பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட சுமார் 1,600 கோடி ரூபாய் மதிப்பிலான கரன்சி நோட்டுகளைப் பயன்படுத்தி, சொத்துகளை வாங்க வி.கே.சசிகலாவுக்கு பினாமிகளாகச் செயல்பட்டதாகக் கூறி, வருமான வரித்துறை எடுத்த நடவடிக்கையை எதிர்த்து, நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் 14 பேர் தாக்கல் செய்த வழக்குகளைத் தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நாட்டில் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு வி.கே.சசிகலா வீட்டில் 2017-ம் ஆண்டு வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக, வி.எஸ்.ஜே.தினகரனின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்திய வருமான வரித்துறையினர், பல முக்கிய ஆவணங்களைப் பறிமுதல் செய்தனர்.
இந்த சோதனையில் 1,600 கோடி ருபாய் மதிப்பிலான பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட கரன்சிகள் மூலம், பல்வேறு சொத்துகளை வாங்க சசிகலாவுக்கு பினாமியாகச் செயல்பட்டுள்ளதாக கூறி, கங்கா பவுண்டேஷன், வி.எஸ்.ஜே தினகரன், ஸ்பெக்ட்ரம் மால் உரிமையாளர்கள், பாலாஜி, பழைய மாமல்லபுரம் சாலையில் மார்க் ஸ்கொயர் ஐ.டி. பார்க், புதுச்சேரி ஓசன் ஸ்பிரே உள்ளிட்ட நிறுவனங்களின் சொத்துகளை முடக்கி வருமான வரித்துறையினர் பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்தனர்.
இதை எதிர்த்து, தினகரன், பாலாஜி, கங்கா பவுண்டேஷன் உள்பட 14 பேர் தரப்பில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை, நீதிபதி அனிதா சுமந்த் விசாரித்தார்.
பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட கரன்சிகளைப் பெற்று இடத்தை விற்பனை செய்ததற்காக தங்களுக்கு எதிராக பினாமி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது என, மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே இடத்தை விற்பனை செய்துள்ளதால், தங்களுக்கு எதிராக பினாமி சட்டத்தைப் பயன்படுத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வருமான வரித்துறை தரப்பு, கடும் நிதி நெருக்கடி காரணமாக ஸ்பெக்ட்ரம் மாலை விற்பனை செய்ய உரிமையாளர்கள் முடிவு செய்ததாகவும், அதற்காக அவர்கள் ரியல் எஸ்டேட் ஏஜெண்ட் மூலம் சசிகலாவின் வழக்கறிஞரை அணுகியதாகவும், இந்தச் சந்திப்பு பண மதிப்பிழப்புக்கு முன் நடந்ததாகவும் குறிப்பிடப்பட்டது.
ஸ்பெக்ட்ரம் மாலுக்கான தொகையை உரிமையாளர்களுக்கு வழங்க மேற்கொண்ட நடைமுறை, வாங்குபவரின் பெயர் இல்லாமல் ஒப்பந்தங்கள் மேற்கொண்டது போன்ற நடவடிக்கைகள் காரணமாக, பினாமி சட்டத்தைப் பயன்படுத்தியது சரியே எனவும் வாதிடப்பட்டது.
இந்த வழக்கில் இன்று (அக். 25) தீர்ப்பு வழங்கிய நீதிபதி, வருமான வரித்துறை தரப்பு விளக்கத்தை ஏற்று அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
12 mins ago
தமிழகம்
23 mins ago
இந்தியா
17 mins ago
தமிழகம்
34 mins ago
வாழ்வியல்
25 mins ago
இந்தியா
39 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
56 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
க்ரைம்
1 hour ago