கும்பகோணம் அருகே கீழே கிடந்த ரூ.20 ஆயிரத்தைக் கண்டெடுத்த மர வியாபாரி; வாட்ஸ்அப்பில் பகிர்ந்து உரியவரிடம் ஒப்படைத்தார்

By வி.சுந்தர்ராஜ்

கும்பகோணம் அருகே சாலையில் கேட்பாரற்றுக் கிடந்த பணத்தை வாட்ஸ்அப் மூலம் தகவல் பகிர்ந்து, உரியவரிடம் கொண்டு சேர்த்த மரவியாபாரியின் நேர்மையைப் பாராட்டி, போலீஸார் மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்துத் தெரிவித்தனர்.

கும்பகோணம் முருக்கங்குடியைச் சேர்ந்த மர வியாபாரியான ராமதாஸ் என்பவர் கடந்த 17-ம் தேதி இரவு சீனிவாசநல்லூர் பைபாஸ் சாலையில் நடந்து சென்றபோது ரூ.20,400 பணம் கத்தையாகக் கீழே கிடந்தது. அதை எடுத்த அவர், அங்கிருந்த பொதுமக்களிடம் விசாரித்துள்ளார்.

பின்னர் அப்பகுதியில் கேபிள் டிவி ஆப்பரேட்டராக உள்ள தனது நண்பர் பாஸ்கர் என்பவரிடம் பணம் சாலையில் கிடந்தது குறித்தும், அந்தப் பணத்தை எப்படியாவது உரியவரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து எவ்வளவு பணம், எந்த இடத்தில் கிடந்தது, பணத்தைப் பெற்றுகொள்ளத் தொடர்புகொள்ள வேண்டிய செல்போன் எண் ஆகியவற்றைப் பதிவு செய்து வாட்ஸ்ப் குழுக்களில் பதிவு செய்தார் பாஸ்கர்.

அதன்படி கும்பகோணம் சாக்கோட்டையைச் சேர்ந்த உப்பிலி என்பவர் அந்த செல்போன் எண்ணுக்குத் தொடர்பு கொண்டு, அது தன்னுடைய பணம் என்றும் கடந்த 17-ம் தேதி தொலைந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இன்று (19-ம்தேதி) நாச்சியார்கோவில் போலீஸ் நிலையத்துக்கு உப்பிலி வரவழைக்கப்பட்டு, அவரிடம் காவல் ஆய்வாளர் செல்வி பணம் தொலைந்தது எப்படி என விசாரித்தார். அப்போதுதான் சாக்கோட்டையில் உள்ள பேக்கரியில் இருந்து பால்கோவா மற்றும் இனிப்பு வகைகளை மொத்தமாக வாங்கி கும்பகோணம், பட்டீஸ்வரம், திருப்பனந்தாள், நாச்சியார்கோவில், சோழபுரம் பகுதிகளில் உள்ள சிறுசிறு கடைகளில் விற்பனை செய்துவிட்டு, வாரம் ஒருமுறை அந்தக் கடைகளுக்குச் சென்று பணத்தை வசூல் செய்துவருவதாகவும் தெரிவித்தார்.

அதன்படி கடந்த 17-ம் தேதி திருப்பனந்தாள் பகுதியில் வசூலை முடித்துக்கொண்டு வீட்டுக்கு சென்று வசூல் செய்து வைத்திருந்த பணப்பபையை பார்த்த போது அதில் இருந்த வசூல் பணம் ரூ.20,400 பணக்கட்டு காணாமல் போயிருந்தது.

வரும் வழியில் விழுந்திருக்கக்கூடும் என எண்ணி வாகனத்தை எடுத்துக்கொண்டு தான் வந்த பாதை முழுவதிலும் தேடிச்சென்றதாகவும், இரவு நீண்ட நேரம் தேடியும் பணம் கிடைக்காததால் விரக்தியுடன் வீட்டுக்கு திரும்பியதாகவும் தெரிவித்தார். பின்னர் தான் வசூல் செய்ததற்கான வரவு செலவு நோட்டுகளையும் போலீஸிடம் காண்பித்துள்ளார்.

இதையடுத்து தொலைந்தது அவரது பணம் என உறுதிசெய்த பிறகு அந்தப் பணத்தைக் கண்டெடுத்த மரவியாபாரி ராமதாஸ், வாட்ஸ் அப் மூலம் தகவல் பகிர்ந்த அவரது நண்பர் பாஸ்கர் ஆகியோர் மூலம் பணம் உப்பிலியிடம் ஒப்படைக்கப்பட்டது. பணத்தைப் பெற்றுக்கொண்ட உப்பிலி கண்ணீர் மல்க அவர்களுக்கு நன்றி கூறினார்.

பின்னர் சாலையில் கண்டெடுத்த பணத்தை நேர்மையாக உரியவரிடம் ஒப்படைத்த மரவியாபாரி ராமதாசுக்கு, ஆய்வாளர் செல்வி மற்றும் போலீஸார் சால்வை அணிவித்து மலர்க்கொத்து வழங்கிப் பாராட்டினர்.

இதுகுறித்து உப்பிலி கூறும்போது, ''நான் பால்கோவா விற்று வசூல் செய்த பணத்தை கடந்த 17-ம் தேதி கொண்டுவந்தபோது சீனிவாசநல்லூர் பைபாஸ் அருகே தொலைந்து விட்டது. நான் இரவு முழுவதும் தேடியும் பணம் கிடைக்கவில்லை. தற்போது நாச்சியார்கோவில் போலீஸ் நிலையத்தில் என்னுடைய பணத்தைத் திரும்ப ஒப்படைத்தனர்.

என்னுடைய பணத்தைக் கண்டெடுத்து கொடுத்த நபருக்கு எனது குடும்பத்தின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்'' எனக் கண்ணீர் மல்கக் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

தமிழகம்

16 mins ago

இந்தியா

10 mins ago

தமிழகம்

27 mins ago

வாழ்வியல்

18 mins ago

இந்தியா

32 mins ago

தமிழகம்

53 mins ago

சினிமா

49 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

மேலும்