்கறிஞர் மாரீஸ்குமார் ஆஜராகி, ராஜேந்திர பாலாஜியின் வழக்கறிஞராக இருப்பதால் என் வீட்டில் உரிய அனுமதியில்லாமல் டிசம்பர் 29-ம் தேதி போலீஸார் சோதனை நடத்தினர் என நீதிபதியிடம் தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கறிஞரிடம், ‘ராஜேந்திரபாலாஜி தற்போது எங்கிருக்கிறார்?’ என நீதிபதி கேட்டார். அதற்கு, ‘உச்ச நீதிமன்றத்தில் இன்று அல்லது நாளை ராஜேந்திரபாலாஜியின் முன்ஜாமீன் மனு விசாரணைக்கு வருகிறது. அதன் பிறகே அவர் இருப்பிடம் தெரியும் என்றார்.
பின்னர், ராஜேந்திரபாலாஜி வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரானார் என்பதற்காக, வழக்கறிஞர் வீட்டில் சோதனை நடத்தியது சரியல்ல என்ற நீதிபதி, சோதனையில் ஈடுபட்ட சோழவந்தான் காவல் ஆய்வாளர் சிவபாலனிடம் செல்போனில் வாயிலாகத் தொடர்பு கொண்டு பேசினார்,
யார் அறிவுறுத்தல் பேரில் வழக்கறிஞர் வீட்டில் சோதனை நடத்தினீர்கள்? வழக்கறிஞர் வீட்டிற்குள் சென்று சோதனை நடத்தினீர்களா? வாரண்ட் இருந்ததா? என அடுக்கடுக்காகக் கேள்விகளை எழுப்பினார்.
இதற்கு செல்போன் வாயிலாக பதிலளித்த காவல் ஆய்வாளர் சிவபாலன், மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அறிவுறுத்தலின் பேரில், வழக்கறிஞரின் வீட்டில் சோதனை நடத்தியதாகவும், வாரண்ட் இன்றி ஆய்வு நடத்தியதாகவும் கூறினார்.
இதையடுத்து, வழக்கறிஞர் வீட்டில் நடத்திய சோதனை விவரங்களையும், மதுரை நகர் பகுதியிலுள்ள வழக்கறிஞர் வீட்டில் சோதனை நடத்த சோழவந்தான் காவல் ஆய்வாளரை அனுப்பியது குறித்தும் மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மனுத்தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜனவரி 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
சினிமா
4 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
இந்தியா
9 hours ago
இந்தியா
9 hours ago
சினிமா
9 hours ago
இந்தியா
10 hours ago