பாலியல் தொல்லையால் மன உளைச்சல் அடைந்த பள்ளி மாணவி தற்கொலை: ஆசிரியரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை

By டி.ஜி.ரகுபதி

கோவையில் பாலியல் தொல்லையால் மன உளைச்சல் அடைந்த பள்ளி மாணவி தற்கொலை செய்த சம்பவம் தொடர்பாக, ஆசிரியரைப் பிடித்துக் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

கோவை மாநகரக் காவல்துறை எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த தம்பதியருக்கு 17 வயதில் மகள் உள்ளார். இவர், அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு படித்து வந்தார். இந்த மாணவி, நேற்று (11-ம் தேதி) வீட்டில் தனியாக இருந்தார். பெற்றோர் வெளியே சென்று இருந்தனர். அவர்கள் சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது, கதவு உள் பக்கமாகப் பூட்டப்பட்டிருந்தது.

நீண்ட நேரம் தட்டியும், கதவைத் திறக்காததால், சந்தேகமடைந்த பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, 17 வயது மாணவி மின்விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இதுகுறித்துத் தகவல் அறிந்த உக்கடம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.

மாணவி தற்கொலை செய்த அறையில், அவர் எழுதி வைத்த ஒரு கடிதத்தைக் காவல்துறையினர் கைப்பற்றினர். அந்தக் கடிதத்தில், சில மாணவிகள், ஒரு ஆசிரியரையும் குறிப்பிட்டு அவர்களைச் சும்மா விடக்கூடாது என எழுதப்பட்டு இருந்தது. இதையடுத்து உக்கடம் காவல்துறையினர் மாணவியின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்த மாணவிக்கு, அவரது பள்ளி ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை அளித்ததாகவும், அதனால் மனமுடைந்தே மாணவி தற்கொலை செய்துகொண்டார் எனவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து உயிரிழந்த மாணவியின் பெற்றோர் தரப்பில் இன்று (12-ம் தேதி) கூறும்போது, ‘‘எங்களது மகள் முதலில் தடாகம் சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்து வந்தார். பின்னர், கரோனா அச்சம் காரணமாக, கடந்த ஆண்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்தன. அப்போது அவரது பள்ளியின் இயற்பியல் பிரிவு ஆசிரியர் மகளிடம் தவறாகப் பேசியுள்ளார். எங்கள் மகள் அச்சம் காரணமாக அதைத் தெரிவிக்கவில்லை. அதைத் தொடர்ந்து நேரடி வகுப்புகள் தொடங்கியபோது, எங்கள் மகளுக்கு அந்த ஆசிரியர் மீண்டும் பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த எங்கள் மகள் இவ்விவகாரம் தொடர்பாக, தனது தோழரிடம் தெரிவித்து அழுதுள்ளார். அவர் மூலம் இந்தத் தகவல்கள் எங்களுக்குத் தெரியவந்தன. பின்னர், நாங்கள் எங்கள் மகளை அந்தப் பள்ளியில் இருந்து மாற்றி, இப்பகுதியிலுள்ள பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தோம். ஆசிரியரின் பாலியல் அத்துமீறலால் மனமுடைந்த எங்களது மகள் தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாகக் காவல்துறையினர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

இது தொடர்பாகச் சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் உக்கடம் காவல்துறையினர் இவ்வழக்கை விசாரித்தனர். பின்னர், வழக்கு மேற்குப் பகுதி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. மகளிர் காவல்துறையினர் போக்சோ, மாணவியைத் தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது வழக்குப் பதிந்தனர். அவரைப் பிடித்துக் காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

இதற்கிடையே, பள்ளி மாணவி தற்கொலை செய்த விவகாரம் தொடர்பாக, சம்பந்தப்பட்ட பள்ளியில் மாவட்டக் கல்வித்துறை அலுவலர்கள் விசாரணை நடத்தினர். மேலும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சில அமைப்புகள் சார்பில் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன.

காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘இந்தச் சம்பவம் தொடர்பாக, ஆசிரியர் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது. அவரைப் பிடித்து விசாரித்து வருகிறோம்’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

க்ரைம்

25 mins ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

49 mins ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

9 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

மேலும்