கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை மீட்பதற்கான விரிவான தொகுப்பை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று மத்திய நிதியமைச்சர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாராகஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியாவில் தொழில் முதலீடு, உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநில முதல்வர்கள், நிதியமைச்சர்களுடன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், காணொலி வாயிலாகநேற்று ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் தமிழகம் சார்பில்நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பங்கேற்றார்.
ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் பேசியதாவது:
கரோனா தொற்றின் சவாலை எதிர்கொண்ட போதிலும், வருவாய் வரவுகளை ஈட்டுவதிலும், தொழில் முதலீட்டிலும் தமிழகத்தின் பொருளாதாரம் மீண்டு வருகிறது. தமிழகமுதல்வர் தலைமையில் நடந்த2 தொழில் முதலீட்டுக் கூட்டங்களில் ரூ.21,021 கோடி மதிப்பிலானமுதலீடுகள், ஒரு லட்சம் பேருக்குவேலைவாய்ப்பு உருவாக்கும்வகையில் 50 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன.
மத்திய அரசின் பல்வேறு துறைகள் தொடர்பான அனுமதிகளை ஒருங்கே பெறுவதற்காக தேசிய ஒற்றைச் சாளர இணையவழி அமைப்பான மாதியம் சிறப்பாக செயல்படுகிறது. அதேநேரம், அனுமதிக்குப் பிந்தைய சேவைகள், குறைதீர்ப்பு செயல்முறைகளுக்கு இந்த இணையதளத்தில் வழிவகை ஏற்படுத்த வேண்டும். மருத்துவ சாதனங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிமருந்துகளை இறக்குமதி செய்வதற்கான அனுமதியை விரைவுபடுத்த வேண்டும்.
விமான நிலைய விரிவாக்கம்
சென்னை, கோவை, திருச்சி, தூத்துக்குடி ஆகிய 4 முக்கிய விமான நிலையங்களை விரிவுபடுத்தும் திட்டத்தில் உள்ள இடையூறுகளுக்கு தீர்வு காண மத்திய அரசு ஒத்துழைக்க வேண்டும். கூடுதல் வர்த்தகம் மற்றும் விமானப் போக்குவரத்தை மேம்படுத்த மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக விரைவில் அறிவிக்க வேண்டும்.
புறத்துறைமுக திட்டத்துடன் தூத்துக்குடி துறைமுகத்தை விரிவாக்கும் திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும்.
கரோனா பெருந்தொற்று காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களை மீட்பதற்கான விரிவான தொகுப்பை மத்தியஅரசு அறிவிக்க வேண்டும்.
சென்னை - குமரி 8 வழிச் சாலை
தொழிற்சாலைகளுக்கான தளவாட செலவை குறைக்கும் வகையில், சென்னை - கன்னியாகுமரி சாலை முழுவதையும் 8 வழிச்சாலையாக மேம்படுத்த வேண்டும்.
மின் உற்பத்தி நிலையங்களுக்கு போதிய அளவில் தொடர்ந்து நிலக்கரி வழங்கப்படுவதை உறுதி செய்யவேண்டும். தமிழகத்தில் அதிகளவில் காற்றாலை மின் உற்பத்தி திறன் உள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டுக்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில், கடலில் காற்றாலை மின் உற்பத்தி மேம்பாட்டுக் கொள்கையை மத்திய அரசு உருவாக்க வேண்டும்.
மாநிலங்களுக்கு கடன் அனுமதி
மேலும், நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்குள் நிபந்தனைகள் இன்றி மாநிலங்கள் கடன் பெற அனுமதிக்க வேண்டும். கூடுதல் முதலீடுகளை மேற்கொள்ளும் திறனை அடிப்படையாக கொண்டுஅந்த வரம்புகள் தீர்மானிக்கப்படவேண்டும். வெளிநாட்டு நிதியுதவி வழங்கும் அமைப்பிடம் இருந்து மாநிலத்துக்கு ஆண்டுக்கு ஒரு திட்டம் என்ற கட்டுப்பாட்டை நீக்க வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.
முக்கிய செய்திகள்
உலகம்
6 mins ago
ஆன்மிகம்
4 mins ago
தமிழகம்
3 mins ago
தமிழகம்
12 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
41 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
க்ரைம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago