ரூ.228 கோடி மதிப்பில் திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டுமானப் பணி: அமைச்சர்கள் நேரில் ஆய்வு

By ந. சரவணன்

திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் கட்டப்பட்டு வரும் புதிய ஆட்சியர் அலுவலக கட்டுமானப்பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி இன்று நேரில் ஆய்வு செய்தனர்.

நிர்வாக வசதிக்காக வேலூர் மாவட்டம் 3-ஆகப் பிரிக்கப்பட்டது. இதையடுத்து, கடந்த 2019-ம் ஆண்டு ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் தற்காலிகக் கட்டிடத்தில் இயங்கி வருகின்றன.

இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்ட வனத்துறைக்குச் சொந்தமான இடத்தில் புதிய ஆட்சியர் அலுவலகத்தை ரூ.109.71 கோடி மதிப்பில் கட்ட தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகள் கடந்த ஜனவரி 18-ம் தேதி தொடங்கி, நடந்து வருகின்றன. இப்பணிகளைத் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது, செய்தியாளர்களிடம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:

‘‘புதிதாகக் கட்டப்பட்டு வரும் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அரசு அலுவலகங்கள் இடம்பெறும் வகையில் கட்டிடம் வடிவமைக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம், தேர்தல் அலுவலகம், தபால் அலுவலகம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், மாவட்டக் கருவூலம், ஏடிஎம் வசதியுடன் கூடிய வங்கி, மக்கள் குறை தீர்கூட்ட அரங்கம் ஆகியவை இடம்பெறும்.

முதல் தளத்தில் மாவட்ட வழங்கல் அலுவலகம், ஆதிதிராவிடர் நல அலுவலகம், பிற்படுத்தப்பட்டோர் அலுவலகம், சிறப்புத் திட்ட அலுவலகம், மாவட்ட சமூக நல அலுவலர், எல்காட் மையம், முத்திரைத்தாள் அலுவலகம், கணக்கெடுப்பு உதவி இயக்குநர் அலுவலகம், கலந்தாய்வுக் கூடம், மைய பாதுகாப்பு அறை ஆகிய அலுவலங்கள் இடம் பெறும்.

2-ம் தளத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறை, மாவட்ட வருவாய் அலுவலர் அறை, ஆட்சியரின் நேர்முக உதவி (பொது), (கணக்கு), சிறு கூட்டரங்கம், நிலப்பிரிவு அலுவலகம் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன. 3-ம் தளத்தில் திட்ட இயக்குநர் அலுவலகம், ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகம், தமிழ் வளர்ச்சித் துறை, சிறு சேமிப்புத்துறை ஆகியவையும், 4-ம் தளத்தில் கூட்டுறவுச் சங்க இணை இயக்குநர், மாவட்ட பதிவுத்துறை, புள்ளியியல் உதவி இயக்குநர் அலுவலகம், கோட்ட சுற்றுச்சூழல் பொறியாளர், போதை தடுப்பு அலுவலகம், வீட்டு வசதி வாரியம், சார் பதிவாளர் உள்ளிட்ட அலுவலகங்கள் அமைக்கப்படும்.

5-ம் தளத்தில் மாவட்ட கிராமப்புற ஆரோக்கிய அலுவலகம், பொதுமேலாளர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்டக் கல்வி அலுவலகம் ஆகியவையும், 6-ம் தளத்தில் வேளாண்மைத் துறை, பட்டு வளர்ச்சி, தோட்டக்கலை அலுவலங்களும், 7-ம் தளத்தில் குழந்தை வளர்ச்சித்துறை, மாவட்டத் தொழில் மையம், அருங்காட்சியம், கூட்ட அரங்கம் ஆகியவை அமைய உள்ளது.

இதுதவிர 200 பேர் அமரும் வகையில் பெரிய கூட்டரங்கம், 300 இருக்கைகள் கொண்ட குறை தீர் கூட்ட அரங்கம், 3 சிறிய கூட்டரங்கள், கழிப்பறை, செயற்கை நீருற்றுடன் கூடிய பூங்கா, கட்டிடத்தைச் சுற்றிலும் சாலை வசதி, நடைபாதை, மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்தளம், மழைநீர்வடிகால் அமைப்பு, அலங்கார மின்விளக்குகள், குடிநீர் வசதி, முகப்பு அலங்கார வளைவு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இந்த புதிய கட்டிடத்தில் கொண்டு வரப்பட உள்ளன. கட்டுமானப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இப்பணிகள் அனைத்தையும் அடுத்த ஆண்டு ஜூலை 17-ம் தேதிக்குள் முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் 13.40 ஏக்கர் பரப்பில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.118.40 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இக்கட்டிடம் மொத்தம் 4 தளத்தைக் கொண்டது. இங்கு வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித்தறை என மொத்தம் 25 அரசு துறைகள் புதிய ஆட்சியர் அலுவலகக் கட்டிடத்தில் செயல்பட உள்ளது.

இதுதவிர மக்கள் குறை தீர் கூட்ட அரங்கம், அரசு அலுவலர்களுக்கான கூட்டரங்கம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மாற்றுத்திறனாளிகள் பயன்பாட்டுக்காக சாய்தளம், புல்வெளி, பூங்கா, கட்டிடத்தை சுற்றிலும் நடைபாதை, முகப்பில் அலங்கார வளைவு ஆகியவை அமைக்கப்பட உள்ளன. இப்பணிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 27-ம் தேதிக்குள் முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. 2 ஆட்சியர் அலுவலகக் கட்டுமானப் பணிகளில் ஏறத்தாழ 900 பேர் ஈடுபட்டு வருகின்றனர்.’’

இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கதிர்ஆனந்த் (வேலூர்), சி.என். அண்ணாதுரை, எம்எல்ஏக்கள் நல்லதம்பி (திருப்பத்தூர்), வில்வநாதன் (ஆம்பூர்), தேவராஜ் (ஜோலார்பேட்டை), பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சங்கரலிங்கம், உதவி செயற் பொறியாளர் பிரபாகர் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

11 hours ago

க்ரைம்

11 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்