தொடர் மழை காரணமாக பள்ளி, கல்லூரிக் கட்டிடங்களின் உறுதித்தன்மையை அரசு ஆய்வு செய்ய வேண்டும் எனத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
"தமிழ்நாட்டில், 24,310 தொடக்கப் பள்ளிகள்; 7,024 நடுநிலைப் பள்ளிகள்; 3,135 உயர்நிலைப் பள்ளிகள்; 3,110 மேல்நிலைப் பள்ளிகள் உட்பட மொத்தம் 37,579 அரசுப் பள்ளிகள் உள்ளன. தனியார் பள்ளிகளைப் பொறுத்தவரை தொடக்கப் பள்ளிகள் 5,089, நடுநிலைப் பள்ளிகள் 763, உயர்நிலைப் பள்ளிகள் 2,046, மேல்நிலைப் பள்ளிகள் 3,764 உட்பட மொத்தம் 12,382 பள்ளிகள் உள்ளன.
அரசு உதவி பெறும் பள்ளிகளைப் பொறுத்தவரை தொடக்கப் பள்ளிகள் 5,021, நடுநிலைப் பள்ளிகள் 1,508, உயர்நிலைப் பள்ளிகள் 589, மேல்நிலைப் பள்ளிகள் 1,210 உட்பட மொத்தம் 8,328 பள்ளிகள் உள்ளன.
தமிழ்நாடு அரசின் 91 கலைக்கல்லூரிகளும், 7 கல்வியியல் கல்லூரிகளும், 40 பல்கலைக்கழகக் கல்லூரிகளும் செயல்பட்டு வருகின்றன. இவை தவிர்த்து, அரசு உதவி பெறும் கல்லூரிகள், தனியார் கலைக்கல்லூரி, பொறியியல் கல்லூரி, வேளாண் கல்லூரி, மருத்துவக் கல்லூரி என ஏராளமான கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
இக்கல்லூரிகளில் உள்ள சில கல்லூரிகள் பழமையானது என்பதோடு, அக்கல்லூரிகளின் கட்டிடங்களில் பெரும்பாலானவை மோசமான நிலையில் உள்ளன. இந்த நிலையில், தமிழ்நாட்டில் கடந்த நாட்களாக கனமழை பெய்து வருவதால், ஆங்காங்கே கட்டிடங்கள் இடிந்து விழுவதும், சேதமடைவதும் நடந்து வருகிறது.
எனவே, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் நலன் கருதி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளி மற்றும் கல்லூரிகளின் கட்டிடங்களின் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். பழுதான பள்ளி, கல்லூரிக் கட்டிடங்களைப் பட்டியலிட்டு அவற்றைச் சீரமைக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுக்கிறது.
பள்ளிகளில் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளான கழிப்பறை, குடிநீர், காற்றோட்டமான அறைகளை ஏற்படுத்துவது மற்றும் தேவையான ஆசிரியர்களை நியமிப்பது போன்ற அத்தியாவசியத் தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும்.
கடந்த அதிமுக ஆட்சியில், கட்டப்பட்ட பள்ளிகளின் கூடுதல் வகுப்பறைகள் தரம் இல்லாமல் கட்டப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக, மாணவர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இப்புகார் குறித்து ஆய்வு செய்வதோடு, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசு முன்வர வேண்டும் எனவும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி வலியுறுத்துகிறது."
இவ்வாறு வேல்முருகன் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
19 mins ago
விளையாட்டு
41 mins ago
இந்தியா
59 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஆன்மிகம்
1 hour ago
கருத்துப் பேழை
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
உலகம்
2 hours ago