நீதிக் கட்சியைச் சேர்ந்த பி. சுப்பராயன் மற்றும் பி.டி. ராஜன் ஆகிய இருவருக்கு மணிமண்டபங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ஓபிஎஸ் இன்று (செப். 09) வெளியிட்ட அறிக்கை:
"சமூக நீதி என்றவுடன் அனைவரின் நினைவுக்கும் வருவது இடஒதுக்கீடு தான். இந்த சமூக நீதிக்காக போராடிய பெரியாருக்கு மரியாதை செலுத்தும் வகையில், அவருடைய பிறந்தநாள் 'சமூக நீதி' நாளாக கொண்டாடப்படும் என்று முதல்வர் அறிவித்தார். அதற்கு நன்றி தெரிவித்து அதிமுகவின் சார்பில் நானும் அறிக்கை வெளியிட்டு இருந்தேன்.
தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த 69 விழுக்காடு இடஒதுக்கீட்டுக்கு ஆபத்து ஏற்பட்ட போது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து அந்த ஆபத்திலிருந்து பிற்படுத்தப்பட்ட மக்களையும், மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களையும், ஆதி திராவிட மற்றும் பழங்குடி மக்களையும் விடுவித்தவர் ஜெயலலிதா என்பதால் தான் அவருக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் 'சமூக நீதி காத்த வீராங்கனை' என்ற பட்டம் வழங்கப்பட்டது.
இந்த வரிசையில், சமூக நீதிக்காக போராடியவர்களில் முக்கிய இடம் பெற்றிருப்பவர்கள் சென்னை ராஜதானியின் முன்னாள் முதல்வகளான பி. சுப்பராயன் மற்றும் முன்னாள் சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜனின் தந்தையும் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் பாட்டனாருமான பி.டி. ராஜன் ஆகியோர்.
பொதுவாக இந்திய மக்களுக்கும், குறிப்பாக தமிழுக்கும், தமிழக மக்களுக்கும் அளப்பரிய சேவைகளைச் செய்தவர்கள் பி. சுப்பராயன் மற்றும் பி.டி. ராஜன் என்று சொன்னால் அது மிகையாகாது. 1920-1937 காலக்கட்டத்தில், சென்னை ராஜதானியில் இரட்டை ஆட்சி முறை நடைமுறையில் இருந்தபோது, ஆட்சி புரிந்த ஐந்து அரசுகளில் நான்கு நீதிக்கட்சி அரசுகள்.
தமிழகத்தைப் பொறுத்தவரை, இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு என்று ஒரு நீண்ட நெடிய வரலாறு 1854 ஆம் ஆண்டு அன்றைக்கு இருந்த வருவாய் வாரியம் மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையிலிருந்து தொடங்கியது என்றாலும், 1920 ஆம் ஆண்டு நீதிக் கட்சி தேர்தல்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பிறகு தான் இடஒதுக்கீட்டுக் கொள்கை புதிய பரிமாணத்தை பெற்றது.
அதாவது, வருவாய்த் துறையில் மாத்திரம் நிலவி வந்த இடஒதுக்கீடு அரசின் எல்லாத் துறைகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. அரசுப் பணிகளில் சேர்க்கப்படுவோர் ஆறு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் பணிகளில் அமர்த்தப்படுவோரின் எண்ணிக்கை பரிசீலனைக்கு உட்படுத்தப்படும் வகையில் 1921 ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. இந்த ஆணை தான் முதல் வகுப்புவாரி அரசாணை, அதாவது First Communal Government Order ஆகும்.
இதனைத் தொடர்ந்து, தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்களில் முதல் முறையாக சென்னை ராஜதானியின் முதல்வராக கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் பணிபுரிந்த பெருமை சுப்பராயன் அவர்களுனுக்கு உண்டு. 1926 முதல் 1930 வரை சென்னை ராஜதானியின் முதல்வராக பதவி வகித்தார். இவருடைய ஆட்சிக் காலத்தில் தான் வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணை விரிவுபடுத்தப்பட்டது.
அதாவது, 1927 நவம்பர் 4-ம் தேதி அன்று அந்தந்த இனங்களின் மக்கள் தொகை அடிப்படையில் அரசுப் பணிகள் வழங்கப்பட வேண்டும் என்று அனைத்துத் தரப்பிலிருந்து எழுப்பப்பட்ட கோரிக்கையை ஏற்று, 12 அரசுப் பணியிடங்கள் காலி என்றால், அவற்றுள் 5 பணியிடங்கள் பிராமணர் அல்லாதோருக்கும், 2 பணியிடங்கள் பிராமணருக்கும், 2 இடங்கள் ஆங்கிலோ - இந்தியர் மற்றும் கிறிஸ்தவருக்கும், 2 இடங்கள் முகமதியருக்கும், ஒரு இடம் நலிவடைந்த வகுப்பினருக்கும் என்று இடஒதுக்கீட்டு முறை நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்த இடஒதுக்கீடு முறை 1947 ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது. நீதிக் கட்சி ஆட்சிக் காலத்தில், தமிழகத்தைச் சேர்ந்த பி. சுப்பராயன் கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் முதல்வராகவும், பி.டி. ராஜன் உள்ளாட்சி மற்றும் பொதுப் பணிகள் துறை அமைச்சராகவும், கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் முதல்வராகவும் பணியாற்றி இருக்கிறார்கள்.
இடஒதுக்கீட்டுக் கொள்கையை தமிழகத்தில் வித்திட்டதில் பி. சுப்பராயன் மற்றும் பி.டி. ராஜன் ஆகியோருக்கு முக்கியப் பங்கு உண்டு. எனவே, தமிழகத்தில் சமூக நீதிக்கு அடித்தளமிட்ட நீதிக் கட்சியைச் சேர்ந்த பி. சுப்பராயன் மற்றும் பி.டி. ராஜன் ஆகிய இருவரையும் கவுரவிக்கும் வகையில், அவர்களுக்கு மணிமண்டபங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வரை கேட்டுக் கொள்கிறேன்".
இவ்வாறு ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
35 mins ago
இந்தியா
39 mins ago
இந்தியா
48 mins ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
உலகம்
2 hours ago
வணிகம்
2 hours ago
சினிமா
3 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago