முதுபெரும் இடதுசாரி தலைவர் என்.சங்கரய்யாவுக்கு 'தகைசால் தமிழர் விருது' - தமிழக அரசு அறிவிப்பு

By செய்திப்பிரிவு

தமிழக அரசால் புதிதாக அறிவிக்கப்பட்டிருந்த 'தகைசால் தமிழர்' விருது முதுபெரும் இடதுசாரி தலைவர் என்.சங்கரய்யாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்துக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், 'தகைசால் தமிழர்' என்ற பெயரில் புதிய விருதை உருவாக்கி, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (ஜூலை 27) உத்தரவிட்டிருந்தார்.

இது தொடர்பாக, நேற்று தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில், "தமிழகத்துக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் முகத்தான், 'தகைசால் தமிழர்' என்ற பெயரில் புதிய விருதை உருவாக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.

மேற்படி விருதுக்கான விருதாளரைத் தேர்வு செய்யும் பொருட்டு, முதல்வர் தலைமையில், தொழில் துறை, தமிழ் ஆட்சிமொழி மற்றும் தமிழ்ப் பண்பாட்டுத்துறை அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளரை உள்ளடக்கிய ஒரு குழுவை அமைக்கவும் ஆணையிட்டுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்படும் 'தகைசால் தமிழர்' விருது பெறும் விருதாளருக்குப் பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், சுதந்திரதின விழாவின்போது, முதல்வரால் வழங்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், முதல் 'தகைசால் தமிழர்' விருதுக்கு முதுபெரும் இடதுசாரி தலைவரும் சமீபத்தில் 100-வது பிறந்த நாளைக் கொண்டாடியவருமான என்.சங்கரய்யா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (ஜூலை 28) வெளியிட்ட உத்தரவு:

"தமிழகத்துக்கும், தமிழினத்தின் வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களைப் பெருமைப்படுத்தும் வகையில், 'தகைசால் தமிழர்' என்ற பெயரில் புதிய விருதை உருவாக்கவும், இந்த விருதுக்கான விருதாளரைத் தேர்வு செய்திட ஒரு குழுவை அமைத்திடவும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே ஆணையிட்டிருந்தார்.

இவ்விருதுக்கான விருதாளரைத் தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்ட குழுவின் கலந்தாலோசனைக் கூட்டம் சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக முதல்வர் தலைமையில் நடைபெற்றது. அக்கூட்டத்தில், இளம் வயதிலேயே பொது வாழ்க்கையில் ஈடுபட்டு, மாணவத் தலைவராகவும், சுதந்திரப் போராளியாகவும், சட்டப்பேரவை உறுப்பினராகவும் அரும்பணியாற்றியதுடன், தமிழகத்துக்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றி, சமீபத்தில் 100 வயதை அடைந்த தமிழர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என்.சங்கரய்யாவைப் பெருமைப்படுத்தும் வகையில், இவ்வாண்டுக்கான 'தகைசால் தமிழர்' விருதுக்கு அவரது பெயர் பரிசீலிக்கப்பட்டு, அவருக்கு இவ்விருதினை வழங்க முடிவு செய்யப்பட்டது.

'தகைசால் தமிழர்' விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட என்.சங்கரய்யாவுக்கு, பத்து லட்சம் ரூபாய்க்கான காசோலையும், பாராட்டுச் சான்றிதழும், வருகிற ஆகஸ்ட் திங்கள் 15ஆம் நாள் நடைபெறும் சுதந்திர தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலினால் வழங்கப்படும்".

இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

55 mins ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்