பெரம்பலூர் அருகே வீட்டில் சுய பிரசவம் பார்த்ததில் தாய், குழந்தை உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

பெரம்பலூர் அருகே வீட்டில் சுயப் பிரசவம் பார்த்ததில், தாயும் குழந்தையும் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் அனுக்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் திலீப்குமார். இவரது மனைவி செல்வராணி(42). இவர்களுக்கு பிளஸ் 2 படிக்கும் மகள், 9-ம் வகுப்பு படிக்கும் மகன் உள்ளனர். இந்நிலையில், செல்வராணி 3-வது முறையாக கர்ப்பமானார். வயதானநிலையில் கர்ப்பமானதால், அதுகுறித்து கணவர் உட்பட யாருக்கும் தெரியாமல் செல்வராணி மறைத்ததாக தெரிகிறது.

இந்நிலையில், கடந்த டிச.3 அன்று இரவு செல்வராணிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அவரே சுயப் பிரசவம் பார்த்ததில், பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால், செல்வராணிக்கு திடீரென ரத்தப்போக்கு அதிகமானதால், அவர் மயக்கமடைந்துள்ளார்.

இதுகுறித்து, அவரது மூத்த மகள் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்து உதவி கேட்டிருக்கிறார். உடனே அக்கம்பக்கத்தினரும், கணவர் திலீப்குமாரும் சேர்ந்து செல்வராணியை பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்க ஆம்புலன்ஸில் கொண்டு சென்றுள்ளனர். ஆனால், வழியிலேயே செல்வராணியும், அவரது குழந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இதனால், மருத்துவமனைக்கு செல்லாமல், இருவரது உடல்களையும் வீட்டுக்கே எடுத்து வந்துள்ளனர். தொடர்ந்து நேற்று முன்தினம் இருவருக்கும் இறுதி சடங்குகள் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இந்நிலையில், இதுகுறித்து தகவலறிந்த மங்கலமேடு போலீஸார் தாய் மற்றும் குழந்தையின் உடல்களை மீட்டு, உடற்கூறாய்வு செய்வதற்காக மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உடற்கூறாய்வு செய்த பின்னர், இருவரது உடல்களும் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதுகுறித்து மங்கலமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.மேலும், சுகாராத் துறையினரும் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 min ago

இந்தியா

21 mins ago

தமிழகம்

44 mins ago

உலகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்