சிவகளை அகழாய்வில் கிடைத்த எலும்புகளை மரபணு சோதனைக்கு அனுப்பும் பணி தொடக்கம்

By ரெ.ஜாய்சன்

தூத்துக்குடி மாவட்டம் சிவகளை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளை திறந்து, அவைகளில் உள்ள எலும்புகளை மரபணு ஆய்வுக்கு அனுப்பும் பணி இன்று தொடங்கியது. மதுரை காமராசர் பல்கலைக்கழக ஆய்வுக் குழுவினர் வந்து எலும்புகளை பரிசோதனைக்காக சேகரித்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் கடந்த ஆண்டு தமிழக தொல்லியல் துறை சார்பில் முதல் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்றன. அப்போது ஏராளமான முதுமக்கள் தாழிகளும், 500-க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்களும் கிடைத்தன. அவைகள் பல்வேறு ஆய்வு நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டு ஆய்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் ஆதிச்சநல்லூர் மற்றும் சிவகளையில் 2-ம் கட்ட அகழாய்வு பணியும், கொற்கையில் முதல் கட்ட அகழாய்வு பணியும் தமிழக தொல்லியல் துறை சார்பில் கடந்த பிப்ரவரி மாதம் 26-ம் தேதி தொடங்கியது. இதில் சிவகளையில் நடைபெறும் அகழாய்வு பணியில் இதுவரை 40 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதில் ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டன. மேலும், சிவகளையில் பழங்கால கல்வட்டங்கள் உள்ளிட்ட பொருட்களும் கிடைத்துள்ளன.

இந்நிலையில் சிவகளை அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள முதுமக்கள் தாழிகளை திறந்து அவைகளில் உள்ள எலும்புகளை ஆய்வுக்கு அனுப்பும் பணி இன்று தொடங்கியது. இதற்காக மதுரை காமராசர் பல்கலைக்கழக மரபியல் துறை பேராசிரியர் குமரேசன் தலைமையிலான குழுவினர் இன்று சிவகளை வந்தனர்.

ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழிகள் கிடைத்த இடத்தில் உள்ள முதுமக்கள் தாழிகளை தொல்லியல் துறை அலுவலர்கள் முன்னிலையில் திறந்து, அவைகளின் உள்ளே இருந்த எலும்புகள் மற்றும் மண்ணை பரிசோதனைக்காக சேகரித்தனர். இது குறித்து பேராசிரியர் குமரேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தற்போது சிவகளை, ஆதிச்சநல்லூர், கொற்கை, கீழடி, கொந்தகை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தமிழக அரசு சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. மதுரை காமராசர் பல்கலைக்கழகம் இந்த ஆய்வுககான மரபணு சோதனைகளை செய்ய உதவி வருகிறது. மரபணு பரிசோதனைக்காக ரூ.3 கோடி மதிப்பீட்டில் பல்கலைக்கழகத்தில் ஆய்வகம் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்த பணி மூன்று மாத காலத்தில் நிறைவடையும். அதன்பின்னர் மரபணு சோதனை இன்னும் மிகச்சிறப்பாக நடைபெறும்.

சிவகளையில் முதல் கட்ட அகழாய்வு பணியில் கிடைத்த பொருட்களையும், தற்போது இரண்டாம் கட்டமாக நடைபெற்று வரும் அகழாய்வு பணியில் கிடைத்த பொருட்களையும் இந்த ஆய்வுக்கூடத்தில் வைத்து ஆய்வு செய்வோம். இந்த பணிகள் சுமார் 6 மாத காலத்தில் நிறைவடையும். இந்த ஆய்வு முடிவின் போது தமிழரின் நாகரீகம், பண்பாடு உலக அளவில் மிக பிரமாதமாக பேசப்படும் என்றார் அவர். அப்போது அகழாய்வு கள இயக்குநர் பிராபகரன், கொற்கை அகழாய்வு கள இயக்குநர் தங்கதுரை, சிவகளை வரலாற்று ஆசிரியர் மாணிக்கம் மற்றும் தொல்லியல் ஆர்வலர்கள் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

11 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்