புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே பொற்பனைக்கோட்டை பகுதியில் அகழாய்வு செய்வதற்கான இடங்களை நவீன தொழில்நுட்பக் கருவி மூலம் இன்று (ஜூலை 25) தேர்வு செய்யும் பணி நடைபெற்றது.
சங்ககால தொன்மை மிக்க இடமான பொற்பனைக்கோட்டையில் கோட்டை, கொத்தளங்கள், அகழிகள் உள்ளன. கோட்டைச் சுவரில் 4 இடங்களில் வாசல்கள், கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், பல்வேறு இரும்பு உருக்கு ஆலைகள் செயல்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.
இவ்விடத்தை அரசு அகழாய்வு செய்ய வேண்டும் என, தொல்லியல் ஆய்வுக் கழகத்தினர் தொடர்ந்த வழக்கில், ஆய்வு செய்ய அனுமதி அளித்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளை சில மாதங்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், இவ்விடத்தை அகழாய்வு செய்வதற்கு அனுமதி கோரி அரசுக்கு தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் கோரிக்கை விடுத்திருந்தது. அதனடிப்படையில் இப்பல்கலைக்கழகத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து, அப்பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியர் இனியன் முன்னிலையில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் இருந்து நவீன தொழில்நுட்பக் குழுவினர் பொற்பனைக்கோட்டையில் பல்வேறு இடங்களில் ஜிபிஆர் எனும் கருவி மூலம் மின்காந்த அலையை மண்ணுக்குள் செலுத்தி சோதனை செய்தனர்.
இதில் இருந்து கிடைக்கும் தகவலின் அடிப்படையில் எந்தெந்த இடங்களில் அகழாய்வு செய்யலாம் என்பதை முடிவு செய்து, அதற்கான பணிகள் விரைவில் நடைபெறும் என அக்குழுவினர் தெரிவித்தனர்.
இப்பணியில் ஈடுபட்டிருந்த தொல்லியல் ஆய்வுக் கழக நிறுவனர் ஆ.மணிகண்டன் கூறுகையில், "மின்காந்த அலையை செலுத்தி சோதனை செய்ததில் ஒரு சில இடங்களில் மண்ணுக்குள் கட்டுமானங்கள் போன்று கட்டமைப்புகள் இருப்பதை காட்டுகிறது.
மேலும், மேற்பரப்பிலேயே பழமையான சில்லு ஓடுகள், பூனை காலடி போன்ற செங்கல்களும் கண்டறியப்பட்டன. அகழாய்வின்போது மிக முக்கியமான வரலாற்று சிறப்பு வாய்ந்த பொருட்கள் கிடைக்கும் எனக் கருதுகிறோம்" என்றார்.