ரூ.4 கோடி மதிப்பீட்டில் மரபணு பகுப்பாய்வுக் கூடம்: முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

By செய்திப்பிரிவு

பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை ஆய்வகத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள மரபணு பகுப்பாய்வுக் கூடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, 91 நபர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (செப். 14) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

"தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்கக வளாகத்தில் உள்ள பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை ஆய்வகத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள மரபணு பகுப்பாய்வுக் கூடத்தைத் திறந்து வைத்தார்.

மேலும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் வாயிலாகத் திறன்மிகு உதவியாளர் நிலை-II (Skilled Assistant Grade-II) பணியிடத்துக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ள 9 நபர்களுக்கும், கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணியிடத்துக்கு 82 வாரிசுதாரர்களுக்கும் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

சட்டப்பேரவையில் 2.8.2021 அன்று நடைபெற்ற மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கான மானியக் கோரிக்கையின்போது 'மரபணு பகுப்பாய்வுக் கூடம் (Whole Genome Sequencing) ரூபாய் 4 கோடி செலவில் சென்னை, டிஎம்எஸ் வளாகப் பொது சுகாதார ஆய்வகத்தில் நிறுவப்படும்' என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இந்த அறிவிப்பினைச் செயல்படுத்தும் விதமாக, டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள பொது சுகாதார ஆய்வகத்தில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள மரபணு பகுப்பாய்வுக் கூடத்தை முதல்வர் திறந்து வைத்தார்.

கரோனா நோய்த் தொற்றினை உருவாக்கும் வைரஸ், அதன் மரபணுவில் உண்டாகும் தொடர் மாற்றங்களினால் புதுவகையாக உருமாறி, நோய்த் தொற்றின் தாக்கத்தினைத் தீவிரப்படுத்துகிறது. உருமாறிய கரோனா வைரஸ்களைக் கண்டறிய மரபணு பகுப்பாய்வகம் அவசியமாகும். இத்தகைய மரபணு பகுப்பாய்வகம், எந்த ஒரு மாநில அரசாலும் இதுவரை அமைக்கப்படவில்லை.

தமிழகத்தில் பரவும் கரோனா வைரஸ்களின் உருமாற்றத்தினைக் கண்டறிய மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கர்நாடகா மற்றும் தெலங்கானாவில் இயங்கும் மரபணு பகுப்பாய்வகங்களில் கரோனா மாதிரிகள் அனுப்பப்பட்டு, பகுப்பாய்வு முடிவுகள் தாமதமாகப் பெறப்பட்டு வந்தன.

தற்போது, இக்குறைகளைப் போக்கும் வகையில், பொது சுகாதாரத் துறையின் கீழ் இயங்கும் மாநிலப் பொது சுகாதார ஆய்வகத்தில் மரபணு பகுப்பாய்வுக் கூடம் நிறுவப்பட்டுள்ளது. இவ்வாய்வகத்தில் உருமாறிய கரோனா வைரஸ்களை ஆரம்ப நிலையிலேயே விரைவாகக் கண்டறிந்து, அதனடிப்படையில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, கரோனா நோயின் தாக்கத்தினைப் பெருமளவு தடுத்திட இயலும்.

மேலும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தின் வாயிலாகத் தமிழ்நாடு மாநில சுகாதாரப் போக்குவரத்துத் துறைக்குத் திறன்மிகு நிலை-II பணியிடத்துக்குத் தேர்வு செய்யப்பட்ட 9 நபர்களுக்கும், கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணியிடத்துக்கு மருத்துவக் கல்வித் துறையில் 51 வாரிசுதாரர்களுக்கும், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் துறையில் 15 வாரிசுதாரர்களுக்கும், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறையில் 15 வாரிசுதாரர்களுக்கும், டாம்ப்கால் நிறுவனத்தில் ஒரு வாரிசுதாரருக்கும், என 82 வாரிசுதாரர்களுக்கும், பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, முதல்வர் 10 நபர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கினார்".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

17 mins ago

இந்தியா

37 mins ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்