மதுரை: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 68 தமிழக மீனவர்களையும், 10 படகுகளையும் விடுவிக்கக்கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மோர் பண்ணையைச் சேர்ந்தவர் ஜி.திருமுருகன் என்ற தீரன் திருமுருகன். தமிழ்நாடு மீனவர் உரிமை பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் இன்று தாக்கல் செய்த மனு:
நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 68 பேரை இலங்கை கடற்படையும், கடலோர காவல் படையும் கைது செய்துள்ளது. அவர்களின் 10 படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். அவர்கள் யாழ்பாணம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை கைது செய்தது 1974 கச்சத்தீவு ஒப்பந்தத்துக்கு எதிரானது. கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கையில் பல்வேறு மனித உரிமை மீறலுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். மீனவர்கள் உடல் முழுவதும் கிருமி நாசினி தெளித்து அவமதிக்கப்பட்டு உள்ளனர்.
இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல் படையால் கடந்த 34 ஆண்டுகளாக தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டும், தாக்கப்பட்டும் வருகின்றனர். அக். 18-ல் இலங்கை கடற்படை கப்பல் மோதி தமிழக மீனவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை மத்திய வெளியுறவுத்துறை கண்டிக்கவில்லை.
நவ. 7ல் பாகிஸ்தான் கடலோர காவல் படை துப்பாக்கியால் சுட்டதில் குஜராத் மீனவர் ஒருவர் உயிரிழந்தார். அப்போது இந்திய வெளியுறவுத்துறை செயலர் பாகிஸ்தான் தூதரக அதிகாரியை நேரில் அழைத்து எச்சரித்தார். தமிழக மீனவர்கள் 68 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை மீட்க மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது.
எனவே, இலங்கைக் கடற்படை, கடலோரக் காவல் படையால் கைது செய்யப்பட்ட 68 தமிழக மீனவர்களையும், அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட 10 படகுகளையும் விடுவிக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நாளை நடைபெறும் விடுமுறை கால நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
முக்கிய செய்திகள்
சினிமா
1 min ago
விளையாட்டு
58 mins ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
க்ரைம்
2 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
க்ரைம்
3 hours ago
இந்தியா
3 hours ago
சினிமா
4 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
சுற்றுலா
4 hours ago