அமைச்சர்கள் தலைமையில் 3 எம்பிக்கள், 16 எம்எல்ஏக்கள், சென்னை மாநகராட்சி அலுவலர்கள் ஆலோசனை 

By செய்திப்பிரிவு

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கோவிட் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

இது குறித்து சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பு வருமாறு:

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கோவிட் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவைஉறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பி.கே.சேகர்பாபு தலைமையில் நேற்று ரிப்பன் மாளிகையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கோவிட் நோய் தடுப்பு கண்காணிப்பு பணிகளான வீடு தேடி சென்று பரிசோதனை மேற்கொள்ளும் பணிகள், காய்ச்சல் முகாம்கள், பரிசோதனை முடிவுகளை ஒற்றை சாளர முறையில் தெரிவித்தல், நோயாளிகளுக்கு தேவையான சிறப்பு கார் ஆம்புலன்ஸ் சேவைகள், கோவிட் சிகிச்சை மையம் மற்றும் ஆக்ஸிஜன் படுக்கைகளை ஏற்படுத்துதல், தடுப்பூசி முகாம்களை அமைத்து பொதுமக்களுக்கு விலையில்லாமல் தடுப்பூசி வழங்குதல், தனிமைபடுத்தப்பட்டவர்களை கண்காணித்து மருத்துவ ஆலோசனைகள் வழங்க மண்டலம்தோறும் கட்டுப்பாட்டு அறைகள், ஊரடங்கை அமல்படுத்த மண்டலம்தோறும் ஊரடங்கு அமலாக்கக்குழு என பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மாநகராட்சியின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழக முதலவர் ஆலோசனையின்படி மேற்கொள்ளப்பட்டுவரும் கோவிட் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை பிரதமர் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற கூட்டத்தில் பாராட்டினார். குறிப்பாக பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் ஏற்படுத்தப்பட்ட கார் ஆம்புலன்ஸ் சேவை பல்வேறு தரப்பினரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுவரை இந்த கார் ஆம்புலன்ஸ் சேவைகளை பயன்படுத்தி 12,293 நபர்கள் பயனடைந்துள்ளனர்.

இதேபோன்று மருத்துவர்களின் ஆலோசனையின்படி வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டுள்ள நபர்களுக்கு மருத்துவ மற்றும் மனநல ஆலோசனைகளை வழங்க பயிற்சி மருத்துவர்களை கொண்டு மண்டல கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த பயிற்சி மருத்துவர்கள் மூலமாக வழங்கப்படும் ஆலோசனைகளால் தனிமைபடுத்தப்பட்டுள்ள நபர்களின் மனஅழுத்தம் வெகுவாக குறைக்கப்படுகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய 1,283 படுக்கைகள் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 773 படுக்கைகள் ஆக்ஸிஜன் இணைப்புடன் தயார் நிலையில் உள்ளன. சென்னை வர்த்தக மையத்தில் ஏற்படுத்தப்பட்டு வரும் மேலும் கூடுதலான 500 ஆக்ஸிஜன் படுக்கை வசதியினை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்” என மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், அமைச்சர் சேகர்பாபு பேசியதாவது:

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் கோவிட் தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் உத்தரவின்படி ஆக்ஸிஜன் படுக்கைகளின் எண்ணிக்கை பல்வேறு இடங்களில் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. நேற்றைய தினம் முதல்வர் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆக்ஸிஜன் படுக்கை வசதியுடன் கூடிய கோவிட் சிகிச்சை மையங்களை துவக்கி வைத்து பார்வையிட்டார்.

மாநகராட்சி அலுவலர்கள் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளிலும் களஆய்வு மேற்கொண்டு தேவையான இடங்களில் கோவிட் சிகிச்சை மையம், முதற்கட்ட உடற்பரிசோதனை மையம் (Screening Center), காய்ச்சல் முகாம்கள் மற்றும் RTPCR பரிசோதனை மையங்களை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். முதற்கட்ட உடற்பரிசோதனை மையங்களில் (Screening Center) தேவையான பரிசோதனை உபகரணங்கள் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.

மே 24 முதல் தளர்வுகளின்றி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் வனிகர் சங்கங்களுடன் இணைந்து மாநகராட்சியின் ஏற்பாட்டில் சுமார் 3,000-க்கும் மேற்பட்ட நடமாடும் வாகனங்களின் மூலம் காய்கனி விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாநகராட்சியின் 200 வார்டுகளிலும் நாள்தோறும் நடமாடும் வாகனங்களில் காய்கனிகள் கிடைப்பதை சம்பந்தப்பட்ட மண்டல வருவாய்துறை அலுவலர்கள் உறுதிசெய்ய வேண்டும்.

மக்கள் தொகை அடர்த்தியாக உள்ள பகுதிகளில் தேவைக்கேற்ப நடமாடும் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்” என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

அமைச்சர்களிடம் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ளடங்கிய மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 22 சட்டப்பேரவை உறுப்பினர்களின் சார்பில் ஒருவர் 20 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் (Oxygen Concentrator) என மொத்தம் 500 ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை பெருநகர சென்னை மாநகராட்சிக்கு வழங்கலாம் என ஆலோசனை தெரிவித்தார்.

கூட்டத்தில் கலந்துகொண்ட அனைத்து நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள் இந்த ஆலோசனையை ஏற்றுக்கொண்டு மாநகராட்சிக்கு ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்க ஆவண செய்வதாக உறுதியளித்தனர். நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் இந்த முன்னெடுப்பிற்கு மாநகராட்சியின் சார்பில் ஆணையர் நன்றி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் சென்னை மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப் சிங் பேடி, சிறப்பு ஒருங்கிணைப்பு அலுவலர் சித்திக், மக்களவை உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கப்பாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உதயநிதி ஸ்டாலின், எஸ்.சுதர்சனம், எம்.கே.மோகன், தாயகம் கவி, ஆர்.டி.சேகர், பரந்தாமன், கே.கணபதி, த.வேலு, நா.எழிலன், . ஜான் எபினேசர், வெற்றி அழகன், மூர்த்தி, ஜெ.கருணாநிதி,ஜோசப் சாமுவேல், கே.பி.சங்கர், பிரபாகர ராஜா, ஜே.எம்.எச்.அசன் மௌலானா, இணை ஆணையாளர்கள் சங்கர்லால் குமாவாத்(கல்வி), ஸ்ரீதர்(மத்திய வட்டாரம்), துணை ஆணையாளர்கள் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஷ், (சுகாதாரம்), ஜெ.மேகநாத ரெட்டி, (பணிகள்), விஷு மகாஜன், (வருவாய் (ம) நிதி) , ஆகாஷ் (வடக்கு), ராஜ கோபால சுங்கரா (தெற்கு), மண்டல அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்".

இவ்வாறு சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

1 hour ago

வலைஞர் பக்கம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்