முதல்வர் அறிவிப்பையும் மீறி இறப்புச் சான்றிதழுக்கு தாமதக் கட்டணம் வசூலிக்கும் விருத்தாசலம் நகராட்சி

By ந.முருகவேல்

தாமதமாக பதிவிட்டு இறப்புச் சான்றிதழ் கோரினால், அதற்கு உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் வசூலிக்கப்படும் தாமதக் கட்டணத்தை ரத்து செய்து, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த வாரம் அறிவித்திருந்த நிலையில், அதைப் பொருட்படுத்தாமல் விருத்தாசலம் நகராட்சியில் இறப்புச் சான்றிதழுக்கு கட்டண வசூலில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாட்டின் வளர்ச்சி திட்டங்களை வகுக்க பிறப்பு, இறப்பு தொடர்பான புள்ளி விவரங்கள் அவசியம். அதற்காக 1969-ம் ஆண்டு பிறப்பு, இறப்புப் பதிவு சட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது. அதன்படி, 2000-ம் ஆண்டு தமிழ்நாடு பிறப்பு, இறப்புப் பதிவு விதிகள் உருவாக்கப்பட்டது. அதில், கடந்த 2017-ம் ஆண்டு சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அதன்படி, 21 நாட்களுக்குள் பிறப்பு, இறப்பு பதிவு செய்தால் கட்டணம் கிடையாது. 22-வது நாள்முதல் 30 நாட்களுக்குள் பதிவு செய்ய தாமதக் கட்டணம் ரூ.2-லிருந்து ரூ.100 ஆகவும், 30 நாட்களுக்கு மேல் ஓராண்டுக்குள் பதிய ரூ.5-லிருந்து ரூ.200 ஆகவும், ஓராண்டுக்கு மேல் பதிய ரூ.10-லிருந்து ரூ.500 ஆகவும் கட்டணம் உயர்த்தப்பட்டது.

மேலும், பிறப்பு, இறப்பு சான்று பெறுவதற்கான கட்டணம் ரூ.5-லிருந்து ரூ.200 ஆகவும், இலவசமாக வழங்கப்பட்ட கூடுதல் நகலுக்கு தலா ரூ.200 கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டது.

இந்த நிலையில், கரோனா தொற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் தற்போதைய சூழலில், தாமத இறப்புப் பதிவுக்கான கட்டணத்திலிருந்து பொதுக்களுக்கு விலக்கு அளிப்பதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 11-ம் தேதி அறிவித்தார். அந்த வகையில், அனைத்து மாவட்டங்களிலிலும் தாமத இறப்புப் பதிவுக்கான கட்டணம் வசூல் நிறுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே, கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தில் தாமத இறப்புப் பதிவுக்கு தொடர்ந்து கட்டணம் வசூலிக்கப்படுவதாக, பயனாளிகள் தெரிவித்ததோடு, அரசு நிர்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும் கூடுதலாக ரூ.500 வரை வசூலிப்பதாக புகார் எழுந்தது.

இதையடுத்து, விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்தில் பொதுசுகாதாரத்துறை ஆய்வாளரிடம் கேட்டபோது, அரசு சார்பில் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கட்டுள்ளதே தவிர, அரசாணை மற்றும் வழிகாட்டுதல்கள் இல்லை, எனவே கட்டணம் வசூலித்து வருவதாகத் தெரிவித்தனர்.

இதையடுத்து, கடலூர் மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சிவக்குமாரிடம் கேட்டபோது, தற்போது எந்த அலுவலகத்திலும் தாமத இறப்புப் பதிவுக்கு கட்டணம் வசூலிக்கப்படமாட்டாது, அவ்வாறு வசூலித்தால், சம்மந்தப்பட்ட நபர் நகராட்சி ஆணையரிடமோ அல்லது கோட்டாட்சியரிடமோ புகார் அளிக்கலாம் எனத் தெரிவித்தார்.

மேலும், கிராமப்புறங்களில் ஓராண்டுக்கு பின் செய்யப்படும் இறப்பு பதிவு கட்டணத்தை அரசு ரத்து செய்திருந்தாலும், இறப்பு சான்று பெற பொதுமக்கள், தொடர்புடைய வருவாய் கோட்டாட்சியரை அணுக வேண்டும் எனவும் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

4 hours ago

சினிமா

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

11 hours ago

சினிமா

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்