மதுரை எய்ம்ஸ்; ஒரு கடிதத்தை வைத்து எத்தனை ஆண்டுகள் ஓட்ட நினைக்கிறீர்கள்? - அண்ணாமலைக்கு சு.வெங்கடேசன் கேள்வி

By செய்திப்பிரிவு

ஒரு செங்கல்லை வைத்து 3 ஆண்டுகள் ஓட்டினீர்கள்; ஒரு கடிதத்தை வைத்து எத்தனை ஆண்டுகள் ஓட்ட நினைக்கிறீர்கள்? என, மதுரை எய்ம்ஸ் பற்றி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக, சு.வெங்கடேசன் இன்று (செப். 15) வெளியிட்ட அறிக்கை:

"தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மதுரை எய்ம்ஸ் பற்றி ட்வீட் ஒன்று வெளியிட்டுள்ளார். 150 மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி தரும் வாய்ப்பைத் தமிழக அரசு ஏன் மறுக்க வேண்டும் என்று கண்ணீர் வடித்துள்ளார். குடம் குடமாகக் கொட்டும் இந்தக் கண்ணீரில் சிறு துளியேனும் அனிதாவுக்காகவோ, தனுஷுக்காகவோ, கனிமொழிக்காகவோ கசிந்திருந்தால் சற்றேனும் ஆறுதலாயிருந்திருக்கும்.

பாஜகவோ கல் நெஞ்சோடு நீட் விதிவிலக்கு மசோதாவுக்கு எதிராக ஒரே ஒரு கட்சியாக தமிழக சட்டப்பேரவையில் வாக்களித்து தீரா வஞ்சத்தை தமிழக மக்களின் மீது வெளிப்படுத்தியுள்ளது. எய்ம்ஸ் மருத்துவக் கல்வி அனுமதி பற்றி மத்திய அரசு தனது கடிதத்தில் என்னதான் கூறியிருக்கிறது என்று பார்ப்போம்.

மதுரை தோப்பூர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு ஒப்புதல் தரப்பட்டுள்ள பின்னணியில் தமிழக அரசும் நிலத்தைத் தந்து 90 சதவீதச் சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டுள்ளது. இந்தக் கட்டுமானப் பணிகள் முடிவடைய தாமதம் ஆகுமென்பதால், 50 மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி தரலாம்; அதற்காகத் தற்காலிக இடம் ஒன்றைத் தமிழக அரசு ஒதுக்கித் தரவேண்டும் என்று மத்திய அரசு கேட்டுள்ளது. அந்தத் தற்காலிக இடத்தில் என்னென்ன இருக்க வேண்டும்?

கல்வி வசதிகள் என்ற முறையில் குளிரூட்டப்பட்ட வகுப்பறைகள், உடற்கூறியல் - உடலியல் - நோய் அறிவியல் - உயிர் வேதியியல் - நுண் உயிரியல் இத்தனைக்கும் ஆய்வகங்கள், 50 பேர் அமரக்கூடிய ஒலி - ஒளிக் காட்சி நிகழ்வறை, உயிரியல் அறுப்பு சோதனை அறை, அச்சு மற்றும் மின்னணு நூல்களைக் கொண்ட இணைய வசதியுடனான நூலகம், மாணவர்களுக்கான கிராமப்புற உடல் நல மையம், தேர்வு அறை, எய்ம்ஸ் பேராசிரியர் நியமனம் நடைபெறும் வரை தற்போது பணியில் உள்ள மருத்துவக் கல்லூரி பேராசிரியர்களின் சேவையை உறுதி செய்தல் ஆகியன அடங்கும்.

தங்குமிட வசதி என்ற வகையில், எல்லா மாணவர்களுக்கும் தங்கும் விடுதி, உணவு அரங்கம், கல்விக் கூடம் தொலைவில் இருந்தால் போக்குவரத்து வசதி ஆகியன அடங்கும்.

பொழுதுபோக்கு வசதிகள் என்ற வகையில், புறவெளி விளையாட்டு மைதானம், சதுரங்கம் - மேசைப் பந்து போன்ற ஏற்பாடுகளுடன் விளையாட்டு உள்ளரங்கம், யோகா - தியானத்துக்கு இட வசதி, டிவி - டிவிடி - இசை ஆகியன உள்ளடங்கிய அறை, இணைய மையம் ஆகியன அடங்கும்.

நிர்வாக அலுவலகம் என்ற வகையில், நிர்வாக இயக்குநர், துணை இயக்குநர் (நிர்வாகம்), மருத்துவக் கண்காணிப்பாளர், நிதி ஆலோசகர் மற்றும் முக்கியமான அலுவலர்களுக்குப் போதுமான வசதியோடு இடம் தரப்பட வேண்டும்.

இதர வசதிகள் வங்கி, ஏடிஎம், தேநீரகம், நிர்வாக இயக்குநர் மற்றும் முக்கிய அலுவலர்களுக்குக் குடியிருப்பு வசதி, அவர்களுக்குத் தமிழக அரசின் வெளிவேலை ஒப்படைப்புக் கட்டண அடிப்படையில் போக்குவரத்து, மதுரை - சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மூலம் கணக்கு அலுவலர் - நிதி ஆலோசகர்கள் தற்காலிக நியமனம்.

இவ்வளவையும் மத்திய அரசின் சுகாதாரத்துறை மற்றும் தமிழக அரசுத் துறையின் கூட்டுப் பார்வையிடல் வாயிலாக விரைவில் முடிக்க வேண்டும் என்று மத்திய அரசு கோரியுள்ளது.

அண்ணாமலைக்கு, நம்முடைய கேள்விகள் என்னவெனில், இதில் சொல்லப்படுகிற வசதிகளை எல்லாம் சேர்த்தால் அது நிரந்தரக் கல்லூரிக்குத் தேவையான பெரிய பட்டியல். நீட்டி முழக்கிக் கடிதம் எழுதியுள்ள மத்திய அரசு இதற்கான நிதியை யார் தருவார்கள் என்பது பற்றி ஒரு வார்த்தையாவது கூறி இருக்கிறதா? மத்திய அரசின் பங்கும் பொறுப்பும் என்ன? மாநில அரசின் பங்கும் பொறுப்பும் என்ன? என்று எதைப் பற்றியும் பேசவில்லை.

இதைவிட முக்கியம் 50 மாணவர்கள் சேர்க்கை என்பதற்கு முறையான அனுமதியை மத்திய அரசின் மருத்துவக் கவுன்சில்தானே தரவேண்டும். சிவகங்கை மருத்துவக் கல்லூரியில் 50 இடங்களைத் தாங்களே அதிகரித்துக் கொள்ளும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டா? இல்லை என்று தெரிந்தும் அதைப் பற்றி ஏன் பேச மறுக்கிறது?

செலவுகளையெல்லாம் ஏற்றுச் செய்வதாக இருந்தாலும் 50 இடங்களுக்கான தேசிய மருத்துவக் கழகத்தின் ஒப்புதல் கிடைப்பதற்கான உத்தரவாதம் உண்டா? எந்தக் கேள்விக்கும் பதில் இல்லை. ஒற்றைச் செங்கல்லை வைத்து மூன்று ஆண்டுகள் ஓட்டியதைப் போல, மொட்டையாக ஒரு கடிதத்தை எழுதி அடுத்த சில ஆண்டுகளை ஓட்ட நினைக்கிறீர்களோ என்ற சந்தேகம் எழுகிறது.

நீட் விஷயத்தில் தமிழக மக்களுக்கு பாஜக மேல் இருக்கும் கோபத்தைத் திசைதிருப்ப தமிழக அரசின் மீது அவதூறு பரப்ப முயல்கிறீர்கள். அண்ணாமலை, 50 மாணவர்களுக்கான அனுமதி பற்றி தானே மத்திய அரசு கூறியுள்ளது. நீங்கள் என்ன 150 மாணவர்களின் சேர்க்கையைத் தமிழக அரசு மறுப்பதாகக் கூறுகிறீர்கள்? பொய்யில் எண்ணிக்கை பொருட்டல்ல என்பது உங்கள் கருத்தாக இருக்கலாம், ஆனால், பொய்யென்றாலும் பொருந்தச்சொல்ல வேண்டும் என்பது தமிழகம் அறிந்த முதுமொழி".

இவ்வாறு சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

வணிகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

க்ரைம்

7 hours ago

சுற்றுச்சூழல்

7 hours ago

க்ரைம்

7 hours ago

இந்தியா

7 hours ago

சினிமா

8 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்