முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது; தமிழக அரசு கவனமாக இயக்கி வருகிறது: அமைச்சர் துரைமுருகன்

By செய்திப்பிரிவு

தமிழ்நாட்டுக்குச் சொந்தமான முல்லைப் பெரியாறு அணை, நிலையான வழிகாட்டுதல்களின்படி முறையாக இயக்கப்பட்டு வருவதாக நீர்வள ஆதாரத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

''உச்ச நீதிமன்றம், முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரையில் நீரைத் தேக்கி வைக்க வழங்கிய ஆணையின்படியும், மத்திய நீர்வளக் குழுமம் ஒப்புதல் அளித்தவாறு நிர்ணயிக்கப்பட்ட மாதவாரியான அணையின் நீர்மட்ட அட்டவணைப்படியும் முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீர், தேக்கப்படும் நீர், மழைப் பொழிவு ஆகியவற்றைத் தொடர்ந்து தமிழ்நாடு கண்காணித்து வருகிறது.

கேரளாவைச் சார்ந்த தனிநபர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் 28.10.2021 அன்று தமிழ்நாட்டின் வாதங்களைக் கேட்டபின், 11.11.2021 அன்று மீண்டும் விசாரணைக்கு வரும்வரை, மத்திய நீர்வளக் குழுமம் ஒப்புதல் அளித்துள்ள நிர்ணயிக்கப்பட்ட நீர்மட்ட அட்டவணையைப் பின்பற்றுமாறு ஆணையிட்டுள்ளது. தமிழ்நாடு, நிர்ணயிக்கப்பட்ட அட்டவணையின்படியே நீர்மட்டத்தைப் பராமரிப்பதற்காக, வைகை அணைக்குத் தொடர்ந்து நீரை, குகைப் பாதை வழியாகக் கடத்துகிறது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பொழிவதாலும், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதாலும், தமிழ்நாடு அரசின் நீர்வள ஆதாரத்துறை எடுத்த முடிவின்படி, வைகை அணைக்கு குகைப்பாதை வழியாக அதிகபட்சமாக வெளியேற்றப்படும் நீரோடு, கேரள அதிகாரிகளுக்கு உரிய காலத்தில் முன்னெச்சரிக்கை/ அறிவிப்பு அளித்தபின் இன்று காலை 7.30 மணிக்கு முல்லைப் பெரியாறு அணையின் இரு வழிந்தோடி மதகுகளைத் திறந்து வினாடிக்கு 500 கன அடி வீதம் நீரை வெளியேற்றி வருகிறது. இது, மத்திய நீர்வளக் குழுமம் ஒப்புதல் அளித்துள்ள நிர்ணயிக்கப்பட்ட மாதவாரியான அணையின் நீர்மட்ட அட்டவணையைப் பின்பற்றியே செய்யப்படுகிறது.

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. மத்திய நீர்வளக் குழுமம் ஒப்புதல் அளித்துள்ள நிர்ணயிக்கப்பட்ட மாதவாரியான அணையின் நீர்மட்ட அட்டவணைப்படி தமிழ்நாடு அரசின் நீர்வள ஆதாரத் துறை, அணையை கவனமாக இயக்கி வருகிறது. இதற்குப் புறம்பாக வரும் எந்தத் தகவலும் உண்மையானவை அல்ல என்பதால் அவை புறக்கணிக்கப்பட வேண்டியவை ஆகும்.

தமிழ்நாட்டுக்குச் சொந்தமான முல்லைப்பெரியாறு அணை, நிலையான வழிகாட்டுதல்களின்படி முறையாக இயக்கப்பட்டு வருகிறது என்பது மீண்டும் வலியுறுத்தப்படுகிறது''.

இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

36 mins ago

விளையாட்டு

1 hour ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

க்ரைம்

3 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

சுற்றுலா

5 hours ago

மேலும்